பேங்காக் பாரில் பயங்கர தீவிபத்து: 27 பேர் உடல் கருகி பலி; 60 பேர் காயம்; எப்படி ...
’We The Leaders அரசியல் கட்சியாக மாறுவது எப்போது?’ – அண்ணாமலை விளக்கம்
கோவை பொள்ளாச்சியில் ’வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் போதை இல்லா தமிழகம் என்ற விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது.
இம்மாநாட்டில் உரையாற்றிய அண்ணாமலை, “அமைப்பு துவங்கிய 38 நாட்களில் 19 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இதுவரை நான் யாருக்குமே போன் செய்து இந்த அமைப்பில் இணையுங்கள் எனச் சொல்லவில்லை.
இது என்னுடைய குடும்பக் கட்சி கிடையாது, அமைப்பு கிடையாது. நானும் ஒரு தன்னார்வலர்தான். எல்லோரும் சேர்ந்து ஒரு குடும்பமாக இருக்கும்போதுதான், ஒரு நேர்மையான சமுதாயம் பிறக்கும்.
நம்முடன் இணைபவர்கள் எண்ணிக்கை 50 லட்சம் என வரும்போது, தமிழக மக்கள் நம்மை அழைக்கின்றார்கள் எனப் பொருள். அப்போதுதான் நிரந்தரமான சமுதாயத்தைக் கட்டமைக்க முடியும். இல்லையெனில் ஆடி காற்றிக்கு பட்டம் பறப்பதைப் போல பறந்து கீழே விழுந்து விடும்.
இந்த மாதம் முழுவதுமே போதைக்கு எதிரான மாதம். வரும் 26ம் தேதி திருச்செந்தூரில் நான் இருப்பேன். ஆகஸ்ட் மாதம் சுற்றுச்சூழலுக்கான மாதம். செப்டம்பர் மாதம் பெண்கள் பாதுகாப்பிற்கான மாதம், அடுத்து குழந்தைகள் நலன். ஆறு மாத காலம் சமுதாயத்தின் ஆறு முக்கியப் பிரச்னைகளை எடுத்து செல்வோம்.

தற்போது வரை இணைந்துள்ள 19 லட்சம் பேரில் 83 சதவீதம் ஆண்கள், 17 சதவீதம் பெண்கள் இருக்கின்றனர். இன்று 17 சதவீதம் பெண்கள் இருப்பது நமது முதல் வெற்றி. இதைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்தி ஐம்பது சதவீதமாகக் கொண்டு வர வேண்டும்.
39 வயதிற்கு கீழ் 54 சதவீதம் பேர் இந்த அமைப்பில் இருக்கின்றனர். இவர்கள் மாற்றம் உடனே வேண்டும் என நினைக்கின்றார்கள். 2026ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள், 2031ல் மற்றுமொரு காட்சி மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறார்கள்.
இது அரசியல் மாநாடு கிடையாது. ஆட்சியில் ஒருவர் வந்துவிட்டார். அவருக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இல்லை. இவ்வளவு பேர் ஒன்றாக இணைந்து போதையில்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
த.வெ.க அரசு வந்திருக்கிறது. வந்து பேசி அவர்களை வெளுத்து விட்டு போங்கள் எனச் சிலர் சொல்கின்றனர். 2026ல் ஒரு கோடியே 68 லட்சம் பேர் விஜய் வேண்டுமென மக்கள் தேர்வு செய்து இருக்கிறார்கள். இவர்கள் 10 ஆண்டு, 15 ஆண்டு, 20 வருஷம் எம்எல்ஏ கிடையாது.
தட்டு தடுமாறி எம்.எல்.ஏ ஆனவர்கள்தான். செங்கோட்டையனைத் தவிர அனைவரும் முதல் முறை எம்.எல்.ஏ ஆனவர்கள். கொஞ்சம் தடுமாறத்தான் செய்வார்கள். அவர்கள் தடுமாறும்போது தூக்கிவிட வேண்டும்.
இந்த அமைப்பு மூர்க்கத்தனமாக அதிகாரத்தைப் பிடிப்பதற்காக வரவில்லை. ஆணவத்தோடு இந்த அமைப்பை ஆரம்பிக்கவில்லை. நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக வந்திருக்கிறோம்.

