Doctor Vikatan: `பீரியட்ஸ் அவதிகள், ஆண்களும் உணர வேண்டும்' - நடிகை ராஷ்மிகாவின் ...
SIR: ``திமுக ஆலோசனை கூட்டத்தில் ஆட்சியர், ஆணையர் பங்கேற்றது நிர்வாக சீர்கேடு'' - ராஜன் செல்லப்பா
"ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருந்தபோது 2011-ல் ஆட்சிக்கு வர முடியவில்லை, அதேபோல தற்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக உள்ளதால் 2026-ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது" என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா பேசியுள்ளார்.
திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு தொகுதிகளுக்கான அதிமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை தாங்கி ஆலோசனை வழங்கிய புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா பேசும்போது,
"தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணையத்தால் எஸ்.ஐ.ஆர் பணி நடைபெற்று வருகிறது. நாளையும், நாளை மறுநாளும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 'பாக முகவர்கள் 2' பங்கேற்க வேண்டும்.
தற்போது பி.எல்.ஒ பணியில் பணிபுரியும் அலுவலர்கள் சரியாக நியமிக்கப்படவில்லை. காலை உணவு திட்டத்தில் உள்ளவர்கள், சுய உதவி குழுவினரை நியமித்துள்ளனர், இவர்களுக்கு சரியான பயிற்சி இல்லாதால், அவர்களை திமுக சாதகமாக பயன்படுத்துகிறது.
ஆகவே, 'பாக முகவர்கள் 2' தற்போது நடைபெறும் முகாமில் பங்கேற்று மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்யப்பட வேண்டிய விஷயங்களை அவர்களுக்கு சொல்லித் தர வேண்டும்.

இன்றைக்கு எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய ஆதரவு அலை உருவாகி உள்ளது. 172 தொகுதிகளிலும் எழுச்சி பயணம் செல்லும்போது மக்கள் சிறப்பான வரவற்பை அளித்தனர். 172 தொகுதிகளில் இப்போதே பிரசாரத்தை சிறப்பாக நடத்திவிட்டார்.
இதுபோன்று யாரும் செய்யவில்லை, அதேபோல முதலமைச்சர் ஸ்டாலின் ரோடு ஷோ சென்றபோது ரோட்டில் மக்கள் இல்லாமல் காலியாகத்தான் இருந்தது.
இதன் மூலம் அதிமுகவின் வெற்றி நிச்சயம் ஆகிவிட்டது, அதனால் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் தவறை சுட்டிக்காட்டும் அதிகாரம் உங்களிடத்தில் உள்ளது. அலுவலர்கள் தவறு செய்தால் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியிடம் முறையிட வேண்டும்.
எஸ்.ஐ.ஆர் பணியை திமுக எதிர்க்கிறது, ஆனால், திமுக அமைச்சர் மூர்த்தி கிழக்குத் தொகுதியில் சமீபத்தில் நடத்திய 'திமுக பாக முகவர்கள் 2' ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பங்கேற்றுள்ளனர்.
இது நிர்வாக சீர்கேடுக்கு சான்று, தவறான முன் உதாரணம். இதில் பங்கேற்றது தவறு இல்லை என்றால் அடுத்த முறை நாங்கள் நடத்தும் 'பாக முகவர்கள் 2' ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியருக்கு அழைப்பு விடுவோம், அதில் பங்கேற்க வேண்டும்.

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தைக் கூட 36 மாதம் கழித்துதான் வழங்கினார்கள். எடப்பாடி பழனிசாமி 2026-ல் ஆட்சிக்கு வரும்போது மகளிர் உரிமைத்தொகையை 1,500 ரூபாயாக வழங்குவார்.
ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருந்தபோது 2011-ல் மீண்டும் ஆட்சிக்கு வர முடியவில்லை. அதேபோல தற்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக உள்ளதால், 2026-ல் திமுக ஆட்சிக்கு வர முடியாது.
திமுக ஒருமுறை ஆட்சிக்கு வந்தபின் மறுமுறை வந்தது கிடையாது. ஆனால், அதிமுக பல முறை வந்துள்ளது, 2026 ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார்" எனப் பேசினார்











