Parvathy: ``கொலை, பாலியல் வன்கொடுமை மிரட்டல்களுக்கு ஆளானேன்" - நடிகை பார்வதி திர...
"அண்ணாமலைக்கும், ஆட்டு மந்தை போல் பின்னால் போனவர்களுக்கும் பாஜக-வின் கொள்கை புரியவில்லை" - இப்ராஹிம்
"பள்ளிகளில் இந்து மத அடையாளங்களுக்கு அனுமதி மறுக்கப்படும் சூழலில், இஸ்லாமிய நம்பிக்கையான புர்காவிற்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கப்படுகிறது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக சிறுபான்மை அணியின் தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம்.

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் மற்றும் சிறுபான்மை அணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளது.
சொன்னபடி சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியுள்ளோம். அயோத்தியில் நீதிமன்றத் தீர்ப்பின்படி ராமர் கோயிலைக் கட்டியுள்ளோம். கடந்த 12 ஆண்டுகளில் 25 கோடி ஏழை மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழேயிருந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளனர்.
ஊழல் இல்லாமல் ஒரு பிரதமர் இருப்பதே இந்த நாட்டில் பெரிய ஆச்சரியம்தான். அதுமட்டுமின்றி கடந்த 12 ஆண்டுகளில் அமைச்சரவையில் ஒருவர் மீது கூட ஊழல் குற்றச்சாட்டு இல்லாமல் தூய்மையான ஆட்சி நடத்தியிருக்கிறார்.
மாநிலங்களுக்கான உரிமைகளை மதித்து ஜனநாயகம் காக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒரு மாநிலத்தில் கூட ஆட்சியைக் கலைத்ததில்லை.

நம்பி வாக்களித்த மக்களுக்கு சொன்ன வாக்குறுதிகளை விஜய் நிறைவேற்றினாரா? ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடம் தமிழகம் முழுக்க பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றினாரா? இதுதான் கவர்ச்சி அரசியல்.
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்த மூன்றாவது நாளே பெண்களுக்கு இலவசப் பேருந்து பயண வாக்குறுதியை நிறைவேற்றப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 1 கோடியே 30 லட்சம் ஏழைப் பெண்களுக்கு மாதம் ரூ. 1500 வழங்கும் திட்டம் தடையின்றி செயல்படுகிறது.
தமிழகத்தில் பாட்டிலுக்கு ரூ. 10 வசூலிப்பதாகப் பாட்டுப் பாடிய விஜய், இன்று எல்லா மதுக்கடையிலும் கூடுதலாக ரூ. 20 வசூலிப்பதைத் தடுக்கவில்லை. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கரூர் வரை சென்று கிண்டல் செய்தார்கள். ஆனால் இன்று மதுவிலக்குத்துறை அமைச்சராக இருக்கும் விக்னேஷின் கிணத்துக்கடவு தொகுதியில், பேருந்து நிலையம், பள்ளிக்கூடங்கள் அருகிலேயே சாராயக் கடைகள் செயல்படுகின்றன. பாட்டிலுக்கு ரூ. 20 கூடுதலாக வசூலிப்பதை நான் ஆதாரத்தோடு வெளியிட்டேன்.

பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் குஜராத், பீகார், நாகாலாந்து போல் முழுமையான மதுவிலக்கு கொண்டு வரப்படும். உத்தரப் பிரதேசத்தைப் போலத் தமிழகத்திலும் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
இங்கு தவெக நிர்வாகி ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மாவுக்கட்டு போடவில்லை.
பள்ளிகளில் ஹிந்து மத அடையாளங்களுக்கு அனுமதி மறுக்கப்படும் சூழலில், இஸ்லாமிய நம்பிக்கையான புர்காவிற்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கப்படுகிறது?
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விஷயத்தில் திமுக, இந்துக்களின் மனதைப் புண்படுத்தியது போல நாங்களும் செய்வோம் என இவர்கள் பேசுகிறார்கள். திமுக-வின் கொள்கைதான் இவர்கள் கொள்கை என்றால் என்ன மாற்றத்தைக் கொண்டு வரப் போகிறார்கள்?
கொள்கை இல்லாதவர்களால் கட்சியில் நீடிக்க முடியாது. பாஜக-வில் தேசம் முதன்மையானது என்ற மனப்பான்மையோடுதான் இணைவார்கள். அண்ணாமலையாக இருக்கட்டும், அவர் பின்னால் போகும் ஆட்டு மந்தையாக இருக்கட்டும், அவர்களுக்கு கட்சியின் கொள்கை புரியவில்லை.
ஊடகங்களில் சரளமாகப் பேசி, எதிர்க்கட்சிகளைத் தாக்கினால் மட்டும் போதும் என நினைக்கிறார்கள். அப்படி நினைத்தவர்கள் வெளியேறியுள்ளனர், இதனால் பாஜகவிற்கு எந்த இழப்பும் இல்லை.
கடந்த காலத்தில் கல்யாண் சிங், உமாபாரதி, எடியூரப்பா போன்ற பெரும் தலைவர்கள் கட்சியை விட்டுச் சென்றாலும், மீண்டும் திரும்பி வந்தனர். சித்தாந்த அடிப்படையில் அண்ணாமலை பேசியது உண்மையாக இருந்தால் தெளிவு பெற்று திரும்புவார், சில்லறைகளுக்காகச் சென்றிருந்தால் வரமாட்டார், அப்படிப்பட்டவர்கள் எங்களுக்குத் தேவையும் இல்லை" என்றார்.
















