`Congress, IUML-க்கு வராத விமர்சனம் VCK-வுக்கு மட்டும் வருகிறது எனில்.!' - அமைச்...
விஜய்யுடன் இணைந்த காங்கிரஸ்; விலகிய திமுக; அப்செட்டில் மம்தா, அகிலேஷ் - I.N.D.I.A கூட்டணி இனி?
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்ற வரிகளுக்கு ஏற்ப மாநில அளவில் அரங்கேறி வரும் அரசியல் நகர்வுகள் ‘இண்டி’ (I.N.D.I.A.) கூட்டணியின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் புதியதொரு அரசியல் அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள தவெக ஆட்சியமைக்க ஏதுவாக, திமுக கூட்டணியில் இருந்து அதிரடியாக வெளியேறிய காங்கிரஸ், விஜய் தரப்பிற்குத் தன் ஆதரவை வழங்கி ஆட்சி கட்டிலிலும் அமர்ந்திருக்கிறது.

‘இண்டி’ கூட்டணியில் புகைச்சல்
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவைத் தேர்தல்களுக்கும் தவெகவுடனான கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் அறிவித்திருக்கிறது.
காங்கிரஸின் இந்தத் துரோகப் போக்கினால் கடுப்பான திமுக தலைமை, காங்கிரஸுடனான தங்களின் நீண்டகாலக் கூட்டணி அதிகாரப்பூர்வமாக முறிந்ததாக அதிரடியாக அறிவித்தது.
தமிழகத்தில் அரங்கேறியுள்ள இந்த அதிரடி அரசியல் மாற்றம், தேசிய அளவில் பாஜகவிற்கு எதிராகக் கட்டமைக்கப்பட்ட ‘இண்டி’ கூட்டணியில் மிகப்பெரிய புகைச்சலையும், பிளவையும் ஏற்படுத்தியுள்ளது.
'இண்டி' கூட்டணி நீடிக்குமா?
பாசிச எதிர்ப்பு, மதச்சார்பின்மை என்ற பொதுவான இலக்குகளைப் பேசிவிட்டு, மாநில அளவில் தங்களின் சுயநல அரசியல் ஆதாயங்களுக்காகப் பல ஆண்டுகாலக் கூட்டணிக் கட்சியான திமுகவின் ‘முதுகில் குத்தும்’ வேலையைக் காங்கிரஸ் செய்திருப்பதாட்திமுகவினர் சாடுகின்றனர்.
காங்கிரஸின் இந்த நம்பகத்தன்மையற்ற, துரோகப் போக்கு ஒட்டுமொத்த ‘இண்டி’ கூட்டணியின் மீதான நம்பகத்தன்மையையே சிதைத்து, பெரும் அவப்பெயரைத் தேடித்தந்துள்ளது.

