கரூர் பணி ஆணை ரத்து விவகாரம்: `நீதிமன்ற உத்தரவு நகல் வந்தவுடன்...'- அமைச்சர் சி....
Anbe Diana: "ஆப்ஷன்கள் இருந்தும் நான்தான் பண்ணுவேன்னு பிடிவாதமா இருந்தேன்!" - பாரி இளவழகன்
பாரி இளவழகன் எழுதி, இயக்கியிருக்கும் 'அன்பே டயானா' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் நடிகை ரோஜா, ரம்யா ரங்கநாதன், சேத்தன், பரிதாபங்கள் கோபி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நேற்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு படத்திற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு குறித்து நெகிழ்ச்சியாகப் பேசினர்.

இந்த நிகழ்வில் இயக்குநர் பாரி இளவழகன் பேசுகையில், "இந்த மேடையில் நிற்பது எனக்கு மிகவும் உணர்வுப்பூர்வமான தருணம். வாழ்க்கையில் எல்லோரிடமும் எல்லாம் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், நன்றியுணர்வு மட்டும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.
இன்று நான் இந்த மேடையில் நிற்பதற்கு காரணம் நான் மட்டுமல்ல. இந்த அரங்கில் இருப்பவர்களும், இங்கு இல்லாமல் வெளியே இருந்து இந்தப் படத்திற்காக உழைத்த ஆயிரக்கணக்கானவர்களும்தான். இந்த மேடையில் நடிகர் விஜய் சேதுபதி சாருக்கு ஒரு சிறப்பு நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறேன். 'அன்பே டயானா' கதையை அவரிடம் பகிர்ந்தபோது, ‘உங்களுக்கு மில்லியன் டாலர் ஸ்டுடியோஸுடன் இந்தப் படம் சரியான கூட்டணியாக இருக்கும்’ என்று கூறி, தயாரிப்பாளர் யுவராஜ் கணேஷிடமும் என்னைப் பற்றி நல்லவிதமாகப் பேசியிருந்தார். அந்த நம்பிக்கைக்கும், ஊக்கத்திற்கும் விஜய் சேதுபதி சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
தயாரிப்பாளர் யுவராஜ் கணேஷுக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் அது போதாது. இந்தப் படத்திற்கு நிறைய ஆப்ஷன்கள் இருந்தும், இதில் நான்தான் நடிப்பேன் என பிடிவாதமாக இருந்தேன். அதற்கும் அவர் சம்மதம் தெரிவித்தார்.
'அன்பே டயானா' படத்தில் நான் எழுதிய ஒரு வசனத்தையோ, ஒரு காட்சியையோ மாற்ற வேண்டும் என்று அவர் ஒருபோதும் கூறவில்லை. என் எழுத்தையும், என் பார்வையையும் முழுமையாக நம்பி எனக்கு முழு சுதந்திரம் அளித்தார். அந்த நம்பிக்கைக்காக அவருக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டிருப்பேன்.
கோபி, 'பெங்களூரு பாபா' கதாபாத்திரத்தில் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று நான் உறுதியாக நம்பினேன். இன்று ரசிகர்கள் அவரைக் கொண்டாடுவதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ரோஜா மேம் இந்தப் படத்தில் நடிக்கச் சம்மதித்ததே எங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது.
ஒரு சிறிய படக்குழுவிற்கு அவர் அளித்த ஆதரவு எங்களுக்குப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. ரம்யா ரங்கநாதன் கடைசி நேரத்தில் இந்தப் படத்தில் இணைந்திருந்தாலும், அவர் உழைப்பு அளவிட முடியாதது. பலரும் என்னிடம், ‘ஏன் அன்பே மேஜிக் என்று தலைப்பு வைக்காமல் அன்பே டயானா என்று வைத்தீர்கள்?’ என்று கேட்டார்கள்.
‘மேஜிக்’ என்ற வார்த்தை படத்தின் உள்ளே மட்டுமே சிறப்பாக ஒலிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதைத் தலைப்பாக வைக்கவில்லை. கதை எழுதும்போதே அந்த வார்த்தை ரசிகர்களிடம் பெரிய அளவில் பேசப்படும் என்று நான் நம்பினேன். இன்று ரசிகர்கள் அந்தக் கதாபாத்திரத்தை ‘மேஜிக்’ என்றே கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அதற்கு ரசிகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்" எனப் பேசினார்.


















