`விஜய் Bro... உங்களை இயலாதவர் என்று சொல்வதில் என்ன தவறு?'- முதல்வரின் விமர்சனங்க...
MacBook-க்காக இளைஞர் போட்ட ஸ்கெட்ச்; பணியில் சேர்ந்தவுடன் Uber நிறுவனத்துக்குக் காத்திருந்த ஷாக்!
ஊழியர்கள் வேலைக்கு வராமல் ஏமாற்றுவதை நாம் பார்த்திருப்போம், ஆனால் ஒரு லேப்டாப்பிற்காக ஒரு நபர் தனது அடையாளத்தையே ஒட்டுமொத்தமாக அழித்துக்கொண்டு ஓட்டம் பிடித்த இந்த விசித்திரச் சம்பவம் தற்போது பயங்கர வைரலாகி வருகிறது.
உலகப் புகழ்பெற்ற உபெர் நிறுவனம் தன்னிடம் வேலைக்குச் சேர்ந்த ஒரு புதிய ஊழியருக்கு விலையுயர்ந்த ஆப்பிள் மேக்புக் லேப்டாப்பை அன்பளிப்பாக வழங்கியது. ஆனால், அந்த லேப்டாப் கைக்குக் கிடைத்த அடுத்த நிமிடமே, அவர் தனது போன் நம்பர், சமூக வலைதளப் பக்கங்கள் என எல்லாவற்றையும் அழித்துவிட்டு லேப்டாப்புடன் காணாமல் போயுள்ளார்.
வேலைக்குச் சேர வேண்டிய நாளில் அந்த நபர் வராததால், நிறுவன அதிகாரிகள் அவரது மொபைல் போனுக்குத் தொடர்பு கொண்டனர். அப்போது, "இந்த எண் புழக்கத்தில் இல்லை" என்ற பதில் வந்துள்ளது.

அவர் நிறுவனத்தின் போன் நம்பரை மட்டும் பிளாக் செய்யவில்லை, மாறாகத் தனது சிம் கார்டையே முற்றிலுமாக முடக்கியுள்ளார். தொடர்ந்து அவரது தொழில்முறை சமூக வலைதளப் பக்கத்தைச் சரிபார்த்தபோது, அதுவும் முற்றிலுமாக அழிக்கப்பட்டுத் தடயமே இல்லாமல் போயிருந்தது அதிகாரிகளுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைவிடக் கொடுமை என்னவென்றால், அந்த லேப்டாப் அனுப்பி வைக்கப்பட்ட முகவரியைச் சோதித்துப் பார்த்தபோது, அது ஒரு பாழடைந்த கட்டடத்திற்குப் பின்னால் இருந்த வெற்று நிலம் என்பது தெரியவந்தது. அதாவது, லேப்டாப்பைப் பெற்றுக்கொள்வதற்காகவே ஒரு திட்டமிட்ட போலி முகவரியை அவர் கொடுத்துள்ளார்.
உடனடியாக நிறுவனத்தின் கணினிப் பிரிவினர் அந்த லேப்டாப் எங்குள்ளது என்று கண்டுபிடிக்க முயன்றபோது, அந்த லேப்டாப் ஏற்கெனவே முற்றிலும் அழிக்கப்பட்டு, கண்டுபிடிக்க முடியாத ஒரு போலி இடத்தில் இயங்குவது போலக் காட்டியுள்ளது.

கடினமான நேர்காணல் தேர்வுகள் அனைத்தையும் கடந்து, பின்னணி சோதனைகளையும் போலி அடையாளங்களை வைத்து ஏமாற்றி, லேப்டாப்பிற்காக இவ்வளவு பெரிய திட்டத்தைப் போட்டு அந்த நபர் திருடியிருப்பது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து வேடிக்கையாகப் பதிவிட்டுள்ள அந்த நிறுவன அதிகாரி, "அவர் வேலைக்கு வராமல் ஏமாற்றவில்லை, தனது அடையாளத்தையே போலி என நிரூபித்துவிட்டுத் தடயமே இல்லாமல் மறைந்துவிட்டார்; இது ஒரு சினிமா பட பாணியிலான திருட்டுச் சம்பவம், தயவுசெய்து எங்களது லேப்டாப்பைத் திருப்பித் தந்துடுங்கள்" என்று புலம்பியுள்ளார்.


















