செய்திகள் :

"கூட்டணியிலிருந்தும் தவெக அரசைக் கடுமையாக விமர்சிப்பதற்குக் காரணம் இதுதான்" - ஆதவன் தீட்சண்யா

post image

'''தீக்கதிர்' நாளிதழுக்கு அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் சந்தா செலுத்திய செய்தியைக் குறிப்பிட்ட போது, தொண்ணூறுகளில் 'வாச்சாத்தி சம்பவம்' நிகழ்ந்தபோது அவர் குறித்துச் செய்திகள் வெளியான பழைய இதழ்களையும் அனுப்பி வைக்கலாம்'' எனச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா.

தவெக ஆட்சி குறித்த இவரது ஒரு பதிவை சட்டசபையில் மேற்கோள் காட்டி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசியது நினைவிருக்கலாம்.

'கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக அரசுக்கு ஆதரவளித்து வரும் சூழலில், அடிப்படையில் கம்யூனிஸ்டான உங்களது கருத்தில் முரண்பாடு தெரிகிறதே' என்ற கேள்வியுடன் அவருடனான உரையாடலைத் தொடங்கினோம்.

தவெக தமிழ்நாடு
தவெக தமிழ்நாடு

''அரசு அமைப்பதற்குத் தேவையான உறுப்பினர் எண்ணிக்கை இல்லாத சூழலில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக தவெக இருந்தது. எனவே ஆளுநர் அந்தக் கட்சியைத்தான் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டசபையே தவிர ஆளுநர் மாளிகை அல்ல என்பது சி.பி.எம் நிலைப்பாடு.

எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க முடியாத சூழல் உருவானால் குடியரசுத் தலைவர் ஆட்சி என்கிற பெயரில் பாஜக நுழைந்து விடும் என்பதாலேயே அந்தக் கட்சி ஆட்சி அமைக்க வெளியிலிருந்து ஆதரவு தருவதெ என்கிற நிலைப்பாட்டை கட்சி எடுத்தது. இதில் எனக்கும் கட்சிக்கும் இடையே எந்தவொரு முரண்பாடும் கிடையாது.

அதேநேரம் ஆட்சி அமைப்பதற்குத்தான் ஆதரவே தவிர ஆட்சியை எப்படி வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளலாம் என்பதற்கல்ல. மக்கள் மீது ஒடுக்குமுறை, கருத்துச் சுதந்திரத்தின் மீது பாதிப்பு வருகிறதென்றால், மாநில உரிமைகளுக்குச் சிக்கல் வருகிறதென்றால், அந்த நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்தே வந்திருக்கிறது.

கரூர் சம்பவத்தில் பலியானோர் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலை வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டுமெனக் கட்சி அறிக்கை வெளியிட்டது. வழக்கைப் பலவீனப்படுத்துமென்பதால் இந்த அறிக்கை. பல்கலைக் கழக துணை வேந்தர் நியமனக் குழுவில் பல்கலைக் கழக மானியக் குழுவின் பிரதிநிதியைச் சேர்ப்பதை எதிர்க்கிறோம்.

மார்க்சிஸ்ட் கட்சியோ அல்லது தமுஎகசவோ கருத்து சுதந்திரத்தில் எப்போதும் சமரசம் செய்து கொண்டதே இல்லை. அதேநேரம் தமுஎகச-வில் இருக்கும் எல்லோரும் கம்யூனிஸ்டும் அல்ல. அது ஒரு சுதந்திரமான அமைப்பு. இந்த இரண்டிலும் ஒருசேர பயணிப்பது சாதாரணமான விஷயம்தான். இதில் முரண்பாடு எழுமென நீங்கள் யோசிக்கத் தேவையில்லை'' என்றவரிடம் தொடர்ந்து கேள்விகளை வைத்தோம்.

CPM
CPM

கம்யூனிஸ்ட் கட்சிகளின் அரசியல் முடிவுகளில் தமுஎகச தன்னுடைய கருத்தை உரக்கச் சொல்வதுண்டா?

''தமுஎகசவில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் கம்யூனிச இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் இல்லை என ஏற்கனவே குறிப்பிட்டேன். இங்கு கட்சிகள் சாராத எழுத்தாளர்கள் கூட இருக்கிறார்கள். எனவே கம்யூனிஸ்ட் கட்சிகளின் அரசியல் நிலைப்பாடுகளில் தமுஎகசவின் கருத்து எனத் தொடர்புபடுத்தத் தேவையில்லை.

