`Congress, IUML-க்கு வராத விமர்சனம் VCK-வுக்கு மட்டும் வருகிறது எனில்.!' - அமைச்...
கொளுத்தும் வெயில்; அச்சுறுத்தும் Heat Stroke - பாதுகாப்பாக இருப்பது எப்படி? டாக்டர் டிப்ஸ்!
"இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது, அதோடு பல சவால்களும் சேர்ந்து வந்துள்ளன. இந்த வெயிலின் தாக்கம் நம் எல்லோரையும் வாட்டி வதைக்கிறது.
எனவே, நீங்கள் அனைவரும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
உடம்பில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வெளியில் செல்லும்போது எப்போதும் கையில் தண்ணீர் பாட்டில் வைத்திருங்கள்.

உங்களை நாடி வருபவர்களுக்கும் ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்து உதவுங்கள். இந்த வெயில் காலத்தில், நாம் காட்டும் இது போன்ற சிறிய அன்பும் மனிதநேயமும் மற்றவர்களுக்குப் பெரிய அளவில் துணையாக இருக்கும்".
- இது இந்திய பிரதமர் தனது எக்ஸ் பக்கத்தில் இந்திய மக்களுக்கு கொடுத்த அட்வைஸ்.
ஆம்... மே மாதம் இறுதியை எட்டியுமே இன்னும் வெயில் கொளுத்தி வருகிறது.
இந்த வெயிலில் இருந்து தப்பிக்க ஒவ்வொரு பணி பார்ப்பவர்களும் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பதை விளக்குகிறார் பொது மருத்துவர் அ. ப. ஃபரூக் அப்துல்லா.
1. டெலிவரி வேலை பார்ப்பவர்கள் தங்களை வெயிலிலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்ளலாம்?
"பொதுவாகவே, டெலிவரி வேலை பார்ப்பவர்கள் வெளியில் சுற்றுவது மிக அதிகம். இப்போது வெயில் வேறு அதிகம்.
கூடவே, இவர்கள் நீண்ட நேரம் வாகனத்தில் பயணம் செய்வதால், உடலின் மையப்பகுதியில் வெப்பநிலை அதிகமாகும். இதனால் வியர்வை அதிகமாகச் சுரக்கும்.
Sodium, Potassium போன்ற தாது உப்புகளும் அதிகமாக வெளியேறும். வெப்ப அயற்சி நிலையையும் உருவாக்கும்.
இதன் அறிகுறி வியர்த்தல், குமட்டல், தலைசுற்றல், வாந்தி வருவது போன்ற நிலை. இந்தச் சமயத்தில் நிழல் தரும் இடங்களில் ஒதுங்கி இளநீர், மோர், லஸ்ஸி, குளிர்ந்த நீர் போன்றவற்றை உடனடியாக அருந்திவிட்டு, அரை மணிநேரம் ஓய்வெடுக்கலாம்.
இதனைக் கவனிக்காமல் மீண்டும் தனது வேலையைச் செய்தார்கள் எனில் அதன்மூலம் Heat Stroke வரும் வாய்ப்புகள் அதிகம்.
சமீபத்தில் தெலங்கானாவில் இவ்வாறு அதிகமாக நிகழ்ந்தது. ஜூன் முதல் வாரம் வரை வெப்பம் அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதனால் வெளியில் பயணம் செய்பவர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
2. Heat Stoke ஏற்படுபவர்களை எவ்வாறு பாதுகாக்கலாம்?
வெப்ப வாதத்தைப் பொறுத்தவரை அதன் அறிகுறிகள் வெப்ப அயற்சியோடு, பதற்ற நிலை உண்டாக மயக்கம் அடைந்துவிடுவார்கள்.
Heat Stroke ஏற்படுபவர்களை முதலில் நிழலுக்குக் கீழ் கொண்டு வரலாம். சுற்றி கூட்டம் கூடாமல், காற்றோட்டத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும்.
இதயத் துடிப்பும் சுவாசமும் சரியாக இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். இது இரண்டும் இல்லாத பட்சத்தில் முதலுதவியை ஆரம்பிக்க வேண்டும்.
108 அழைத்து அருகிலிருக்கும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

