''717 மதுபான கடைகள் மூடப்பட்டதால் அரசுக்கு ரூ. 11 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு'' -...
``காங்கிரஸ் அணுகுமுறையை மாற்ற வேண்டும்" - திருமாவளவன் விமர்சனம்; மாணிக்கம் தாகூரின் பதில் என்ன?
இந்தியாக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடந்து முடிந்தது. இந்தக் கூட்டம் நடப்பதற்கு முன்பு விசிக தலைவர் திருமாவளவன் தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்திருந்தார்.
அந்தப் பேட்டியில், `` சமீபத்திய தேர்தல்களின் போது காங்கிரஸ் கட்சி கையாண்ட அணுகுமுறை, ‘இந்தியா’ கூட்டணியின் பல உறுப்புக்கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் உத்தி, இந்தக் கூட்டணியின் வலுவான தூண்களாகத் திகழும் திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் தி.மு.க உள்ளிட்ட கட்சிகளை பலவீனப்படுத்தியுள்ளது.

இது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்ற பெரிய நோக்கத்திற்கு உகந்ததும் அல்ல, நன்மை பயப்பதும் அல்ல. எனவே, காங்கிரஸ் கட்சி தனது அணுகுமுறையை நேர்மையுடன் மறுபரிசீலனை செய்ய வேண்டும் மற்றும் கூட்டணியை மேலும் வலுப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் வழிகளை ஆராய வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
திருமாவளவனின் விமர்சனத்துக்குப் பதிலளித்திருக்கும் காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர், ``விசிக தலைவர் அவர்கள் கூறிய கருத்து ஆச்சரியமாக உள்ளது. கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தனது கட்சியை வலுப்படுத்த முயற்சிப்பது எப்படி கூட்டணியைப் பலவீனப்படுத்தும் செயலாகும்? ஒவ்வொரு கூட்டணிக் கட்சிக்கும் தங்களது அமைப்பையும் வாக்கு வங்கியையும் வளர்த்துக்கொள்ளும் உரிமை உள்ளது.
காங்கிரஸ் வலுவாக இருந்தால்தான் INDIA கூட்டணி வலுவாக இருக்கும். அதேபோல் திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் பிற கூட்டணிக் கட்சிகள் வலுவாக இருப்பதும் கூட்டணிக்கே பலம். கூட்டணியின் நோக்கம் ஒரு கட்சியின் வளர்ச்சியை மற்றொரு கட்சி தடுக்க வேண்டும் என்பதல்ல. அனைவரும் தங்கள் அரசியல் அடித்தளத்தை விரிவுபடுத்தி, பொதுவான இலக்குகளுக்காக ஒன்றிணைந்து செயல்படுவதுதான்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனது அடையாளத்தையும் அமைப்பையும் வலுப்படுத்த முயற்சிப்பதை கூட்டணி எதிர்ப்பாக சித்தரிப்பது சரியல்ல. கூட்டணியில் மரியாதையும் பரஸ்பர அங்கீகாரமும் இருக்க வேண்டும். காங்கிரஸை பலவீனப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் INDIA கூட்டணியை வலுப்படுத்தாது; மாறாக பாஜகவுக்கு மட்டுமே உதவும். மேலும், இது காங்கிரஸ் கட்சி பின்பற்றும் ஜனநாயக அரசியல் கலாசாரத்தின் ஒரு எடுத்துக்காட்டு.

INDIA கூட்டத்தில் பங்கேற்று எங்களை விமர்சிக்கலாம்; எங்கள் செயல்பாடுகளில் குறைகளைச் சுட்டிக்காட்டலாம். அந்த விமர்சனங்களைக் கேட்கும் தைரியமும், அவற்றை ஜனநாயக ரீதியாக எதிர்கொள்ளும் மனப்பக்குவமும் காங்கிரஸுக்கு உண்டு. அதனால்தான் கூட்டணிக்குள் இருக்கும் தோழமைக் கட்சித் தலைவர்கள்கூட காங்கிரஸை வெளிப்படையாக விமர்சிக்க முடிகிறது.
ஆனால் கருத்து வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், மதவாத மற்றும் பிளவுவாத சக்திகளுக்கு எதிரான எங்கள் போராட்டத்தை அவைப் பலவீனப்படுத்தாது. ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் பாதுகாக்கும் பெரிய இலக்கிற்காக காங்கிரஸ் தொடர்ந்து போராடும்.
காங்கிரஸின் வளர்ச்சி கூட்டணிக்கு அச்சுறுத்தல் அல்ல; அது கூட்டணியின் மொத்த வலிமையை அதிகரிக்கும் ஒரு அவசியம். ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் காக்கும் சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய இந்த நேரத்தில், ஒருவரின் வளர்ச்சியை மற்றொருவர் அச்சமாகப் பார்க்காமல், அதை கூட்டணியின் பலமாகப் பார்க்க வேண்டும்.
இந்தியாவின் பன்முகத்தன்மையையும் அரசியலமைப்புச் சாசனத்தின் மதிப்புகளையும் காக்கும் போராட்டத்தில் அதுவே சரியான அணுகுமுறையாகும்" எனப் பதிலளித்திருக்கிறார்.












