Aval Awards 2024: "நாம் போராடி பெற்ற சட்டங்களை ரத்து செய்துவிட்டனர்" - கீதா ராமக...
Aval Awards 2024: "நாம் போராடி பெற்ற சட்டங்களை ரத்து செய்துவிட்டனர்" - கீதா ராமகிருஷ்ணன் வேதனை!
விகடனின் அவள் விருதுகள் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் அவள் ஆளுமை விருதுபெற்றார் கீதா ராமகிருஷ்ணன்.
யார் இந்த கீதா ராமகிருஷ்ணன்?
அரசால் மறக்கப்படுகிற, ஆதிக்கத்தால் அடக்கப்படுகிற அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தீப்பந்த வழிகாட்டி, கீதா ராமகிருஷ்ணன். கட்டுமானத் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான முழக்கங்களை தன் சகாக்களுடன் இணைந்து மத்திய, மாநில அரசுகளின் செவிப்பறைகள் அதிர எழுப்பியவர்.
தமிழ்நாட்டில் 1970-களின் பிற்பகுதியில் இவர்கள் முன்னெடுத்த போராட்டங்களால், மாநில அளவிலான கட்டுமானத் தொழிலாளர்கள் வாரியம் ஏற்படுத்தப்பட்டது. அது, 1996-ல் தேசிய அளவிலான சட்டம் இயற்றப்படக் காரணமாக அமைந்தது. இவற்றுக்கெல்லாம் கருவியாக முன்னின்று போராடியவர், கீதா ராமகிருஷ்ணன்.
அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் தொழிலாளர் நல வாரியங்கள் உருவாக வித்திட்டார். குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, கொத்தடிமைத் தொழிலாளர் விடுதலை, குடிசைப் பகுதி மக்களுக்கான பட்டா உரிமை, பெண்கள் பாதுகாப்பு என... இவர்களது இருட்டையெல்லாம் எரிக்க நாட்டின் எந்த மூலையிலும் தினம் தினம் உதித்துக் கொண்டிருக்கும் நெருப்புப் புயல்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, சமூக செயற்பாட்டாளர்கள் மன்மோகி, கீதா இழங்கோவன், அருண் மொழி ஆகியோர் கைகளால் விருதுபெற்றார் கீதா ராமகிருஷ்ணன்.

விருதுபெற்ற கீதா ராமகிருஷ்ணன், "விருது பெறும் இந்த வேளையில் நாங்கள் எல்லோரும் கடுமையான வருத்தத்தில் இருக்கிறோம். நேற்றிலிருந்து ஒன்றிய அரசு தொகுப்பு சட்டங்களைக் கொண்டுவந்திருக்கின்றனர். ஆனால் இதன் மூலம் நாம் போராடி பெற்ற சட்டங்களை ரத்து செய்துள்ளனர். 44 சட்டங்களை ரத்து செய்துள்ளனர். இதில் நாம் போராடி பெற்ற கட்டட தொழிலாளர் சட்டமும் ஒன்று. கட்டட தொழிலாளர் சட்டத்தின் மூலம்தான் எல்லா மாநிலத்திலும் தொழிலாளர் நல வாரியங்களை அமைக்க முடிந்தது.
தொழிலாளர் பாதுகாப்பு குறித்த விதிமுறைகளை ரத்து செய்துள்ளனர். முத்தரப்பு மாநாட்டைக் கூட்டாமல் இவர்களாக சட்டத்தை அமுல்படுத்தியிருப்பது கேள்விகளை எழுப்புகிறது. தமிழ்நாட்டில்தான் தொழிலாளர்களுக்காக 20க்கும் மேலான நலவாரியங்கள் இருக்கிறது. இவற்றின் எதிர்காலம் இப்போது கேள்விக்குறியாக உள்ளது. இதை எதிர்த்து போராட வேண்டிய சூழலில் நாட்டிலுள்ள அனைத்து தொழிலாளர்களும் உள்ளனர்."

















