IPL 2026: தோனி ஓய்வு; விசில் தடை குறித்த கேள்விகள்; காசி விஸ்வநாதன் அளித்த பதில்...
Jana Nayagan: மறு ஆய்வுக்கு அனுப்ப திட்டம்; வழக்கை வாபஸ் பெற 'ஜனநாயகன்' படக்குழு கடிதம்!
வழக்கைத் திரும்பப் பெறுவதாகக் கூறி, படத் தயாரிப்பு நிறுவனம் பதிவுத்துறைக்கு கடிதம் அளித்துள்ளது.
நடிகர் விஜயின் 'ஜனநாயகன்' படத்தில் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகத் தணிக்கைக் குழு உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில், படத்தை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பி சென்சார் போர்டு தலைவர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி. ஆஷா, படத்துக்கு உடனடியாகத் தணிக்கை சான்று வழங்க வேண்டும் என்று ஜனவரி 9ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரணைக்கு அனுப்பி உத்தரவிட்டது.
மேலும், படத்தை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பியதை எதிர்த்து திருத்த மனு தாக்கல் செய்ய படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு தலைமை நீதிபதி அமர்வு அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில், படத்தின் தணிக்கைச் சான்று தொடர்பாக மறு ஆய்வுக் குழுவை அணுகியுள்ளதால், தனி நீதிபதி முன் உள்ள வழக்கைத் திரும்பப் பெற உள்ளதாகக் கூறி, படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தின் அடிப்படையில் வழக்கு, தனி நீதிபதி முன் 'வாபஸ் பெறுவதற்காக' என்ற தலைப்பில் விரைவில் பட்டியலிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



