பொதுவாக தமிழ் சமுகத்தின் அரசியல், பண்பாட்டு வெளிகளில் பிரச்னைகள் வரும்போது தமுஎகச தொடர்ந்து பேசி வந்திருக்கிறது. இனியும் பேசும்.

திமுக கொடி
திமுக கொடி

எழுத்தாளர்களுக்கு உகந்தது திமுக அரசுதான் என்கிறார்கள் சிலர். ஜெயமோகன் கூட திமுக ஆட்சியில் எழுத்தாளர்கள் ஆட்சியின் புகழ் பாடும் பாணர்களாக இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறாரே?

''மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு அது. தவெக அரசின் குறைகளைத் தவறான போக்குகளைச் சுட்டிக்காட்டுபவர்களை திமுக ஆதரவாளர்கள் என முத்திரை குத்தும் செயல் இது. எந்த அரசு அமைந்தாலும் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சமூகத்திலிருக்கும் பிரச்னைகளை நாங்கள் கோரிக்கையாக வைப்பது வழக்கம்.

திமுக அரசில் கூட பண்பாட்டு நிகழ்ச்சிகளில் காவல்துறையின் நேரக் கட்டுப்பாட்டைத் தளர்த்தக் கோரிக்கை வைத்தோம். அதற்கு திமுக அரசு காது கொடுக்கவே இல்லை. ஆனால் சாகித்ய அகாடமியின் நடவடிக்கையில் மத்திய அரசு அத்துமீறி தலையிட முயன்றபோது தமிழக எழுத்தாளர்களின் குரலை மு.க.ஸ்டாலின் வெளிப்படுத்தினார்.

எனவே யார் ஆட்சியிலிருந்தாலும் அவர்கள் கருத்துச் சுதந்திரத்தை ஆதரிக்கிறார்களா இல்லையா என்பதைப் பொறூத்தே எழுத்தாளர்களின் ஆதரவு நிலைப்பாடே ஒழிய, எந்தவொரு கட்சிக்கும் நிரந்தரமாக முட்டுக் கொடுக்க வேண்டுமென்று எந்தவொரு எழுத்தாளருக்கும் அவசியமில்லை.

திமுக அரசு நூலகங்கள், தொல்லியல் ஆய்வுகளுக்குத் தந்த முக்கியத்துவங்களை நாங்கள் பாராட்டினோம். அதற்காக அவர்கள் செய்த எல்லாவற்றையம் ஆதரிக்க வேண்டிய அவசியம் எழுத்தாளர்களுக்கோ தமுஎகசவுக்கோ இல்லை.

ஜெயமோகன் ரீல்ஸ் எடுத்து வரும் அமைச்சர் கீர்த்தனாவுக்குக்கூட முட்டுக் கொடுத்து வருகிறார். அதிகாரத்தை அண்டிப் பிழைக்கும் குணம் இது. ஆனால் பேச்சு மட்டும் அறம் முறம் என இருக்கும். விஜய் மல்லையா நாட்டின் பொதுச் சொத்தைச் சுருட்டி விட்டு வெளிநாடு தப்பிய போது அவரை 'தோல்வியடைந்த தொழில் முனைவர்' எனக் குறிப்பிட்டவர்தான் ஜெயமோகன். எனவே அவரது இந்த மாதிரியான பேச்சுகளையெல்லாம் பொருட்படுத்த வேண்டாம் என்று நினைக்கிறேன்.

vijay
vijay

தவெகவில் எல்லோருமே அரசியலுக்குப் புதியவர்கள். அவகாசம் கொடுக்கலாம் என்கிற ஒரு கருத்தும் இங்கு இருக்கிறதே?

