Vetri maaran: "அவர் என்னை நடிக்க வச்சது கொஞ்சம் வருத்தம்தான்" - வெற்றி மாறன்
'சிங்கப்பூர் பயணத்துக்க அப்புறம்தான்..!' அவையில் பம்மும் எ.வ.வேலு; அதிருப்தியில் திமுக MLA க்கள்?
சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. செப்டம்பர் 8 வரை அவை நடக்கவிருக்கிறது. பட்ஜெட் மீதான விவாதம் முடிந்திருக்கும் நிலையில் திமுக எம்.எல்.ஏக்கள் அக்கட்சியின் சீனியரும் கொறடாவுமான எ.வ.வேலு மீது அதிருப்தியில் இருப்பதாக கோட்டை வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.

எதிர்க்கட்சியான திமுகவின் கொறடாவாக இருந்து அவையில் திமுக உறுப்பினர்களை முறையாக வழிநடத்த வேண்டிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அவைக்குள் எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் ஆளுங்கட்சியை மயிலறகால் வருடிக் கொடுக்கிறார் எனும் வருத்தக் குரல் திமுக எம்.எல்.ஏக்கள் முகாமில் எழத் தொடங்கியிருப்பதாக உள்விவகாரங்களை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய உடன்பிறப்புகள், 'கொறடாவாக இருந்து உறுப்பினர்களை முறையாக வழிநடத்தி அவையில் திமுகவின் நரேட்டிவ் எப்படி இருக்க வேண்டுமென தீர்மானிக்க வேண்டியவர் எ.வ.வேலு. ஆனால், அவரோ முக்கியமான தருணங்களிலெல்லாம் ஆளுங்கட்சியை வருடிக் கொடுத்து Same Side கோல் போட்டுக் கொண்டிருக்கிறார். லாட்டரி விவகாரத்தில் அவையில் உதயநிதிக்கும் ஆதவ்வுக்கும் காட்டமான விவாதம் நடந்தது. கடைசியில், 'மார்ட்டினிடம் ஏன் 900 கோடி வாங்கினீர்கள் என்பது உங்கள் அப்பாவுக்குதான் தெரியும். அவர் அவையிலேயே இல்லை. வீட்டில் போய் அவரிடம் கேளுங்கள்' என மூக்கறுக்கும் வகையில் ஆதவ் பேசினார்.

உதயநிதியால் அதற்கு பதில் சொல்ல முடியவில்லை. உடனே எ.வ.வேலு எழுந்தரித்தார். ஆதவ்வை கண்டித்து அம்புகளை ஏவப் போகிறார் எனப் பார்த்தால், 'மார்டின் எங்களுடைய நீண்ட கால நண்பர். தேர்தல் நிதி வாங்குவது வழக்கம்தானே. அதை ஏன் பேச வேண்டும்' என 'நாங்க பாவம்ல...' பாணியில் மழுங்கலாக பேசினார். இணையத்தில் அன்று முழுவதும் உதயநிதிக்கு ஆதவ் கொடுத்த பதிலடிதான் ட்ரெண்ட். திமுகவுக்கு மார்டின் தேர்தல் நிதி கொடுத்த போது ஆதவ்வும் திமுக முகாமில் திமுகவின் வெற்றிக்குதான் உழைத்துக் கொண்டிருந்தார் என்கிற பாய்ண்ட்டை கூட எ.வ.வேலு முன்வைக்கவில்லை.
ஆதவ்வின் நிலைப்பாடை அவையில் தோலுரித்திருந்தால் கூட உதயநிதிக்கு ஏற்பட்ட டேமேஜை குறைத்திருக்க முடியும். இந்த விஷயமில்லை. அடுத்ததாக மதிமுகவிலிருந்து சமீபத்தில் திமுகவில் இணைந்த ராஜேந்திரன் அவையில் நிதியமைச்சரின் மொழி குறித்து பக்குவமாகத்தான் பேசியிருந்தார். அதற்கு நிதியமைச்சர் மரியவில்சன் தான் அவை மரபை மீறி மைக்கையெல்லாம் தள்ளிவிட்டு திமுக எம்.எல்.ஏவை அசிங்கப்படுத்தியிருக்கிறார். நியாயப்படி எ.வ.வேலு அந்த சமயத்தில் மரிய வில்சனுக்கு எதிராக கொந்தளித்திருக்க வேண்டும். மதத்தோடு தமிழை ஒப்புமைப்படுத்தி பேசியதையும் கண்டித்திருக்க வேண்டும். ஆனால், அவரோ 'சீனியர்கள் யாராவது பேசியிருந்தால் நீங்கள் கோபப்படலாம். கன்னிப்பேச்சு பேசுபவர் சொல்வதற்கெல்லாம் கோபப்பட வேண்டாம்' எனக் கூறிவிட்டு, 'எங்க அண்ணன் மாப்பிள்ளை இவரு. அதனால எனக்கு இவரை முன்னாடியே தெரியும். அவர் இங்கிலீஸ் மீடியத்தில்தான் படித்தார்' என மரியவில்சனுக்கு சர்டிபிகேட் கொடுத்துக் கொண்டிருந்தார்.

