கன்னியாகுமரி: விசாரணைக்கு சென்ற போலீஸை நாயை ஏவி கடிக்கவைத்த தம்பதி - மோசடி புகார...
'ஒல்லி இளைஞனா, தீர்க்கமான கண்களோட சிவாஜி நடிப்பு ஈர்த்தது' - விகடன் 'தடம்' இதழில் பாரதிராஜா நினைவு!
2018-ம் ஆண்டு விகடனின் 'தடம்' இதழுக்கு பேட்டி கொடுத்திருந்தார் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா.
அந்தப் பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று - "உங்களுடைய கலை ஊடகம் சினிமாதான் என்று எப்போது முடிவு செய்தீர்கள்?"
இந்தக் கேள்விக்கு பாரதிராஜாவின் பதில்...
"பெரும்பாலும் சம்ஸ்கிருதம் கலந்த தமிழில் வசனங்களும் பாடல்களும் வெளிவந்துகொண்டிருந்த சமயம், ஒரு புயல்போல ‘பராசக்தி’ வெளியானது.
தமிழன் அதுவரை திரையில் கேட்டிராத தமிழ், சிம்மக் குரலோன் சிவாஜியின் கம்பீரக்குரல் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்குது. ஒல்லி இளைஞனா, தீர்க்கமான கண்களோட சிவாஜியோட நடிப்பு ஈர்க்குது.

சடங்கு வீடு, கல்யாண வீடுனு மைக்கைக் கெஞ்சிக் கேட்டு வாங்கி, ‘நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்திருக்கிறது...’னு பேசித் திரிஞ்சோம்.
ஒரு நடிகனாக சிவாஜி என்னை ரொம்பவே பாதிச்சார். அப்புறம், சினிமா பார்க்கிறது ஒரு கனவு உலகத்துக்குள்ள போறது மாதிரி இருந்தது.
அரண்மனைகள், சண்டைக் காட்சிகள், மேகங்களில் மிதக்கிற தேவதைப் பெண்கள்னு, சினிமா கொஞ்சம் கொஞ்சமாக எனக்குள் ஒரு கனவு உலகை உருவாக்குச்சு.
நாடகம் போடும்போதே, சேலைகளை அசைத்து புகைமூட்டம் போட்டு இந்த எஃபெக்ட்ஸையெல்லாம் முயற்சி பண்ணியிருக்கேன். ஒருநாள் ஷூட்டிங் பார்க்கணும்னு சொல்லி, எங்க ஊர்க்காரர் விக் மேக்கர் கந்தசாமி மூலமா, ‘விக்ரம் ஸ்டூடியோ’ போனேன். ‘விஜயபுரி வீரன்’ ஷூட்டிங்.
எங்கிருந்தோ சத்தமா குரல், ‘லைட்ஸ்!’ அவ்வளவுதான், நூறு சூரியன்கள் பிரகாசிக்குது. என்னடா ஒளி இதுனு பிரமிச்சுப்போய் நின்னேன்.
அந்த ஒளி எனக்குள்ள ஓர் இனம்புரியாத சந்தோஷத்தைக் கடத்துச்சு. ‘ஆக்ஷன்’ சொன்னதும் சி.எல்.ஆனந்தன் கத்தியைச் சுழட்டி சுழட்டி சண்டை போடுறார். இதுதான்... இதுதான்... நம்மோட இடம்னு மனசு அன்னிக்கே முடிவு பண்ணிடுச்சு". என்றிருக்கிறார்.















