Vetri maaran: "அவர் என்னை நடிக்க வச்சது கொஞ்சம் வருத்தம்தான்" - வெற்றி மாறன்
FCRA மசோதா: மீண்டும் கையில் எடுத்த மத்திய அரசு! எதிர்ப்பு எழுவது ஏன்?
ஆகஸ்ட் 12 ஆம் நாள் விரிவான ஆலோசனைகளை மேற்கொள்ளும் வகையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களையும் உள்ளடக்கிய 'கூட்டு நாடாளுமன்றக் குழுவிடம்' FCRA சோதாவை ஒப்படைப்பதற்கான தீர்மானத்தை உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் முன்மொழிந்தார். இந்நிலையில் மக்களவைத் தலைவரால் (சபாநாயகர்) பரிந்துரைக்கப்படும் 21 உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவைத் தலைவரால் (துணைக்குடியரசுத் தலைவர்) பரிந்துரைக்கப்படும் 10 உறுப்பினர்கள் உட்பட 31 உறுப்பினர்கள் இந்தக் குழுவில் இடம்பெறுவார்கள் என்று அவர் தெரிவித்தார். குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளுக்குள் இந்தக் குழு தனது அறிக்கையை அவையில் சமர்ப்பிக்கும் என்றும் அவர் கூறினார்.
எதிர்க்கட்சிகளின் தொடர் எதிர்ப்பு
மார்ச் மாதம் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய போது, இதற்கு எதிர்க்கட்சிகளாலும் சிறுபான்மை மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளாலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டது. அன்றைய சூழ்நிலையில் கேரளத்தில் தேர்தல் நாள் நெருங்குவதை முன்னிட்டு அவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.
தற்போது இம்மசோதாவை மறுஆய்வுக்காக ஒரு குழுவிடம் ஒப்படைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இச்சட்டத்திற்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து, இதனை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இக்கோரிக்கைக்கு சமாஜ்வாதி கட்சி எம்.பி. அகிலேஷ் யாதவும் ஆதரவு தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜு, இந்த மசோதாவில் சிறுபான்மை அமைப்புகளைக் குறிவைக்கும் எந்தவொரு விதியும் இல்லை என்றும், இதை ஒரு கூட்டுக்குழுவுக்குப் பரிந்துரைக்கும் அரசின் முடிவை எதிர்க்கட்சிகள் வரவேற்க வேண்டும் என்றும் கூறினார்.
FCRA சட்டம் எதற்காக?
1976இல் நன்கொடை என்ற பெயரில் வெளிநாட்டு சக்திகள் உள்நாட்டில் சதி செய்கிறது என எமர்ஜென்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டம், பின்னாண்டுகளில் பல திருத்தங்களை சந்தித்தது அவற்றுள் குறிப்பாக 2010 ஆம் ஆண்டு, 1976 சட்டத்துக்குப் பதிலாக புதிய FCRA சட்டம் கொண்டுவரப்பட்டு, பதிவு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தல் உள்ளிட்ட கடுமையான ஒழுங்குமுறை விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் பிறகு 2020ல் நன்கொடையாக பெறப்படும் நிதி எந்த வகையில் பயன்படுத்தப்படுகின்றது என்ற ஆய்வினை மேற்கொள்ளும் அதிகாரம் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டது. இவற்றையெல்லாம் கடந்து மத்திய அரசு மேலும் தான் அதிகாரத்தை வலு படுத்திக்கொள்ளும் விதமாக, 2026இல் தற்போது பாஜக அரசு முன்மொழிந்துள்ளது.
சான்றிதழ் தானாகவே செயலிழந்து விடும்
முந்தைய சட்டத்தின் கீழ், ஒரு FCRA சான்றிதழை அரசாங்கம் ரத்து செய்யலாம் அல்லது நிறுவனம் அதைத் திரும்ப ஒப்படைக்கலாம் என்றிருந்தது. தற்போதைய புதிய மசோதா "செயலிழப்பு (Cessation)" என்ற நிபந்தனையை அறிமுகப்படுத்துகிறது. இதன் பொருள், ஒரு பதிவுச் சான்றிதழ் காலாவதியாவதற்கு முன்பு புதுப்பிக்கப்படாவிட்டாலோ, சம்பந்தப்பட்ட நிறுவனம் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கவில்லை என்றாலோ, அல்லது "அரசாங்கம் புதுப்பித்தல் விண்ணப்பத்தை நிராகரித்தாலோ" , அது தானாகவே செயலிழந்துவிடும்.
