TNPSC: 'தேர்வுக்கு ஹால் ஒதுக்க எக்செல் ஷீட் போதுமே?' - டிஎன்பிஎஸ்சி தேர்வும் அரச...
Assam: முஸ்லிம் பிரமுகரை முதல்வர் சுட்டுக்கொல்வது போன்ற வீடியோ; கடும் கண்டனத்தால் நீக்கிய பாஜக
அஸ்ஸாம் மாநிலத்திற்கு இந்த ஆண்டு மத்தியில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலையொட்டி மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா எதிர்க்கட்சித் தலைவர்களைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
மாநில காங்கிரஸ் தலைவர் கெளரவ் கோகாயைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். அவரை பாகிஸ்தான் ஏஜெண்ட் என்று கூறி வருகிறார். புதிதாக ஹிமந்த பிஸ்வாவின் வீடியோ ஒன்றை பா.ஜ.க சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தது. அந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
அதில் ஹிமந்த பிஸ்வா மாநில எதிர்க்கட்சித் தலைவர் கெளரவ் கோகாய் மற்றும் ஒரு முஸ்லிம் பிரமுகரின் போட்டோவில் தொப்பியைக் குறிபார்த்து துப்பாக்கியால் சுடுவது போன்று அந்த வீடியோ இடம் பெற்று இருந்தது.
அதோடு அதில் மன்னிப்பே கிடையாது என்றும், மிகவும் அருகில் இருந்து சுடப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த வீடியோவிற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் செயலாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், ''இது இனப்படுகொலைக்கான அழைப்பைத் தவிர வேறொன்றுமில்லை.

இந்தப் பாசிச ஆட்சி பல தசாப்தங்களாக மனதில் வளர்த்து வரும் ஒரு கனவு இது. இது ட்ரோல் என்று புறக்கணிக்கப்பட வேண்டிய ஒரு வீடியோ கிடையாது.
இது மிகவும் மேல் மட்டத்திலிருந்து பரப்பப்படும் விஷம். இதற்கான விளைவுகளைச் சந்தித்தே ஆக வேண்டும். இதன் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ள பதிவில், ''அசாம் மாநில பா.ஜ.க சிறுபான்மையினரை இலக்கு வைத்து, மிக அருகில் இருந்து சுட்டுக்கொலை செய்வது போன்ற ஒரு காணொளியைப் பதிவிட்டுள்ளது. இது மிகவும் அருவருப்பானதும், அதிர்ச்சியூட்டுவதும் ஆகும். இதை ஏதோ ஒரு சாதாரண சமூக ஊடகக் கிண்டல் பதிவு என்று புறக்கணித்துவிட முடியாது.
இது ஒரு பெரும் கலவரத்திற்கும் இனப்படுகொலைக்கும் அழைப்பு விடுப்பதற்குச் சமமாகும். பல தசாப்தங்களாக இந்த வெறுப்பை வளர்த்து, கடந்த 11 ஆண்டுகளில் அதை நடைமுறைப்படுத்த முயன்ற இந்தப் பாசிச ஆட்சியின் உண்மையான முகத்தையே இது பிரதிபலிக்கிறது.
சமூகத்தில் நல்லிணக்கத்தைக் குலைத்து விஷத்தைப் பரப்பும் இந்தச் செயலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்," என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் அந்த வீடியோவிற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வீடியோ சர்ச்சையானதைத் தொடர்ந்து பா.ஜ.க அந்த வீடியோவை சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து நீக்கி இருக்கிறது.

















