`பெரம்பூர் எம்.எல்.ஏ ச.ஜோசப் விஜய்' - முதல்வரின் தொகுதி அலுவலகம் திறப்பு | Photo...
``உள்ளாட்சி தேர்தலில் த.வெ.க-வுக்கு மக்கள் சங்கு ஊதுவார்கள்!” - ராஜேந்திர பாலாஜி காட்டம்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “எடப்பாடி பழனிசாமி நம்மை விட அதிகமாக புகழ்ந்தவர்கள்தான் இன்று அ.தி.மு.க-விலிருந்து வெளியேறியுள்ளார்கள். அவர்களெல்லாம் மண்ணைக் கவ்வப்போகிறார்கள் . உங்களை வளர்த்த அ.தி.மு.க-விற்கு துரோகம் செய்துவிட்டு சாதாரண தொண்டர் சென்றால்கூட அதில் ஒரு நியாயம் உள்ளது.

ஆனால், அதிமுக கட்சியை வைத்து முழுமையாக பொருளாதாரத்தை பெருக்கிக் கொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு துரோகம் செய்துவிட்டு விட்டு சென்றுள்ள முன்னாள் அமைச்சர்கள் சிலர் அங்கு சென்று வேஷம் போடுகிறார்கள்.
முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்களுடன் அ.தி.மு.க. வினர் த.வெ.க.வில் இணைந்துள்ளதாகக் கூறுவது ஒரு செட்அப். அ.தி. மு.க-வின் உண்மை தொண்டகள் ஒரு நாளும் கட்சி மாற மாட்டார்கள்.
மீண்டும் அவர்கள் தாய்க் கழகத்தில் இணையும் காலம் விரைவில் வரும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்று சரித்திர சாதனைகளைச் செய்ய த.வெ.க-விற்கு செய்ய தகுதி உள்ளதா? த.வெ.க-வினர் வேஷம் கட்டி ஆடுகிறார்கள். அவர்களின் ஆட்டம் முடிவுக்கு வரப் போகிறது.
விஜய் ஒரு மாஸ் நடிகர் என்பதை ஒத்துக்கொள்கிறேன். தேர்தலின் போது விஜய் கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளை மக்கள் நம்பி விட்டனர். இதனால்தான் த.வெ.க. வுக்கு கிராமங்களில் அதிகளவில் ஓட்டு கிடைத்தது. த.வெ.க-வின் வெற்றி நிலையான வெற்றி கிடையாது.

உள்ளாட்சி தேர்தலில் த.வெ.க.வுக்கு மக்கள் சங்கு ஊதுவார்கள். த.வெ.க.வுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்றால் 150 இடங்களில் வெற்றி பெற்று இருக்க வேண்டும். ஆனால், 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தி.மு.க கூட்டணியில் வெற்றி பெற்ற கட்சிகளை வைத்து ஆட்சி அமைத்துள்ளார்கள். இந்த ஆட்சியை வைத்துக்கொண்டு கரூரில் இந்த ஆட்டமா? மேயராக, துணை முதல்வராக, முதல்வராக இருந்த ஸ்டாலினை கொத்து புரோட்டா போடுவோம் என முதல்வர் விஜய் பேசுவது நியாயமா? நானும் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்துள்ளேன்.
அரசியல் ரீதியாக விமர்சனம் செய்துள்ளேன். எங்கள் தலைவர் எடப்பாடி பழனிசாமியைப் பற்றி பேசியதால் பதிலடி கொடுத்துள்ளேன். ஆனால் நான் ஸ்டாலினை அவமானமாகப் பேசியதில்லை.
முதல்வர் பொறுப்பில் உள்ளவர் தார்மீகமாக பேச வேண்டும். இதற்கு முன்னர் எந்த ஒரு முதல்வரும் விஜய் பேசுவதை போல் யாரையும் வசைபாடியதில்லை. தவறு செய்தால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கட்டும், ஒரு முதல்வரே இப்படி பேசுவது பழிவாங்கும் நடவடிக்கை என்பதை காட்டுகிறது.

வேட்பாளர்களையே பார்க்காமல், அவர்களைப் பற்றி எதுவும் தெரியாமல் மக்கள் வாக்களித்த ஒரே தேர்தல் இந்த தேர்தல்தான். எந்த நேரம் ஸ்டாலினுக்கு கோபம் வருகிறதோ? அப்போது த.வெ.க. ஆட்சி முடிந்துவிடும், அவருக்கு கோபம் வர வேண்டும், வரும். அதுவரை த.வெ.க ஆட்சி நீடிக்குமா? ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்படுத்த வாய்ப்புள்ளதால் த.வெ.கவின் ஆட்சி மூன்றாண்டுகள் மட்டுமே நடைபெறும்” என்றார்.











.webp)