''அதிகாரத்துக்கு வருகிறபோதே அவர்களை விமர்சித்தவர்களைக் கட்டம் கட்டித் தூக்குகிற வேலையை ஆட்சியமைக்கும் நாளுக்கு முதல் நாள் தொட்டே தொடங்கியவர்கள்தான் இவர்கள். யூடியூபர்களைக் கைது செய்ததெல்லாம் நடந்ததா இல்லையா? கருத்தை வெளிப்படுத்த உங்களுக்குக் கிடைத்த சுதந்திரத்தால்தான் நீங்க‌ இன்று ஆட்சியே அமைச்சிருக்கீங்க. ஆனா ஆட்சியில் அமர்ந்ததும் அதே கருத்துச் சுதந்திரத்தை அனுமதிக்க மறுத்தால் அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

அனுபவம் வாய்ந்த அதிகாரிகளை அருகில் வைத்துக் கொள்வதற்குப் பதில் உங்களது ஜோதிடரை நியமித்துக் கொள்வதையும், தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக உங்களது படத்தைத் தயாரித்த கன்னடத் தயாரிப்பாளரை நியமிப்பதையும் எப்படிக் கேட்காமல் இருக்க முடியும்.

விமர்சனத்தை எதிர்கொள்ள முடியாதபோது, கேட்கிறவர்களுக்கு வாய்ப்பூட்டு போட முயற்சிக்கிறார்கள் இன்றைய ஆட்சியாளர்கள். வரலாறு நெடுக இப்படி நிறைய பேர் முயற்சி செய்திருக்கிறார்கள். அவர்கள் யார் என்றால் செயல் திறனற்றவர்கள், ஆளுமைப் பண்பு இல்லாதவர்கள்.

தகுதிக்கு மீறி கிடைத்து விட்ட அதிகாரத்ததைத் தக்க வைக்க முரட்டுத்தனமான சர்வாதிகாரத்தை ஏவி விடுகிறார்கள். இவர்களுக்கெல்லாம் கால அவகாசம் என்பது தேவையில்லை''

பெங்களூரு: ``சில்லறை இல்லை...'' - அமைச்சரையே பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட நடத்துநர்!

பெங்களூரு மாநகரப் பேருந்துகளில் பொதுமக்கள் சந்திக்கும் அன்றாடப் பிரச்னைகளைக் கண்டறிய, கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர் பைரதி சுரேஷ் சனிக்கிழமை அன்று முகக்கவசம் அணிந்து, சாதாரணப் பயணியைப் போல ரகசிய... மேலும் பார்க்க

விசிக: ``அப்படி கூறுபவர்கள் நம்மை அடிமையாகவே பார்க்கிறார்கள்" - திருமாவளவன் காட்டம்

விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில், திருவண்ணாமலையில் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு மண்டலக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் உரையாற்றிய விசிக தலைவர் திருமாவளவன், ``தமிழ்நாட்டு அரசியலில் நாம் குறி வைக்கப... மேலும் பார்க்க

'நான் சிங்கப்பூருக்கு ஓடி, ஒளிந்துவிட்டேனா?' - முதல்வர் விஜய்யின் விமர்சனத்திற்கு எ.வ.வேலு பதிலடி

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவர் தொடர்பு உடையவர்களின் வீடுகளில் கடந்த ஜூன் 25-ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். அடுத்த நாளான 26-ம் தேதி எ.வ.வேலு சிங்கப்பூர் சென்றார். இதனிடையே ந... மேலும் பார்க்க

“தவெக-வினர் ஸ்க்ரிப்ட்டுக்கு வாயசைக்கிறார் தோழர் பெ.சண்முகம்” - பரந்தாமன் 'பகீர்' குற்றச்சாட்டு

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பத்தினருக்கு, அரசு வேலைக்கான ஆணையை முதல்வர் விஜய் வழங்கியதைத் தொடர்ந்து, ‘கடைத் தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைக்கிறார் முதல்வர்’ என எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்... மேலும் பார்க்க

``துரதிர்ஷ்டவசமாக தமிழ்நாட்டில் குருகுல கல்வியைச் செயல்படுத்த முடியவில்லை" - ஆளுநர் அர்லேக்கர்

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைஷ்ணவ் கல்லூரியின் (தன்னாட்சி) 59-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாட்டின் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முதன்மை ... மேலும் பார்க்க

சரத்பவார் கட்சி எம்பி-க்கள் 6 பேர் பாஜக கூட்டணிக்குத் தாவ முயற்சி? காங். தலைவர் கருத்தால் சலசலப்பு

மகாராஷ்டிராவில் ஏற்கனவே சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உடைந்து இரு கட்சிகளாகச் செயல்பட்டு வருகின்றன. சமீபத்தில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவைச் சேர்ந்த 6 எம்.பி.க்... மேலும் பார்க்க