தீர்க்கமுடியாத பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும் மஹா பிரத்தியங்கிரா ஹோமம்... நீங்கள...
நெருங்கிய தொடர்பால் பரவும் புது ஆபத்து: உலகின் ஆபத்தான 'ஹான்டா வைரஸ்' குறித்து WHO எச்சரிப்பது என்ன?
அர்ஜென்டினாவிலிருந்து ஏப்ரல் 1-ம் தேதி 149 பயணிகளுடன் புறப்பட்ட ‘எம்.வி ஹோண்டியஸ்’ சுற்றுலா கப்பலில், அதிபயங்கர ‘ஹண்டாவைரஸ்’ தொற்று பரவியுள்ளது. அர்ஜென்டினாவில் பறவைக் கழிவுகளின் தூசியைச் சுவாசித்ததே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இதுவரை 3 பயணிகள் உயிரிழந்துள்ள நிலையில், 8 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் பாதித்தால் காய்ச்சல் மற்றும் தசைவலியுடன் தொடங்கி, 72 மணி நேரத்தில் நுரையீரலைச் செயலிழக்கச் செய்யும். இதற்குத் தடுப்பூசியோ, மருந்தோ இல்லை என்பதால் இதன் இறப்பு விகிதம் 50 சதவீதமாக உள்ளது.

கப்பலில் பணியாற்றும் 61 ஊழியர்களில் இரண்டு பேர் இந்தியர்கள் என்பது உறுதியாகியுள்ளது. எனினும், அவர்களின் தற்போதைய உடல்நிலை குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இதனால் அவர்களின் குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர். வரும் மே 11-ம் தேதி இக்கப்பல் ஸ்பெயினின் டெனெரிஃப் துறைமுகத்தை அடைய உள்ளது. இந்தியத் தூதரக அதிகாரிகள் மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) இந்த விவகாரத்தைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``இந்தத் தொற்று 'ஆண்டீஸ் வைரஸ்' (Andes virus) எனும் அரிதான வகையைச் சார்ந்தது. இது மனிதர்களிடையே நெருங்கிய தொடர்பின் மூலம் பரவக்கூடியது. இதுவரை 8 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 3 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிக்கப்படுகின்றனர்.

பொதுவாக எலிகளின் சிறுநீர், எச்சில் அல்லது கழிவுகள் மூலம் இந்த வைரஸ் பரவும். ஆனால், ஆண்டீஸ் வைரஸ் வகை மட்டும் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் தன்மை கொண்டது.
முதல் நோயாளி ஏப்ரல் 6 அன்று அறிகுறிகளைப் பெற்று, ஏப்ரல் 11 அன்று கப்பலிலேயே உயிரிழந்தார். அவரது மனைவி தென்னாப்பிரிக்காவில் ஏப்ரல் 25 அன்று உயிரிழந்தார். மூன்றாவது நபர் மே 2 அன்று பலியானார். பாதிக்கப்பட்ட மற்ற பயணிகள் சுவிட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுற்றுலா பயணிகள் அர்ஜென்டினா, சிலி மற்றும் உருகுவே நாடுகளில் பறவைகளைப் பார்க்கச் சென்றபோது, எலிகளை உண்ணும் பறவைகளின் எச்சம் மூலம் இந்தத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது இக்கப்பல் ஸ்பெயினின் கேனரி தீவுகள் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. கப்பலை ஏற்க முன்வந்த ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்க்கு நன்றி.
மேலும், கப்பலில் தனிமைப்படுத்துதல் மற்றும் கிருமிநாசினி தெளித்தல் போன்ற நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வைரஸ்கள் அரசியலைப் பார்ப்பதில்லை. ஒற்றுமை மட்டுமே நமது மிகப்பெரிய நோய் எதிர்ப்பு சக்தி. உலகைப் பாதுகாப்பாக வைத்திருக்கத் தேவையான அனைத்து தகவல்களையும் நாங்கள் தொடர்ந்து பகிர்ந்து கொள்வோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.















