கேரளம்: `பாஜக 3 இடங்களை வென்றிருப்பது கவலையளிக்கிறது' - தேர்தல் தோல்வி குறித்து பினராயி விஜயன்
கேரளத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியான யு.டி.எஃப் 102 இடங்களில் வென்றது. சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி 35 இடங்களை பிடித்தது. பா.ஜ.க மூன்று இடங்களில் வென்றது. தேர்தல் முடிவுகள் குறித்து சிலநாள்களாக கருத்து தெரிவிக்காமல் இருந்த முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் தற்போது கருத்து தெரிவித்துள்ளார். தனது சமூக வலைத்தள பக்கத்தில் பினராயி விஜயன் கூறியுள்ளதாவது:
``சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்டுள்ள மக்கள் தீர்ப்பை மிகுந்த மரியாதையுடன் ஏற்றுக்கொள்கிறோம். இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற யு.டி.எஃப் கூட்டணிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இடதுசாரி ஜனநாயக முன்னணியைப் பொறுத்தவரை, இது முற்றிலும் எதிர்பாராத தேர்தல் முடிவாகும். எல்லாவிதமான எதிர்மறைப் பிரச்சாரங்களுக்கு மத்தியிலும் எல்.டி.எஃப்-க்கு மக்கள் அளித்த ஆதரவிற்கு நாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மூன்றாவது முறையாகத் தொடர்ச்சியாக வெற்றி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு கைநழுவினாலும், ஒரு பெரிய மக்கள் சக்தி எல்.டி.எஃப் உடன் உறுதியாக நின்றது எங்களுக்குப் பெரிய தன்னம்பிக்கையை அளிக்கிறது.
எல்.டி.எஃப்-க்கு இந்த மக்கள் தீர்ப்பு ஒரு முடிவல்ல, மாறாகத் தொடர்ச்சியான அரசியல் செயல்பாட்டிற்கான ஒரு புதிய தொடக்கமாகும். மக்களின் நம்பிக்கையை மீண்டும் வென்றெடுக்கவும், கூடுதல் சக்தியுடன் முன்னோக்கிச் செல்லவும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
கடந்த 10 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட வளர்ச்சிப் பணிகளும், மக்கள் நலத்திட்டங்களும் சமூகத்தில் பெரிய மாற்றங்களை உருவாக்கியுள்ளன என்பதில் சந்தேகமில்லை. அவை தடைபடாமல் இருப்பதற்கும், முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் வலுவான மக்கள் விழிப்புணர்வு தொடர்ந்து அவசியமாகும்.

நவகேரள உருவாக்கத்திற்காக எல்.டி.எஃப் முன்வைத்த தொலைநோக்குப் பார்வைகள், அறிவுசார் பொருளாதாரம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, சமூக நீதி, பொது சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட அனைத்தும் இனி முன்னோக்கிச் செல்வதை வலுவான எதிர்க்கட்சியாக இருந்து உறுதி செய்வோம்.
அதிதீவிர வறுமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம் மற்றும் சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் நாங்கள் முன்வைத்த கொள்கைகள் மக்களுக்கு அவசியமானவை. அவற்றைச் செயல்படுத்துவதற்கு புதிய அரசின் மீது ஜனநாயக ரீதியான அழுத்தத்தைச் செலுத்துவோம்.
மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் எந்தவொரு நல்ல நடவடிக்கையையும் ஆதரிப்போம். அதேசமயம், மக்கள் விரோதமான முடிவுகளுக்கு எதிராக வலுவாகப் போராடுவோம். பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகச் செயல்படுவதே எல்.டி.எஃப்-ன் இலக்காகும். கேரளாவின் மதச்சார்பின்மையையும் பன்முகத்தன்மையையும் பாதுகாப்பதே எல்.டி.எஃப்-ன் அடிப்படை நிலைப்பாடாகும்.