விஜய் சாரை சி.எம் சார் என்று கூப்பிடுவோம். இந்த அமைப்பு மூலமாக அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என்பதைவிட, ஆரோக்கியமான அரசியலைச் செய்து அரசுக்கு வலியுறுத்த வேண்டும். நமக்கு எந்த அரசியல் குழப்பமும் வேண்டாம். இது ஆரோக்கியமான அரசியல் கட்சியாக மாறத்தான் போகிறது.
2031 தமிழக மக்கள் முன்பு நம்முடைய அரசியல் கட்சி இருக்கும். 38 நாட்கள் யாரை பற்றியும் நாம் பேசவில்லை. பி.ஜே.பி-யின் பி டீமாக இது என தி.மு.க-வினருக்குச் சந்தேகம். கட்சியில் இருந்து வெளியில் வரும்போது ஒரு பழிச்சொல்லைச் சொல்லி வர மாட்டோம்.
அண்ணாமலை தேசியவாதியா? ஆம் இறுமாப்புடன் செல்கிறேன் தேசியவாதிதான். இந்தியர் என்பதில் எப்போதும் கர்வம். இந்தியாவில் தமிழகம் முதன்மை மாநிலமாக வரவேண்டும் என்பதற்குத்தான் இந்தப் போராட்டம். தமிழன் என்று சொன்னால் அது இந்தியனுக்கு எதிரியா?
என்னுடைய மதத்தையும், சாதியையும் வீட்டிலேயே வைத்து பூட்டிவிட்டு அனைவருக்கும் பொதுவான மனிதனாக உங்களுடன் வந்து நிற்பேன்.
மதத்தை ஒவ்வொரு முறையும் தூக்கிப் பிடித்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை. 60 ஆண்டுகளாக இனாம் நிலத்தில் இருப்பவர்களுக்கு அந்நிலத்தைக் கொடுத்து இருக்கின்றனர். இதை ஆதரித்தற்காக அண்ணாமலை இந்து விரோதி என்கின்றனர்.

நல்ல தலைவர்களைக் கீழ் இருந்து எடுத்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, தலைமை பொறுக்கு கொடுத்து அவர்களை வேட்பாளர்களாக நிறுத்தி சட்டமன்ற உறுப்பினர்களாக, பாராளுமன்ற உறுப்பினர்களாக அழகு பார்த்து சேவை செய்வதற்காக இந்த அமைப்பின் மூலம் அனுப்புவோம்.
யாருக்கும் சந்தேகம் வேண்டாம். இந்த அமைப்பு அரசியல் கட்சியாக மாறப்போகிறது. சரியான நேரத்தில் அரசியல் கட்சியாக மாறும். சரியான எண்ணிக்கை வரும்போது, சரியான தலைவர்கள் உள்ளே வரும் போது மாறும்.
தமிழகத்தில் ஒரு தனி மனிதன் மீது இருக்கக்கூடிய கடன் ரூ.4 லட்சம் இருக்கிறது. த.வெ.க அரசு முடியும்போது தமிழகத்தின் கடன் ரூ.15 லட்சம் கோடி கடன் இருக்கும். தமிழகத்தில் நமது ஆட்சி வரும்போது, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தரமான மருத்துவம் இருக்கும், உலக தரமான பள்ளிகள் இருக்கும்.
தலைவர்களைத் தயார் செய்துவிட்டு இதை நோக்கிச் செல்வோம். நிரந்தரமாக தமிழகத்தில் ஒரு மாற்றம் வரும். என் மண் என் மக்கள் தொழிற்சங்க பேரவையும் துவங்கியிருக்கிறோம். தொழிலாளர்கள் இந்தத் தொழிற்சங்கத்தில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். வாழ்க தமிழ்நாடு வளர்க பாரத நாடு என்பது நமது கோஷமாக இருக்கும்” என்றார்.











