Retirement: 'பாதுகாப்பு + வளர்ச்சி+ இரண்டாவது வருமானம்'- அரசு ஊழியர்களுக்கான ஓய்...
”அண்ணாமலை போன்ற ஒரு நல்ல தலைவரை பாஜக புறந்தள்ளிவிட்டது” - பாஜக நிர்வாகி ஆதங்கம்
தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் பலரும் இணைந்து வருகின்றனர். பா.ஜ.க-வைச் சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள், அண்ணாமலை இயக்கத்தில் இணைந்து வருகின்றனர்.
இதற்கிடையில், பா.ஜ.க மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் மீதான அதிருப்தியால், பல்வேறு மாவட்ட தலைவர்கள், மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் பலரும் அண்ணாமலை இயக்கத்திற்குச் செல்ல தயாராகி, பா.ஜ.க-வில் இருந்து விலகி, அண்ணாமலை இயக்கத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் நடத்தி பா.ஜ.க-வில் உள்ள அதிருப்தியாளர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பண்ணைவயலைச் சேர்ந்தவர் பா.ஜ.க பிரமுகர் பண்ணைவயல் இளங்கோ. இவர் கடந்த 2016 முதல் 2021ம் ஆண்டு வரை பா.ஜ.க-வில் மாவட்ட தலைவராகவும், தற்போது மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும் உள்ள நிலையில், அக்கட்சியில் இருந்து விலகி அண்ணாமலை இயக்கத்தில் இணைய உள்ளார்.
மேலும், அதிருப்தி பா.ஜ.க முன்னாள், இன்னாள் மாவட்ட தலைவர்களுடன், வரும் 14ம் தேதி அண்ணாமலையைச் சந்திக்க திட்டமிட்டுள்ளவர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியிருப்பது பா.ஜ.க வட்டாரத்தில் சலசலப்பைக் கிளப்பியிருக்கிறது.
இதைத் தொடர்ந்து பண்ணைவயல் இளங்கோ நிருபர்களிடம் கூறியதாவது: ''அண்ணாமலை, திராவிட இயக்கங்களுக்குச் சிம்ம செப்பனமாகவும், தமிழகத்தில் எம்.எல்.ஏ இல்லை என்றால் கூட, எதிர்க்கட்சி என்ற ஒரு அந்தஸ்தை உருவாக்கினார்.
அப்படிப்பட்ட ஒரு தலைவரை பா.ஜ.க புறந்தள்ளி, திராவிட சித்தாந்தத்தோடு பயணித்து வருகிறது. 2026 சட்டசபை தேர்தலில் பா.ஜ.க படுதோல்விக்கு, இன்றைக்கு பா.ஜ.க தலைவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை.

கட்சித் தலைவர்கள் தவறான வழிகாட்டுதலால், பா.ஜ.க இல்லாத இடத்தில், சட்டமன்றத் தேர்தலில், தொகுதியை வாங்கிக்கொண்டு வேட்பாளரை நிறுத்திய, மிகப்பெரிய ஒரு மோசமான நிலைக்கு, பா.ஜ.க-வில் உள்ள தலைவர்கள் உருவாக்கி விட்டார்கள்.
தொடர்ந்து இவர்களோடு பா.ஜ.க-வும், நாங்களும் பயணித்தால், மோசமான ஒரு நிலைக்கு கட்சி போய்விடும். தமிழகத்தைக் காப்பாற்ற முடியாத என்கிற ஒரு அச்சத்தினால், அண்ணாமலை இயக்கத்தில் சேர உள்ளோம்.
தமிகத்திற்கு ஒரு மாற்று அரசியல் தேவை. இதனால், அண்ணாமலையின் கொள்கை பிடித்து, அவரது இயக்கத்திற்குச் செல்கிறோம். தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இணைய உள்ளனர். பா.ஜ.க வேட்டியைத் தவிர, என்னிடம் வேறு வேட்டி கிடையாது.
ஒரு கொள்கை பிடிப்போடு ஒரு சிந்தனையோடு செயல்பட்டுக் கொண்டிருந்த நான் அந்தக் கரை வேட்டியைக் கட்டாத நிலைக்கு பா.ஜ.க-வை வழிநடத்தியவர்கள் கொண்டு சென்று விட்டனர். மன வேதனையோடு, மன இருக்கத்தோடு நானும், என்னை போன்றவர்களும் செல்கிறோம்.

தமிழகம் முழுவதும் பல மாவட்ட தலைவர்கள் அண்ணாமலை இயக்கத்தில் இணைய தயாராக உள்ளனர். விரைவில், சென்னை அல்லது மதுரையில் கூட உள்ளோம். இதற்காகச் சுற்றுப்பயணம் செய்து, அண்ணாமலை மேல் உள்ள பிரியர்களை இந்த இயக்கத்திலே இணைத்து ஒரு மாபெரும் சக்தியாக உருவாக்குவோம்.
முன்னாள் மாவட்டத் தலைவர் 15க்கும் மேற்பட்டவர்களும், இன்றைக்கு மாவட்டத் தலைவராக உள்ள சிலரும், என்னிடம் பேசி வருகிறார்கள். ஓரிரு தினங்களில், 50க்கும் மேற்பட்ட முன்னாள், இன்னாள் மாவட்டத் தலைவர்கள் இணைய உள்ளனர். வரும் 14 ம் தேதி அண்ணாமலையைச் சந்திக்க உள்ளோம்'' என்றார்.