அதிகார அமைப்பு (Designated Authority)
இந்த மசோதா, சொத்து இழப்பு தொடர்பான முந்தைய விதிகளை முழுமையாக மாற்றியமைக்கிறது. ஒரு நிறுவனத்தின் FCRA சான்றிதழ் ரத்து செய்யப்படும்போது, ஒப்படைக்கப்படும்போது அல்லது நிறுத்தப்படும்போது, அதன் வெளிநாட்டுப் கொடைகள் மற்றும் சொத்துக்களைப் பொறுப்பேற்று, மேற்பார்வையிட்டு, நிர்வகித்து, அகற்றுவதற்குப் பொறுப்பான ஒரு புதிய நியமிக்கப்பட்ட அதிகார அமைப்பை இம்சோதா உருவாக்குகிறது.

புதிய சான்றிதழ் வழங்கப்படும் அல்லது புதுப்பிக்கப்படும் வரை, சொத்துக்கள், நியமிக்கப்பட்ட அந்த அதிகார அமைப்பு தற்காலிகமாக வைத்திருக்கும். அந்த அமைப்பு சான்றிதழைப் புதுப்பிக்கவோ அல்லது மீட்டெடுக்கவோ தவறினால், அந்த கொத்துகளை அவ்வமைப்பு முழுவதுமாக பெற்றுக் கொள்ளும். பிறகு அந்த சொத்துக்களைப் பொது நோக்கங்களுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்றும், அவற்றை அரசு அமைச்சகங்கள் அல்லது முகமைகளுக்கு மாற்ற வேண்டும் என்றும், அல்லது அவற்றை விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாய் கஜானாவிற்கு செல்லும் என்றும் இம்மசோதா கூறுகிறது. அதுவே அந்த சொத்து ஒரு வழிபாட்டுத்தலமாக இருந்தால், சொத்து முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஒரு வழிபாட்டுத் தலமாக இருந்தால், அதன் மதரீதியான தன்மை பேணப்படுவதை உறுதி செய்வதற்காக, அதன் நிர்வாகத்தை ஒரு பொருத்தமான நபரிடம் ஒப்படைக்கப்படும்
நன்கொடைகளை குறிப்பிட்ட காலத்தில் செலவு செய்ய வேண்டும்
முழுமையாகப் பதிவு செய்யப்படாத, ஆனால் ஒருமுறை வழங்கப்படும் "முன் அனுமதி" வழிமுறையின் மூலம் பெறப்படும் வெளி நாட்டு நன்கொடைகள் இந்த மசோதாவின் கீழ் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் பெறப்பட்டு செலவிடப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. மேலும் இச்சட்டத்தின் கீழ், தேர்தல் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள், நீதிபதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் செய்தி வெளியீட்டாளர்கள் போன்றோர் வெளிநாட்டுப் நன்கொடைகளைப் பெறுவது தடை செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படியோ அல்லது அதன்கீழ் வகுக்கப்பட்ட விதிகளின்படியோ செயல்படுவது சட்ட மீறலாகக் கருதப்பட்டு, அதற்காக ஐந்து ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை, அபராதமும் விதிக்கப்படலாம். இச்சட்டமுன்வரைவு, அதிகபட்ச சிறைத்தண்டனைக் காலத்தை ஓராண்டாகக் குறைக்கிறது. மேலும், இச்சட்டத்தின் கீழ் வரும்போது குற்றத்திற்காக விசாரணையைத் தொடங்க மத்திய அரசின் முன் அனுமதி தேவை என்றும் இது குறிப்பிடுகிறது.
இதன் நிலைத்தன்மையை நாடாளுமன்றமே தீர்மானிக்கும்
இப்படிபட்ட சூழலில்தான் இது தற்போது கூட்டு நாடாளுமன்ற குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் இதுவரை தொண்டு நிறுவனங்கள் உட்பட சுமார் 16,000 அமைப்புகள் பதிவு செய்யப்பட்டு, ஆண்டுதோறும் கிட்டத்தட்ட ரூ.22,000 கோடி நன்கொடைகள் அவற்றின் மூலம் பெறப்படுகின்றன. இதில் சொல்லப்பட்ட அந்த 'அதிகார அமைப்பிற்கு' வரம்பு மீறிய சக்திகளை கொடுத்துள்ளதாகவும்; விண்ணப்பங்கள் வேண்டுமென்றே குறிப்பிட்ட காலம் வரை நிறுத்தி வைக்கப்பட்டு அதனை காரணமாக காட்டி சொத்துக்கள் பறிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் இம்மசோதா குறித்து எதிர்வினை ஆற்றப்படுகிறது. அந்த மசோதாவைத் தொடர்ந்து முன்னெடுக்கக் கூடாது என்று அது பரிந்துரைக்கலாம்; ஆனால், அந்தப் பரிந்துரை ஒரு 'வீட்டோ' (தடுப்பு) அதிகாரம் ஆகாது. அக்குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதா, திருத்துவதா அல்லது நிராகரிப்பதா என்பதை இறுதியில் நாடாளுமன்றமே தீர்மானிக்க முடியும்.