3. வெப்ப வாதம் மற்றும் வெப்ப அயற்சியிலிருந்து எவ்வாறு நம்மைப் பாதுகாக்கலாம்?
தங்களுடைய உடல் வெப்பத்தை தணிக்கும்படியான நீர்ச்சத்தை அடிக்கடி உட்கொள்ள வேண்டும். எனவே, குளிர்ந்த நீரை அவர்கள் எடுத்துச் செல்ல வேண்டும்.
குறிப்பிட்ட நேர இடைவெளியில் அவர்கள் நீரைப் பருகிக் கொண்டே இருக்க வேண்டும்.
வெறும் நீரோடு மட்டுமல்லாமல் உப்பு கலந்த மோர், ORS போன்றவற்றைப் பருக வேண்டும். நிறைய பேர் நினைத்துக் கொள்கிறார்கள் நீர் மட்டும் பருகினால் போதுமென்று.
நம் வியர்வையோடு வெளியேற்றப்படுவது Sodium, Potassium ஆகிய தாது உப்புகளும் கூட. எனவே உப்பிட்ட மோர் போன்றவற்றைப் பருகுவதால் நீர்ச் சத்தோடு, தாது உப்புகளும் கிடைக்கிறது.
4. வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சனை உண்டா?
கோடை காலத்தில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு Dehydration ஆகாது என நினைக்கிறார்கள். ஆனால் பல்வேறு வகையிலும் நீர்ச்சத்து குறைபாடு உண்டாகிறது.
ஒன்று வெளியே வெயிலில் சுற்றுபவர்களுக்கு நேரடியாக வெப்பம் அவர்களைத் தாக்குகிறது.
மற்றொரு வகையும் உண்டு. வெளியே இருக்கும் அதிகமான வெப்பம் காற்று வழியாகவும் நம்மை பாதிக்கலாம். சீலிங் ஃபேன் மூலம் சூடான காற்று நம் மேல் வீசுகிறது.

இதனால் நம் உடலில் இருந்து நீர்ச்சத்து சிறிது சிறிதாக வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கும். எனவே வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் நீரோடு சேர்த்து, மோர், இனிப்பு கலந்த சர்பத், லஸ்ஸி, பழச்சாறுகள் போன்றவற்றைக் கொடுக்கலாம்.
இதோடு பருத்தி ஆடைகளை அவர்கள் அணிவது நல்லது. பருத்தி ஆடைகளை அணிவதால் வியர்வை வெளியேற்றப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. தினமும் 2 முறை குளிக்கலாம்.
5. ஏ.சி இருக்கும் அறையில் வேலை பார்ப்பவர்களுக்கும் கோடை காலத்தில் பாதிப்பு உண்டா?
பொதுவாக ஏ.சியில் இருந்தால் நீர்ச்சத்து வெளிவராது என நினைத்துக் கொள்கிறோம்.
ஏ.சியில் இருப்பினும் நம் உடல் அன்றாடம் நீர்ச்சத்தை உபயோகித்துக் கொண்டுதான் இருக்கும். ஏ.சியிலேயே 6-7 மணிநேரம் இருந்தாலும் நீரிழப்பு ஏற்படும்.
வியர்வை வராது என்பதால் நீர் குடிக்க வேண்டும் என்கிற எண்ணம் வராது. இவர்களே அதிகமாக நீர்ச்சத்து குறைபாட்டிற்கு ஆளாவார்கள்.
சரியாக இடைவெளிவிட்டு மோர், நீர் போன்றவற்றை அருந்தி கொண்டிருந்தால் உங்களுக்கு நீரிழப்பு ஏற்படாது. இல்லையெனில் நீர் இழப்பு சார்ந்த தலைவலி, Brain fog நிலை போன்றவை வர வாய்ப்புகள் உள்ளதால் இவர்கள் கொஞ்சம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

6. கட்டடம் கட்டும் தொழிலாளிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்?
உச்சி வெயில் நேரமான 12-3.30 மணிவரை வெளிப்புற வேலைகளைத் தவிர்த்துவிட்டு, கட்டடத்தின் உட்புற வேலைகளைக் கவனிக்கலாம்.
நேரடியாக வெயிலில் நின்று வேலை செய்வதைத் தவிர்க்கலாம். டீ, காபி போன்றவற்றைப் பருகாமல், நீர்ச்சத்தை அதிகரிக்கும் பானங்களை அருந்தலாம்.
7. வெயில் காலத்தில் சீலிங் ஃபேன் சிறந்ததா அல்லது டேபிள் ஃபேன் சிறந்ததா?
சீலிங் ஃபேன் மேலே எந்தக் கட்டடமும் இல்லாத பட்சத்தில் மொட்டை மாடியில் இருக்கின்ற சூட்டை கீழிறக்கும்.
முடிந்தவரை கோடை காலத்தில் மொட்டை மாடியில் நீரூற்றி குளிர்ச்சி செய்வது போன்றவை குளிராக்க உதவும்.
மேலும் வெளியே உள்ள காற்றை உள் இழுப்பதும், உள்ளே உள்ள காற்றை வெளியேற்றுவதும் ஃபேன் செய்கின்ற வேலை. எனவே இதைத் தவிர்க்க ஜன்னல் சாளரங்களில் ஈரத் துணிகளைக் காய விடலாம்.
இவ்வாறு துணிகளைப் காயப்போடுகையில் குளிரான காற்று வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். முடிந்தால், டேபிள் ஃபேன் பயன்படுத்துவதும் நல்லது".













