"நீங்கள் தாக்கினால், உங்களுக்கும் திருப்பி அடி விழும்" - அமெரிக்காவிற்கு ஈரான் க...
Doctor Vikatan: விபத்தில் துண்டான விரல்... மீண்டும் ஒட்டவைக்க முடியுமா?
Doctor Vikatan: சமீபத்தில் நான் சாலையில் கண்ட காட்சி இது. இரண்டு டூ வீலர்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவரது விரல் துண்டாகிவிட்டது. அந்தத் துண்டான விரலை மீண்டும் தைத்து ஒட்ட வைக்க முடியுமா... அதை எப்படி மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, அவசர சிகிச்சை மருத்துவர் கணேஷ்

கை விரல்கள் துண்டிக்கப்படும்போது, அதை மீண்டும் பொருத்த முடியுமா என்பது காயத்தின் தன்மையைப் (Depends on the injury) பொறுத்தது.
அதாவது விபத்திலோ அல்லது மெஷின்களில் (Machine) கை மாட்டிக்கொண்டோ விரல் நேர்த்தியாக வெட்டப்பட்டிருந்தால், அதை அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் பழையபடி பொருத்துவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.
அதுவே, விபத்துகளின் போது கைகள் அல்லது விரல்கள் நசுங்கிப் போயிருந்தால், அவற்றை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவது மிகவும் கடினம். துண்டிக்கப்பட்ட பாகத்தைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லும் முறை இதில் மிக முக்கியமானது.
அந்த வகையில், துண்டிக்கப்பட்ட விரலை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கியமான வழிமுறைகள் சில உள்ளன.

துண்டிக்கப்பட்ட விரலை நேரடியாக ஐஸ் கட்டியிலோ அல்லது தண்ணீரிலோ வைக்கக் கூடாது. இது திசுக்களை அழித்துவிடும். முதலில் துண்டிக்கப்பட்ட பாகத்தைச் சுத்தமான பிளாஸ்டிக் கவரில் (Plastic cover) போட்டு நன்றாக மூட வேண்டும். பின்னர், அந்தக் கவரை அப்படியே ஒரு ஐஸ் பெட்டியினுள் (Ice container) வைக்க வேண்டும்.
துண்டிக்கப்பட்ட பகுதியை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் கால அளவும் (Time Limit) இதில் மிக முக்கியம். பாதுகாப்பாக எடுத்துச் சென்றால், அந்தத் திசுக்களின் உயிர்வாழும் தன்மையைப் (Tissue viability) பொறுத்து, பொதுவாக 6 முதல் 12 மணி நேரத்திற்குள் துண்டிக்கப்பட்ட பாகத்தை மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்து அறுவை சிகிச்சை செய்து ஒட்ட வைக்க முடியும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.




















