'It's over' - ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் - மீண்டும் போர் ...
Doctor Vikatan: எப்போதும் தொடரும் அசதியும் சோர்வும்... வைட்டமின் குறைபாடுதான் காரணமா?
Doctor Vikatan: எப்போதும் உடம்பில் தெம்பே இல்லாமல் சோர்வாகவே உணர்கிறேன். எவ்வளவு தூங்கினாலும் அசதி தீர்வதில்லை. இதற்கு என்ன வைட்டமின் குறைபாடு காரணமாக இருக்கும்?
பதில் சொல்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்பநல மருத்துவர் கே. பாஸ்கர்.

ஏதாவது ஒன்றின் குறைபாடு காரணமாகத்தான் சோர்வு ஏற்படுகிறது என்று நினைப்பது மனித இயல்பு. ஆனால், சோர்வுக்கான காரணங்கள் நூற்றுக்கும் மேற்பட்டவை. சுலபமாகப் புரிந்துகொள்ள குணப்படுத்தக்கூடிய காரணங்கள், குணப்படுத்த முடியாத அல்லது சமாளிக்கக்கூடிய காரணங்கள் என அதை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
குணப்படுத்தக்கூடிய காரணங்கள்: ரத்தச்சோகை, வைட்டமின் குறைபாடுகள், தைராய்டு பிரச்னைகள், தன்னைத்தானே தாக்கிக் கொள்ளும் நோய்கள் (autoimmune conditions), மூச்சுத்திணறல் நோய்க்குறி (sleep apnea syndrome ), நீரிழிவு நோய், கார்ட்டிசால் குறைபாடுகள், காசநோய் (TB) போன்ற தொற்றுகள் இன்னும் இப்படிப் பல. அடிப்படையான ரத்தப்பரிசோதனைகள் மூலம் பிரச்னை என்ன என்பதை நாம் கண்டறியலாம். பிரச்னைகள் கண்டறியப்பட்ட பிறகு சிகிச்சை அளித்தால் இரண்டு அல்லது நான்கு வாரங்களில் சோர்வு மறையத் தொடங்கும்.

குணப்படுத்த முடியாத அல்லது சமாளிக்கக் கூடிய காரணங்கள்:
நாள்பட்ட சோர்வு நோய்க்குறி (chronic fatigue syndrome), தீராத தசை வலி ( fibromyalgia), நுரையீரல் நோய், இதய நோய், கல்லீரல் நோய், சிறுநீரக செயலிழப்பு, குணப்படுத்த முடியாத புற்றுநோய் போன்றவை இதில் அடங்கும். ரத்தப் பரிசோதனைகள், எக்ஸ்ரே, ஸ்கேன் செய்தால் பிரச்னை என்ன என்று கண்டுபிடிக்கலாம். ஆனால், முதல் இரண்டு காரணங்களான நாள்பட்ட சோர்வு நோய்க்குறி மற்றும் தீராத தசை வலியில், எல்லா சோதனைகளும் சரியாகவே இருக்கும். இவர்கள் நிலைதான் பரிதாபம். இந்தியாவில் இது குறித்து அதிகமான ஆய்வுகள் நடத்தப்படவில்லை என்றாலும் சில ஆய்வுகள் நூற்றுக்கு 5 முதல் 14 சதவிகிதம் வரை நாள்பட்ட சோர்வு நோய்க்குறி மக்களை பாதிக்கிறது என்று சொல்கின்றன.
அதிலும் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். எல்லாப் பரிசோதனைகளும் சரியாக இருப்பதால் இவர்களை நண்பர்களும் குடும்ப உறுப்பினர்களும் சோம்பேறிகள் என்றோ, நடிக்கிறார்கள் என்றோ நினைப்பது இயல்பு. ஆனால், அது அப்படியல்ல. மருத்துவர்கள் கூட ஒரு காலத்தில், இதை KKK syndrome அதாவது கை (K) கால் ( K) குடைச்சல் ( K) என்று அழைத்ததை நான் பார்த்திருக்கிறேன். மேலும், இந்தியாவில் இந்த நோய்க்கு உடனடியாக பி 12 வைட்டமின் இன்ஜெக்ஷனும், சத்து மாத்திரைகளும் எழுதிக் கொடுப்பது வழக்கம். உண்மையில் இந்த நோய் உள்ளவர்கள் எந்த மாத்திரையிலும், ஊசியாலும் குணமாவது இல்லை. இந்த நோய்க்கான காரணங்களும் அலோபதி மருத்துவ முறையில் இதுநாள் வரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இருப்பினும் இது உயிரியல்ரீதியான நோய் என்று மருத்துவ நிபுணர்கள் கருதுகிறார்கள். நோய் எதிர்ப்பு மண்டலத்தின் சீர்குலைவு மற்றும் சில வைரஸ் தொற்றுகள், மரபியல் மற்றும் உடல் அல்லது உணர்வுரீதியான மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் கலவையால் இது தூண்டப்படுவதாகவும் பரவலாக நம்பப்படுகிறது.
'க்ரானிக் ஃபட்டிக் சிண்ட்ரோம்' எனப்படும் நாள்பட்ட சோர்வு நோய்க்குறி பாதிப்பை குணப்படுத்தும் சிகிச்சைகள் இல்லை என்றாலும் வாழ்க்கை முறை மாற்றங்கள் இந்த நோய் அறிகுறிகளைக் கொஞ்சம் குறைக்கலாம். அவை என்ன என்று பார்ப்போம்.
சிறிது உடற்பயிற்சி பிறகு சிறிது ஓய்வு என்று உங்களால் முடிந்த வரம்புக்குள் வைத்துக்கொண்டு உடற்பயிற்சி செய்யலாம். அதிகமான உடற்பயிற்சி செய்தால் சிலருக்கு அதற்குப் பின் அதிக சோர்வு ஏற்படலாம். சிலரால் தினமும் உடற்பயிற்சி செய்ய முடியாது. அவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள்கூட செய்யலாம். மருத்துவரைப் பார்த்து வலி மாத்திரைகள், நரம்பு அல்லது தசைவலிக்கு மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம்.

இந்த நோயை குணப்படுத்த முடியாததால் ஏற்படும் மன உளைச்சலுக்கான மாத்திரைகள் அல்லது cognitive behavior therapy எனும் பேசும் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். மற்றும் சக ஆதரவு குழுக்கள், அதாவது இதே நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூட்டாக மாதம் ஒரு முறையோ அல்லது இருமுறையோ எங்காவது சந்தித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல், பிரச்னைகளைப் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் ஆதரவு அளித்துக் கொள்ளுதல் போன்றவற்றையும் முயற்சி செய்யலாம். ஆக, சோர்வு என்பது வெறும் வைட்டமின் சத்து குறைவதால் மட்டும் ஏற்படுவதில்லை என்பது இதன் மூலம் புரிந்திருக்கும். எனவே, அனுபவமிக்க மருத்துவரை அணுகி, ஆலோசனையும் சிகிச்சையும் எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துகள்!
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.




















