ஐபிஎல்லின் 2-வது இன்னிங்ஸில் 2 பந்துகள் பயன்படுத்த அனுமதி! புதிய விதிகள் என்ன?
ஐபிஎல்லில் 2-வது இன்னிங்ஸில் 2 பந்துகள் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
18-வது ஐபிஎல் தொடர் வருகிற 22 ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கவிருக்கிறது. இந்தத் தொடரில் தொடக்கப் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதவிருக்கின்றன.
இந்தப் போட்டிக்கு முன்னதாக, அனைத்து அணிகளின் கேப்டன்கள் பங்கேற்கும் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முக்கிய விதிகள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது. அதில் முக்கியமான ஒன்றாக கிரிக்கெட் பந்துகளில் எச்சில் பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: கிரிக்கெட் பந்தில் உமிழ்நீரைப் பயன்படுத்த பிசிசிஐ அனுமதி!
புதிய விதிகள்
அதுமட்டுமின்றி, போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டு பந்துகள் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விதியின் படி 2-வது இன்னிங்ஸில் 11 வது ஓவருக்குப் பின்னர் 2 வது பந்து பயன்படுத்தப்படும்.
இந்த விதி அதிக பனியின் தாக்கம் காரணமாக பேட்டருக்கு சாதகமான சூழலைக் குறைக்கவும் பந்துவீச்சாளருக்கு சாதகமாக மாற்றவும் இருப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
பனியின் தாக்கம் எந்தளவு இருக்கிறது என்பதைக் கண்டறிந்து பந்தை மாற்றுவது குறித்து நடுவர் முடிவெடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனியின் தாக்கத்தை வைத்து டாஸ் வெல்லும் கேப்டனின் சாதகமான தன்மையை நிலையாக வைப்பதை இந்த விதி நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், பிற்பகல் போட்டிகளில் இந்தவிதி பயன்படுத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ராஜஸ்தான் அணிக்கு கேப்டனான ரியான் பராக்..! பேட்டராக தொடரும் சஞ்சு சாம்சன்!