இந்தத் தேர்தலில் தென்படும் சில அறிகுறிகள், மதச்சார்பின்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்று விரும்புபவர்களை கவலையடையச் செய்கின்றன. பா.ஜ.க மூன்று இடங்களை வென்றிருப்பதை மிகத் தீவிரமாக பார்க்கிறோம். எந்தவொரு வகுப்புவாதத்துடனும் சமரசம் செய்துகொள்ளாமல், பிரிவினைவாத அரசியலுக்கு எதிரான எங்களது போராட்டம் தொடரும்.
இந்தத் தேர்தலின் போது பரவலாகப் பொய்ப் பிரச்சாரங்கள் நடைபெற்றன என்று முன்னரே கூறியிருந்தோம். அதில் சில ஊடகங்கள் வகித்த பங்கு தீவிரமாகப் பரிசீலிக்கப்பட வேண்டியது. பாதி உண்மைகளையும், மிகைப்படுத்தல்களையும், ஆதாரமற்ற பிரச்சாரங்களையும் சார்ந்து செய்திகளை முன்வைப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. இருப்பினும், இந்த அனுபவங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு முன்னோக்கிச் செல்வதையே எல்.டி.எஃப் முக்கியமாகக் கருதுகிறது.
தேர்தல் முடிவுகளை முழுமையாகப் பரிசீலிக்கவும், அனைத்துத் தோழர்களின் கருத்துகளைக் கேட்கவும் எல்.டி.எஃப் முடிவெடுத்துள்ளது. ஜனநாயக ரீதியிலான வெளிப்படையான பரிசீலனையே எங்களது நோக்கம். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பொதுமக்களிடமிருந்தும், தோழர்களிடமிருந்தும் எழும் கவலைகள், கருத்துகள் மற்றும் விமர்சனங்கள் தீவிரமாகப் பரிசீலிக்கப்படும். அனைவரின் கருத்துகளையும் கேட்டறிந்தே முடிவுகள் எடுக்கப்படும்.

எல்.டி.எஃப் கூட்டணிக்காக பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் இரவு பகலாக தேர்தல் பணிகளை மேற்கொண்டனர். அவர்களுக்கு எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களை எதிர்த்த சக்திகளான யு.டி.எஃப், பா.ஜ.க மற்றும் சில ஊடகங்களின் நிலைப்பாடு இவை அனைத்தும் சேர்ந்து உருவாக்கிய அரசியல் சூழலில்தான் இந்த முடிவு ஏற்பட்டுள்ளது.
அராஜக - அரசியலற்றத் தன்மை கொண்ட சில மையங்களின் தவறான பிரச்சாரத்தில் சிலராவது சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் உண்மைகளைப் புரிய வைக்கத் தீவிரமான முயற்சி மேற்கொள்ளப்படும். மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து கூடுதல் சக்தியுடன் செயல்பட நாங்கள் தயாராக இருக்கிறோம்.
பொய்க் கதைகளும், கார்ப்பரேட்-பிஆர் மூளைகளில் உருவான பொய்ப் பிரச்சாரங்களும் எங்களைப் பின்வாங்கச் செய்யாது. எல்.டி.எஃப்-ன் நிலைப்பாடுகளிலும் செயல்பாடுகளிலும் ஏற்பட்ட தவறுகள் ஜனநாயக ரீதியாகவே பரிசீலிக்கப்படும். தேவையான மாற்றங்கள் செய்யப்படும். மக்களுடனான உறவை மேலும் வலுப்படுத்தி, கூடுதல் தெளிவுடனும் தன்னம்பிக்கையுடனும் எல்.டி.எஃப் முன்னோக்கிச் செல்லும்.
கேரளாவின் எதிர்காலத்திற்காகவும், மக்களின் நலனுக்காகவும், ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மைக்காகவும் எங்களது போராட்டம் தொடரும்.
எல்.டி.எஃப் உடன் நின்ற அனைவருக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். கேரள மக்களின் நம்பிக்கையை மீண்டும் வென்றெடுக்க கூடுதல் சக்தியாகத் திரும்பி வருவோம் என்று உறுதி அளிக்கிறோம்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












