'ஏழைகளுக்கு உதவுவார் எனக் கேள்விப்பட்டேன்' - சல்மான் கானிடம் பண உதவி பெற வந்த பெ...
இன்ஸ்டாவில் உறவுக்காரப் பெண்ணை Follow செய்த நபர்; கொலையில் முடிந்த பேச்சுவார்த்தை; குஜராத்தில் பகீர்
குஜராத் மாநிலம் போடாட் மாவட்டத்தில் இன்ஸ்டாகிராமில் பெண்ணிற்குக் கொடுக்கப்பட்ட நட்பு கோரிக்கை கொலையில் முடிந்துள்ளது.
காஸ் என்ற கிராமத்தைச் சேர்ந்த சித்தராஜ், சக்திசிங் என்பவரின் உறவினரான ஒரு பெண்ணுக்கு இன்ஸ்டாகிராமில் நட்பு கோரிக்கை அனுப்பினார். இது குறித்து அப்பெண் சக்திசிங்கிடம் தெரிவித்ததாகத் தெரிகிறது. இதனால் சக்திசிங் கடுமையான ஆத்திரமடைந்துள்ளார்.
இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நாட்களாக பகை இருந்து கொண்டிருந்தது. இந்த மோதலைத் தீர்த்துக்கொள்ளலாம் என்று கூறி சக்திசிங், சித்தராஜைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.

இருப்பினும், அங்கு சென்றால் ஆபத்து நேரலாம் என்று சித்தராஜின் நண்பர் சத்யராஜ் போரிச்சா எச்சரித்ததால், சித்தராஜ் அந்தப் பேச்சுவார்த்தைக்குச் செல்லாமல் தவிர்த்தார்.
அதற்குப் பதிலாக, இந்தப் பிரச்னையைச் சுமுகமாக முடித்து வைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் சத்யராஜ், ஹர்பால் மற்றும் அக்சய் ஆகிய மூவரும் அந்தச் சமாதானக் கூட்டத்திற்குச் செல்ல முடிவெடுத்தனர். மூன்று நண்பர்களும் குறிப்பிட்ட அந்த இடத்திற்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று சேர்ந்தனர்.
புகாரின்படி, சக்திசிங் மற்றொரு நபருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் அங்கு வந்துள்ளார். அவரைத் தொடர்ந்து, மேலும் மூன்று கூட்டாளிகள் இரண்டாவது பைக்கில் அங்கு வந்து இறங்கினர்.
பேச்சுவார்த்தை தொடங்கிய சில நிமிடங்களிலேயே அது கடுமையான வாக்குவாதமாக மாறி அடிதடியில் ஏற்பட்டது. அப்போது தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் திடீரென கத்தியை எடுத்து ஹர்பாலின் நெஞ்சில் சரமாரியாகக் குத்தியுள்ளார். பின்னர், அதே நபர் அக்சயையும் இதேபோன்று கொடூரமாகக் குத்தியுள்ளார்.
அதே நேரத்தில், மற்றொரு குற்றவாளி சத்யராஜின் நெஞ்சில் கத்தியால் குத்தியுள்ளார். எஞ்சியிருந்த கும்பல் அந்த மூன்று இளைஞர்களையும் கைகளாலும் கால்களாலும் பயங்கரமாகத் தாக்கியது. அங்கு மக்கள் கூடத் தொடங்கியதாலும், விஷயம் கேள்விப்பட்டு சித்தராஜும் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்ததாலும் தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.
காயமடைந்த இளைஞர்கள் உடனடியாக போடாட்டில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர், அங்கு ஹர்பால் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
தகராறைக் தீர்க்க நடந்த சமாதானக் கூட்டத்தில், ஐந்து பேர் கொண்ட கும்பல் நடத்திய கொடூரத் தாக்குதலில் ஹர்பால் பரிதாபமாக உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொடூரமான சம்பவத்தில் கொல்லப்பட்ட ஹர்பாலுக்கும்
இந்த இன்ஸ்டாகிராம் மோதலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர் தனது நண்பனுக்காகச் சமாதானம் பேசச் சென்ற இடத்திலேயே தனது உயிரை இழந்துள்ளார்.
போடாட் நகர காவல்துறை சக்திசிங் தயாமா மற்றும் அவரது கூட்டாளிகள் நான்கு பேர் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ் கொலை, கொலை முயற்சி, கலவரம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












