பழைய Actorகிட்ட இருக்கிற dedication புதுசா வர்றவங்ககிட்ட...! - Actress Egavalli ...
"அந்த மாடல் பொண்ணுகிட்ட நான் உங்களுக்காக மன்னிப்பு கேட்குறேன்"- காங்கிரஸை காட்டமாக விமர்சித்த கங்கனா
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று (டிச.10) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மீதான விவாதம் நடைபெற்றது. இதில் நடிகையும், பா.ஜ.க. எம்.பி-யுமான கங்கனா ரணாவத் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாடாளுமன்றத்தில் கங்கனா ரணாவத் பேசுகையில், " இந்த ஆண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தினசரி இடையூறுகள் மிகுந்த கவலை அளிக்கக்கூடியதாக இருக்கிறது.
SIR குறித்த விவாதத்தின்போது கத்திக் கூச்சலிட்டு மிரட்ட முயன்றனர். இரண்டு அல்லது மூன்று நாட்களைத் தவிர, அவர்கள் அவையை நடத்தவே விடவில்லை.
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையை ஒரு திரையரங்கு போல் மாற்றிவிடுகின்றனர். பிரதமர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யவில்லை.
மாறாக, மக்களின் இதயங்களை ஹேக் செய்துவிட்டார் என்பதை காங்கிரஸ் கட்சியினரிடம் நான் சொல்லிக் கொள்கிறேன். வாக்குச்சீட்டு முறையை திரும்பக் கொண்டு வர வேண்டும் என்று கேட்கிறார்கள்.
அது காலாவதியான நடைமுறை ஆகிவிட்டது. ஹரியானா தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி ஒரு வெளிநாட்டுப் பெண்ணின் புகைப்படத்தை எதிர்க்கட்சியினர் காட்டுகிறார்கள்.
அந்த பெண், இதுவரை இந்தியாவிற்கு ஒருமுறைகூட வந்தது இல்லை என்றும், தனக்கும் இந்தியாவில் நடக்கும் தேர்தல்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும் சமூக ஊடகங்களில் பலமுறை விளக்கமளித்துவிட்டார்.
ஆனால் இவர்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் அந்த பெண்ணின் புகைப்படத்தை அவையில் காட்டுகிறார்கள். நாடாளுமன்ற அவைக்குள் பதாகைகளைக் காட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது.

ஒரு பெண்ணாக, மற்றொரு பெண்ணின் கண்ணியத்தை நான் மிகவும் மதிக்கிறேன். இவர்கள் சார்பாக அந்த வெளிநாட்டுப் பெண்ணிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
`பழைய விஷயங்களை விடுங்கள்' எனக் கூறும் பிரியங்கா காந்தியிடம் நான் ஒன்றைக் கேட்கிறேன். உங்கள் தாயாரான சோனியா காந்தி, 1983-ஆம் ஆண்டுதான் இந்தியக் குடியுரிமை பெற்றார்.
ஆனால் அதற்கு முன்பே வாக்களித்தார். பிரியங்கா காந்தி இதனை நினைவில் கொள்ள வேண்டும். முன்பும் சரி, இப்போதும் சரி, உங்கள் குடும்பம் நாட்டின் சட்ட ஒழுங்கை மதித்ததில்லை" என்று காட்டமாகப் பேசியிருக்கிறார்.














