PBKS Vs LSG: 'எல்லாரும் அவங்க ஸ்டைல்ல ஆடுறாங்க, அதுதான் எங்களுக்குத் தேவை'– ஸ்ரேயஸ் ஐயர்
ஐபிஎல் 2026-ன் நேற்றைய (ஏப்ரல் 19) ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இந்த அதிரடி வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்தது. அணியின் இந்த அதிரடி வெற்றி குறித்து கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் சில முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

வெற்றி குறித்து பேசிய ஸ்ரேயஸ் ஐயர், "இன்றைய ஆட்டம் உண்மையிலேயே சிறப்பாக இருந்தது. இவ்வளவு பெரிய இலக்கை எட்ட மிகுந்த தைரியமும் நிதானமும் அவசியம்.
நான், பிரியன்ஷ் மற்றும் கூப்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன், இந்த சீசனில் அதிக சிக்ஸர்கள் அடிப்பது யார் என்று எங்களுக்குள் ஒரு சவாலே போய்க்கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு அவர்கள் மிரட்டலாக ஆடுகிறார்கள்.
வீரர்களை இயல்பாக விளையாட அனுமதிக்கும்போது, அவர்கள் மிகச்சிறப்பாகப் பங்களிக்கிறார்கள். அவர்கள் எப்படி விளையாட வேண்டும் என்று நான் அவர்களுக்குச் சொல்வதில்லை.
ஒவ்வொருவருக்கும், தனிப்பட்ட பயிற்சிகளும் முறைகளும் உள்ளன. போட்டிக்கு முன்னதாக ரிக்கி பாண்டிங் பேசுவார், இடையில் நான் சில ஆலோசனைகளை வழங்குவேன், அவ்வளவுதான்.

எங்கள் அணியில் உள்ள பெரும்பாலான பந்துவீச்சாளர்கள் சர்வதேச தரம் வாய்ந்தவர்கள். அவர்கள் சர்வதேச அளவில் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறார்கள் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
களத்தில் திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்துவதே முக்கியம், அதை அவர்கள் மிகச்சரியாகச் செய்கிறார்கள். ஒவ்வொரு முறை இந்த மைதானத்தின் விக்கெட்டைப் பார்க்கும்போதும் எங்களுக்கு மிகுந்த திருப்தி கிடைக்கிறது," என்று ஸ்ரேயஸ் ஐயர் நெகிழ்ச்சியுடன் பேசினார்.






















