சென்னை: தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மையைப் பாராட்டிய சௌபாக்கியா கிச்சன் அப்...
OPS: அடுத்தடுத்து அணி மாறும் ஆதரவாளர்கள்; சட்டமன்றத்தில் சேகர் பாபு உடன் சந்திப்பு நடத்திய ஓபிஎஸ்?
சட்டமன்றத்தில் சபாநாயகர் அறையில் ஓ. பன்னீர்செல்வமும், அமைச்சர் சேகர்பாபுவும் 15 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் தீவிரமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.
இந்த சூழலில் 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்று கூறிய முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து எதுவும் அறிவிக்காமல் இருக்கிறார்.
இதனிடையே ஓபிஎஸ் அணியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறி வருவது, ஓ.பி.எஸ்ஸுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது மனோஜ் பாண்டியன், சுப்புரத்தினம், மருது அழகுராஜ் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். ஜேசிடி பிரபாகர் தவெகவில் இணைந்தார்.
அதேபோல் குன்னம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஆர்.டி.ராமச்சந்திரன் திமுகவில் இணையப்போவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், திடீரென அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
தற்போது இந்தப் பட்டியலில் ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளராக அறியப்படுபவர் எம். பி ஆர்.தர்மரும் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எம்பி தர்மர் இன்று (ஜன.24) மாலை அதிமுக பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படி ஒவ்வொருவராக ஓபிஎஸ் அணியில் இருந்து விலகும் நிலையில்தான் இன்று சட்டமன்றத்தில் சபாநாயகர் அறையில் ஓ. பன்னீர்செல்வமும், அமைச்சர் சேகர்பாபுவும் 15 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுகவில் சேரும் முடிவில் இருக்கிறாரா? ஓபிஎஸ் என்ற பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
















