"நீண்ட நாள்களுக்கு முன்பே கட்சித் தலைமைக்குச் சொல்லிவிட்டேன்" - ஊகங்களுக்கு விளக...
'அவங்க சரியா ஆடாததாலதான் தோத்த்தோம்!' - யாரை சொல்கிறார் ருத்துராஜ்?
சேப்பாக்கத்தில் நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. ராஜஸ்தானுக்கு எதிரான கடந்த போட்டியிலும் சென்னை அணி தோற்றிருந்தது.

தோல்வி குறித்து ருத்துராஜ் பேசியதாவது, 'உண்மையைச் சொல்லப்போனால், 209 ரன்கள் என்பது ஒரு நல்ல ஸ்கோர். இந்த மைதானத்தின் எல்லைகள் பெரியவை என்பதால், இந்த இலக்கை வைத்து வெல்ல முடியும் என்று நம்பினோம். ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைத்தது. அதே சமயம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பந்து சற்று க்ரிப் கொடுத்தது.
நாங்கள் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கினோம். பவர்ப்ளே முடிந்த பிறகு, மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஜோடியாகச் செயல்படுவது எங்களுக்கு உதவும் என்று நினைத்தோம். ஆனால், இருவருக்குமே இது ஒரு கடினமான நாளாக அமைந்துவிட்டது. துரதிர்ஷ்டவசமாக அவர்கள் சரியாகச் செயல்படாததுதான் எங்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
பந்துவீச்சில் எங்களால் அழுத்தத்தை உருவாக்க முடியவில்லை. இதனால் தேவைப்படும் ரன் ரேட் உயராமல் பார்த்துக் கொண்டனர். வெற்றிக்கு தேவைப்படும் ரன் ரேட் 11-ல் இருந்து 12 அல்லது 13-க்கு உயர்ந்தால்தான் எதிரணி பதற்றமடையும். அந்த மொமண்டம் எங்களுக்கு கிடைக்கவே இல்லை.

இந்தத் தோல்வியிலும் சில நல்ல விஷயங்கள் நடந்தன. முக்கியமாக எங்களது பேட்டிங் மிகச்சிறப்பாக இருந்தது. ஆயுஷ் அற்புதமாக விளையாடினார். அது அவருக்கு இந்த சீசனில் பெரும் தன்னம்பிக்கையைத் தரும். சிவம் துபேயும் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார். எனது பேட்டிங்கை பொறுத்தவரை, ஆடுகளத்தின் தன்மைக்கேற்பவும், அணியின் தேவைக்கேற்பவும் என்னை மாற்றிக்கொண்டு விளையாட முயற்சிக்கிறேன். ஆயுஷ் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்ததால், நான் ஒரு முனையில் நிலைத்து நின்று ஆடினால் பிறகு ரன்களை உயர்த்தலாம் என்று நினைத்தேன். ஆனால் தவறான நேரத்தில் அவுட் ஆகிவிட்டேன்.
ஒட்டுமொத்தமாக, பேட்டிங்கில் திருப்தி அடைந்தாலும், பந்துவீச்சில் இன்னும் நிறைய முன்னேற்றங்கள் தேவை." என்றார்.
