இத்தனைக்கும் ராஜேந்திரனுக்கு எதிரான எதிராக பேசுகையில் '70 நாளுக்கு முன்னாடி நிலைமை வேற. இப்போ நிலைமை வேற. 15000 கோடியை கஜானாவுக்கு கொண்டு வந்துருக்கோம்' என திமுக ஆட்சியில் நிதிக்கசிவு இருந்ததென ஒரு பெரும் குற்றச்சாட்டையும் முன் வைத்திருந்தார். அதையும் எ.வ.வேலு கண்டுகொள்ளவே இல்லை. எந்தெந்த துறைகளிலெல்லாம் எப்படி நிதி கொள்ளையடிக்கப்பட்டதென தணிக்கை செய்து வருகிறோம், சீக்கிரமே முதல்வர் அந்த பைல்களை வெளியிடுவார் என வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் திமுகவை குற்றவாளி கூண்டில் ஏற்றுகிறார் மரியவில்சன். அவரிடம் உறவு பாராட்ட வேண்டிய தேவை என்ன இருக்கிறது என்று வருந்துகிறார்கள் .
நேற்று மரிய வில்சனும் எனக்கு சப்போர்ட்டாக பேசியதற்கு நன்றி என அவருக்கு நன்றி கூறுகிறார். தொகுதி மறுவரையறை தீர்மானத்தில் 'முதல்வருக்கு பிறகு எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதுதான் முறை' என எ.வ.வேலு கூறுகிறார். 'நான் சொல்லும் போது பேசட்டும்' என சபாநாயகர் கூறுகிறார். எதிர்க்கருத்து எதையுமே முன்வைக்காமல் எ.வ.வேலு அமர்ந்துவிடுகிறார். கோவை கொலை சம்பந்தமான கவன ஈர்ப்பு தீர்மானத்தையும் திங்கள் கிழமை பேசலாம் என சபாநாயகர் கூறி அதையும் தலையாட்டிக் கொண்டு ஏற்றுக்கொள்கிறார்.

திங்கள் கிழமைக்குள் அந்த பிரச்னை ஒன்றுமே இல்லாமல் போய்விடும். காலம் தாழ்த்துவது ஆளுங்கட்சிக்குதான் சாதகமாக முடியும். வாதமே செய்யாமல் இதையெல்லாம் எப்படி ஏற்றுக்கொள்கிறார் என்றே தெரியவில்லை. நிலைமை இப்படியே தொடர்ந்தால் அவையில் பெயருக்கு மட்டுமே எதிர்க்கட்சியாக இருப்போம். ஆளுங்கட்சிக்கு எந்த நெருக்கடியுமே கொடுக்க முடியாது. அண்ணன் சிங்கப்பூர் சென்று வந்த பிறகுதான் ஆளுங்கட்சி மீது இத்தனை மென்மையான போக்கை கையாள்கிறார். தலைமை சுதாரிக்க வேண்டும்' என பொறுமுகின்றனர்.














