Rajasthan: ராஜஸ்தானில் அதிவேக புழுதிப்புயல்; வைரலான வீடியோ - காரணம் என்ன?
`சாக அனுமதி தாருங்கள், மனைவியின் சித்ரவதை தாங்கமுடியவில்லை'- குஜராத் வாலிபர் கலெக்டருக்கு கடிதம்
குஜராத் மாநிலம், சூரத்தை சேர்ந்தவர் கிரித் பட்டேல். இவருக்கு முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவி மூலம் குழந்தைகள் இருக்கின்றன. தற்போது இரண்டாவது மனைவிக்கும், பட்டேலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தனது மனைவி தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாக கூறி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு பட்டேல் கடிதம் எழுதி இருக்கிறார். இது தொடர்பாக அவர் எழுதி இருக்கும் கடிதத்தில், ``எனது மனைவி பெண்களை பாதுகாக்க பயன்படும் சட்டத்தை தவறாக பயன்படுத்தி என் மீது குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீஸில் புகார் செய்கிறார்.
இதனால் எனக்கு மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளது. எனது முதல் மனைவிக்கு பிறந்த குழந்தைகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் விதமாக நடந்து கொள்கிறார். இது குறித்து போலீஸில் புகார் செய்ததற்கு போலீஸார் வழக்கு பதிவு செய்ய மறுக்கின்றனர். சட்டநடைமுறையை பின்பற்றி எனது மனைவி பணம் கேட்கிறார். இதே நடைமுறையை பின்பற்றி அவரது முன்னாள் கணவர்களிடமும் பணம் வசூலித்தார். எனது மனைவி கொள்ளைக்கார மனைவியாக இருக்கிறார்.

என் புகார் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மறுப்பதால் நான் இறப்பதற்கு நிர்வாகம் அனுமதி கொடுக்க வேண்டும்" என்று கோரியுள்ளார். பட்டேல் புகார்கள் குறித்து இன்னும் விசாரித்து உறுதிபடுத்தவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதே போன்று காந்திநகரை சேர்ந்த பங்கஜ் என்பவர் வேலை பறிபோனதால் விரக்தியில் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு வீட்டிற்கு வெளியில் ஒரு பேப்பரில் வீட்டிற்குள் தண்ணீர் குடிக்காதீர்கள், விஷம் கலந்திருக்கிறது. விஷ வாயு இருக்கிறது. முககவசம் அணிந்து வாருங்கள் எழுதி ஒட்டி இருந்தார். தற்கொலை செய்து 5 நாட்களாகி இருக்கவேண்டும் என்று போலீஸார் தெரிவித்தனர்.



