தங்களின் அரசியல் வாழ்வாதாரத்திற்காக எந்த நேரத்திலும் கூட்டணிக் கட்சிகளுக்குக் காங்கிரஸ் துரோகம் செய்யும் என்ற அச்சம் மற்ற மாநிலக் கட்சிகளிடமும் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் தேசிய அளவில் 'இண்டி' கூட்டணி நீடிக்குமா? என்ற கேள்வி எழுகிறது.
'இண்டி' கூட்டணி அமைய முக்கிய காரணமாக இருந்த திமுக சட்டமன்றம், நாடாளுமன்றம் என பல தேர்தல்களில் கங்கிரஸுடன் கூட்டணி வைத்திருக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின் 2019 லோக்சபா தேர்தலுக்கு முன்பு ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தார்.
திமுக கொடுத்த ஆதரவு
கடந்த 2024 லோக் சபா தேர்தலிலும் திமுக தனது ஆதரவை ராகுலுக்கு வழங்கி இருந்தது. ஆனால் தற்போது அரசியல் களம் முற்றிலும் மாறியிருக்கிறது. காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி வைத்ததால் 'இண்டி' கூட்டணியில் முக்கிய பங்கு வகிக்கும் திமுக தேசிய அரசியலுக்கு தனது அதிரவை தர வாய்ப்பில்லை.
மறுபுறம், வட மாநிலங்களில் ‘இண்டி’ கூட்டணியின் முக்கியத் தூண்களாகக் கருதப்படும் மம்தா பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்) மற்றும் அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி கட்சி) ஆகியோர் காங்கிரஸ் மீது கொண்டுள்ள அதிருப்தி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
அயர்ச்சியில் மம்தா - அகிலேஷ்
மேற்கு வங்கத்தில் காங்கிரஸும், இடதுசாரிகளும் தங்களுக்கு எதிராகச் செயல்படுவதை மம்தா பானர்ஜி தொடர்ந்து வன்மையாகக் கண்டித்து வருகிறார். தேசிய அளவில் ஒரு பேச்சு, மாநில அளவில் ஒரு விசுவாசம் என்ற காங்கிரஸின் அணுகுமுறை மம்தாவிற்கு அயர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மம்தா ஆலோசனை
அதேபோல், உத்தரப் பிரதேசத்தில் பிராந்தியக் கட்சிகளின் செல்வாக்கை மதிக்காமல், காங்கிரஸ் தங்களுக்கு இணையாகத் தங்களை முன்னிறுத்திக் கொள்ள முயல்வது அகிலேஷ் யாதவிற்குப் பிடிக்கவில்லை.
காங்கிரஸின் இந்த ‘பெரிய அண்ணன்’ மனப்பான்மை தங்களின் பிராந்திய அரசியல் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்று இவ்விரு தலைவர்களும் நம்புகிறார்கள். தவிர தவெகவுடன் கூட்டணி வைத்தப்போது அகிலேஷ் யாதவ் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஆதிரவு தெரிவித்திருந்தார். மம்தா காங்கிரஸ் இல்லாமல் 'இண்டி' கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
கேள்விகுறியாகும் இண்டி கூட்டணி
தொடர் குழப்பங்களும், உள்விவகாரப் பூசல்களும் ‘இண்டி’ கூட்டணியின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையே பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளன. பலவீனமான தலைமையும், மாநிலக் கட்சிகளின் தனிப்பட்ட ஆதிக்கப் போட்டிகளும் பாஜவை வீழ்த்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பலமான கூட்டணியைச் சிதைத்துக் கொண்டிருக்கின்றன.
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பிராந்தியக் கட்சிகள் தங்களின் அரசியல் கணக்குகளை முன்னிறுத்துவதும், அதற்கு ஈடுகொடுக்க முடியாமல் காங்கிரஸ் திணறுவதும் கூட்டணிக்குள் இருக்கும் பெரும் பலவீனமாக பார்க்கப்படுகிறது.

இண்டி கூட்டணியின் வீழ்ச்சி
தமிழகத்தில் தவெக - காங்கிரஸ் கூட்டணியால் திமுகவின் அதிருப்தி வடக்கே மம்தா மற்றும் அகிலேஷின் விலகல் போக்கு ஆகியவை தொடர்ந்தால், வரும் காலங்களில் ‘இண்டி’ கூட்டணி என்பது வெறும் காகித அளவிலான கூட்டணியாக மட்டுமே சுருங்கிவிடும் நிலை உள்ளது,
பிராந்திய யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு காங்கிரஸ் தன் போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால், இண்டி கூட்டணியின் வீழ்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்பதே தற்போதைய அரசியல் நிலவரம் உணர்த்தும் நிலையாக உள்ளது.
காங்கிரஸ் - பாஜக அல்லாத `மாநில கட்சிகளின் கூட்டணி' எனும் திட்டமும் பேசப்படுகிறது. எனினும் அது ஒரு மாநிலத்தில் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு பெரிய பலன் தராது என்பதால் எந்த அளவுக்கு சாத்தியம் என்பதும் இன்னும் தெரியாத சூழலே உள்ளது.!












