பழைய Actorகிட்ட இருக்கிற dedication புதுசா வர்றவங்ககிட்ட...! - Actress Egavalli ...
யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்த டாக்டர்; பலியான பெண் - விசாரணையில் வெளிவந்த திடுக் உண்மைகள்!
உத்தரப்பிரதேசத்தில் வயிற்றுவலி காரணமாக கிளினிக்கில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவர் யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்ததில் அப்பெண் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில், அந்த மருத்துவர்கள் போலி மருத்துவர்கள் என்றும், அது அங்கீகரிக்கப்படாத கிளினிக் என்றும் அதிர்ச்சிகர உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

முன்னதாக ஃபதே பகதூர் என்பவரின் மனைவி முனிஷ்ரா ராவத்துக்கு டிசம்பர் 5-ம் தேதி கடும் வயிற்றுவலி ஏற்பட்டிருக்கிறது.
இதனால், ஃபதே பகதூர் தனது மனைவியை பாராபங்கியில் கியான் பிரகாஷ் மிஸ்ரா, விவேக் மிஸ்ரா ஆகியோரின் ஸ்ரீ தாமோதர் அவுஷதாலயா கிளினிக்குக்கு அழைத்துச் சென்றார்.
அப்போது, கியான் பிரகாஷ் அந்தப் பெண்ணின் வயிற்று வலிக்கு சிறுநீரகக் கற்கள்தான் காரணம் என்றும், அறுவை சிகிச்சைக்கு ரூ.25,000 ஆகும் என்றும் கணவரிடம் கூறினார். பின்னர், அதை ரூ.20,000-ஆகக் குறைத்தார்.
அடுத்தநாள் கியான் பிரகாஷ் போதையில் யூடியூப் வீடியோவைப் பார்த்துக்கொண்டே அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ததில் பெண்ணின் வயிற்றில் பல நரம்புகள் வெட்டப்பட்டன.
நிறைய காயங்களும் ஏற்பட்டன. இதனால் கடும் வலியால் துடித்த அப்பெண் மறுநாளே பரிதாபமாக உயிரிழந்தார். அதோடு, அந்த மருத்துவர்களும் அவரது குடும்பத்தினரும் அப்பெண்ணை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்.
பின்னர், உயிரிழந்த பெண்ணின் கணவர் உள்ளூர் காவல் நிலையத்தில் புகாரளிக்க போலீஸார் உடனடியாக அந்த கிளினிக்குக்கு சென்றனர்.

கிளினிக்கை போலீஸார் ஆய்வு செய்ததில் அது அங்கீகரிக்கப்படாத கிளினிக் என்றும், அங்கிருந்தவர்கள் போலி மருத்துவர்கள் என்றும் தெரியவந்தது.
மறுபக்கம் உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. மேலும், அந்த போலி கிளினிக்கின் உரிமையாளர்கள் இருவர் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டது.
இது குறித்து பேசிய காவல்துறை அதிகாரி அமித் சிங் பதூரியா, ``சம்பவம் பற்றி அறிந்ததும், அந்த அங்கீகாரம் இல்லாத அந்த கிளினிக்கை நாங்கள் ஆய்வு செய்தோம்.
அது மூடப்பட்டிருந்ததால் அதன் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறோம். குற்றம்சாட்டப்பட்டவர்கள் தற்போது தலைமறைவாக இருக்கின்றனர். இருப்பினும், அவர்களை உடனடியாகக் கைது செய்வோம்" என்று உறுதியளித்திருக்கிறார்.

















