கன்னியாகுமரி: விசாரணைக்கு சென்ற போலீஸை நாயை ஏவி கடிக்கவைத்த தம்பதி - மோசடி புகார...
ஈரோடு: தீ வைத்துக் கொளுத்தப்பட்ட பயிர்கள்; `மாற்றுச் சமூகத்தினர்தான்...'- குமுறும் பட்டியலின விவசாயி
ஈரோடு மாவட்டம், ஆர்.என்.புதூர், அமராவதி நகரைச் சேர்ந்தவர் விவசாயி மாணிக்கம். பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த இவர், காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு உட்பட்ட விளை நிலத்தில் 2 ஏக்கர் பரப்பளவை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு விலைகொடுத்து வாங்கியிருக்கிறார். பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் தன்னுடைய விளை நிலத்திற்கான பாதையை அருகில் உள்ள மற்ற விவசாயிகள் தடுத்து நெல் சாகுபடி செய்ய முடியாமல் நெருக்கடியை ஏற்படுத்தி வருவதாக குற்றம்சாட்டி வந்துள்ளார்.

அந்த நிலத்தில் தென்னை, வாழை மற்றும் தேக்கு மரங்களை நடவு செய்து பராமரித்து வந்திருக்கிறார். காலிங்கராயன் கால்வாயில் பாசனத்திற்கான தண்ணீர் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில், நிலத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
இந்த நிலையில் தென்னை, தேக்கு மற்றும் வாழை மரங்கள் நேற்று திடீரென தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணிக்கம், தீயணைப்புத்துறைக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுக்குள் கொண்டு வந்தாலும் மாணிக்கத்திற்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான மரங்கள் தீயில் கருகி நாசமடைந்துள்ளன. மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த மற்ற நிலத்தின் உரிமையாளர்கள் சிலர் தன்னுடைய பயிர்களை தீவைத்துக் கொளுத்தியிருப்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
இது குறித்து விவசாயி மாணிக்கம், "நான் பட்டியலினத்தவர் என்பதால் இங்கு விவசாயம் செய்வதைத் தடுக்க, அருகில் உள்ள நில உரிமையாளர்கள் சாதிய துவேசத்துடன் நடந்து வருகிறார்கள். கடந்த ஆண்டும் இதேபோல நிலத்தில் சாகுபடி செய்த சோளப் பயிர்களை தீ வைத்து எரித்தார்கள்.

இந்த முறையும் 200 தென்னங்கன்றுகள், 500 வாழை மற்றும் 300 தேக்கு கன்றுகளை தீ வைத்து எரித்திருக்கிறார்கள். `எங்களுக்குச் சரிசமமாக நீ எப்படி நிலம் வைத்திருக்கலாம்?' என மிரட்டுகிறார்கள். விவசாயம் செய்வதற்கான உரிமையையும் பாதுகாப்பையும் மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும். கருங்கல்பாளையம் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளேன்" என்கிறார்.
இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




















