மழை வேண்டியும் காவிரி ஆற்றின் நீர்வளம் பெருகவும் வேள்வி யாகம்; முக்கொம்பில் குவி...
``என் மனசாட்சிக்கு நேர்மையாக இருக்க வேண்டும்" - அதிமுகலிருந்து விலகிய சிங்கை ராமச்சந்திரன்
அண்ணாமலையை எதிர்த்து போட்டியிட்ட சிங்கை ராமச்சந்திரன் அ.தி.மு.க-விலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க-வின் மாணவரணிச் செயலரும், தகவல் தொழில்நுட்பப் பிரிவில் தலைவருமாகச் செயல்பட்டு வந்தவர் சிங்கை ராமச்சந்திரன். சிங்கை கோவிந்தராசின் மகனான சிங்கை ராமச்சந்திரன், கடந்த 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் அப்போதைய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, தி.மு.க வேட்பாளர் பி. கணபதி ராஜ்குமார் ஆகியோரை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் களமிறக்கப்பட்டார்.
கணபதி 5,68,200 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில், அண்ணாமலை 4,50,132 வாக்குகள் பெற்று இரண்டாமிடமும், 2,36,490 வாக்குகளைப் பெற்ற சிங்கை ராமச்சந்திரன் மூன்றாவது இடத்தையே பிடித்திருந்தார். அதன்பின்னர், அவருக்குச் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த நிலையில், அவர் அ.தி.மு.க-விலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை:

''நீண்ட ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு, நான் தற்போது வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலக முடிவு செய்துள்ளேன் என்பதை இந்தக் கடிதத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த முடிவை நான் கோபத்திலோ, வருத்தத்திலோ, அல்லது எந்தவித தனிப்பட்ட எதிர்பார்ப்பு நிறைவேறாததாலோ எடுக்கவில்லை. என் மனசாட்சிக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த முடிவை எடுத்துள்ளேன்.
என்னைப் பொறுத்தவரை, அஇஅதிமுக என்பது ஒரு அரசியல் கட்சி மட்டுமல்ல, என் குடும்பத்தின் ஒரு அங்கம். அதனால், இது எனக்கு ஒரு அரசியல் கடிதம் அல்ல. என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்து எழுதும் ஒரு மனப்பூர்வமான கடிதம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.














