`யாரிடமும் கையேந்தக் கூடாதுங்கிற வைராக்கியம்' - புன்னகையால் வறுமையை வெல்லும் சம்...
Booker Prize 2026: இரு பெண்கள் இடையிலான காதலைப் பேசும் `தைவான் டிராவலாக்' (Taiwan Travelogue) நூல்!
இலக்கிய உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்று புக்கர். 2026-ம் ஆண்டிற்கான `சர்வதேச புக்கர் பரிசு' தைவானிய எழுத்தாளர் யாங் ஷுவாங்-சி (Yang Shuāng-zǐ) எழுதிய `தைவான் டிராவலாக்' (Taiwan Travelogue) நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நாவலை ஆங்கிலத்தில் மிகச் சிறப்பாக மொழிபெயர்த்த லின் கிங் (Lin King) என்பவரும் இப்பரிசினை நூலாசிரியருடன் பகிர்ந்து கொள்கிறார். மாண்டரின் சீன மொழியில் எழுதப்பட்டு, சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் புத்தகம் என்ற மாபெரும் வரலாற்றுச் சாதனையை இந்நூல் படைத்துள்ளது.

லண்டனில் உள்ள புகழ்பெற்ற `டேட் மாடர்ன்' (Tate Modern) கலைக்கூடத்தில் நடைபெற்ற கோலாகலமான விழாவில் இந்த விருது அறிவிக்கப்பட்டது. சர்வதேச புக்கர் பரிசின் விதிமுறைகளின்படி, வழங்கப்படும் 50,000 பவுண்டுகள் (சுமார் ரூ. 53 லட்சம்) பரிசுத்தொகையானது நூலாசிரியர் யாங் ஷுவாங்-சி மற்றும் மொழிபெயர்ப்பாளர் லின் கிங் ஆகிய இருவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும். உலகெங்கிலும் உள்ள சிறந்த 6 புத்தகங்கள் இறுதிப் பட்டியலில் போட்டியிட்ட நிலையில், நடுவர்களின் மனதை வென்று `தைவான் டிராவலாக்' முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
கதைக்களம்
1938-ம் ஆண்டு, தைவான் ஜப்பானியர்களின் காலனித்துவ ஆதிக்கத்தின் கீழ் இருந்த காலக்கட்டத்தை பின்னணியாகக் கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. இது ஒரு பழைய ஜப்பானிய பயணக் குறிப்பு போன்ற ஒரு சுவாரசியமான புனைவு வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

அயோயாமா சிசுகோ என்ற ஜப்பானிய இளம் பெண் எழுத்தாளர், ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் தைவானுக்குப் பயணம் மேற்கொள்கிறார். ஆதிக்க அரசியலில் ஆர்வம் இல்லாத அவர், தைவானின் உண்மையான கலாசாரத்தையும், அங்குள்ள பாரம்பர்ய உணவுகளையும் ருசிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார். அவருக்கு வழிகாட்டியாகவும் மொழிபெயர்ப்பாளராகவும் சிசுரு என்ற உள்ளூர் தைவானியப் பெண் நியமிக்கப்படுகிறார்.
இருவரும் தைவான் முழுவதும் ரயிலில் பயணம் செய்து, தைவானிய பாரம்பர்ய உணவுகளை ருசிக்கின்றனர். இந்தப் பயணத்தின் போது இருவருக்கும் இடையே ஓர் ஆழமான, இனிமையும் கசப்பும் கலந்த காதல் மலர்கிறது. ஆனால், ஓர் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த ஜப்பானியப் பெண்ணுக்கும், அடிமைப்பட்டுக் கிடக்கும் உள்ளூர் தைவானியப் பெண்ணுக்கும் இடையிலான காதலில், அதிகாரம், மொழி எத்தகைய சிக்கல்களை உருவாக்குகிறது என்பதை மிக அழகாகவும், உணர்வுபூர்வமாகவும் இந்த நூல் விவரிக்கிறது.

இந்த நாவலின் முக்கிய கருப்பொருளான உணவு, பயணம் குறித்து ஆராய்ச்சி செய்ததைப் பற்றி ஆசிரியர் கூறுகையில், "இந்த நாவலுக்கான ஆராய்ச்சி என் வாழ்க்கையில் இரண்டு பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. என் சேமிப்பு பணமெல்லாம் கரைந்து போனது, அதேசமயம் என் உடல் எடை பெருமளவு கூடியது!" என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாவல் 2020-ம் ஆண்டில் தைவானின் மிக உயரிய இலக்கிய விருதான `கோல்டன் ட்ரைபாட்' (Golden Tripod) விருதையும், 2024-ம் ஆண்டில் அமெரிக்காவின் தேசிய புத்தக விருதையும் வென்றுள்ளது.
நூலாசிரியர் யாங் ஷுவாங்-சி ஒரு நாவலாசிரியர் மட்டுமல்லாமல், மங்கா (Manga) எனப்படும் ஜப்பானியப் பாணி காமிக்ஸ், வீடியோ கேம்களுக்கான கதைகளை எழுதுபவர்.

உலகெங்கிலும் உள்ள வாசகர்கள் வெவ்வேறு மொழிகள், கலாசாரங்களைச் சேர்ந்த மொழிபெயர்ப்புப் புத்தகங்களை அதிகம் விரும்பிப் படிக்கத் தொடங்கியுள்ளனர் என்பதை இந்த வெற்றி உணர்த்துகிறது. மொழி, அதிகாரம், வரலாறு, மனித உறவுகளின் சிக்கல்களை உணர்வுபூர்வமாகப் பேசும் `தைவான் டிராவலாக்', நிச்சயம் உலக அளவில் அதிகம் விற்பனையாகும் புத்தகங்களின் பட்டியலில் இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை.



















