`Congress, IUML-க்கு வராத விமர்சனம் VCK-வுக்கு மட்டும் வருகிறது எனில்.!' - அமைச்...
ரூ.1,414 கோடி சொத்து; திகார் சிறை; ட்ரபிள்ஷூட்டர்; இனி முதல்வர்? - யார் இந்த டி.கே.சிவக்குமார்?
இந்திய அரசியலில் இன்றய தினம் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர்களில் ஒன்று டி.கே. சிவக்குமார். கர்நாடகாவின் முதல்வராக இருந்த சித்தராமையா, வழி விட, தற்போதைய துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், இனி முதல்வராக போகிறார்.
கர்நாடகாவின் தற்போதைய துணை முதலமைச்சர், மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர், 1,414 கோடி ரூபாய் சொத்துக்களுக்கு அதிபதி, கட்சியின் ஆபத்பாந்தவன் எனப் பல முகங்களைக் கொண்டவர் டி.கே. சிவக்குமார். ஆனால், இதே டி.கே. சிவக்குமார்தான் பணமோசடி வழக்கில் திகார் சிறையில் 50 நாட்கள் அடைக்கப்பட்டிருந்தார். இந்த உச்சகட்ட ஏற்ற இறக்கங்கள் நிறைந்த டி.கே. சிவக்குமாரின் 40 ஆண்டுக்கால அரசியல் பயணம், உண்மையிலேயே ஒரு த்ரில்லர் படத்திற்கு ஈடானது.
யார் இந்த டி.கே.எஸ்?
கனகபுரா தாலுகாவில் உள்ள தொட்டலஹள்ளி என்ற சிறிய கிராமத்தில், விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்தான் தொட்டலஹள்ளி கெம்பேகவுடா சிவக்குமார்(டி.கே.எஸ்). மாநிலத்தின் செல்வாக்குமிக்க ஒக்காலிகர் சமூகத்தைச் சேர்ந்தவர் .
கல்லூரி நாட்களிலேயே NSUI மாணவர் அமைப்பு மூலம் அரசியலில் நுழைந்த இவர், தனது 27வது வயதில், அப்போதைய ஜாம்பவான் தலைவர் எச்.டி. தேவகவுடாவை எதிர்த்து சதனூர் தொகுதியில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் தோற்றாலும், அவரின் துணிச்சல், காங்கிரஸ் மேலிடத்தின் கவனத்தை ஈர்த்தது. விளைவு? 1989-ல் இருந்து இன்றுவரை தொடர்ந்து 8 முறை எம்.எல்.ஏவாக வெற்றி பெற்று அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளார்.
காங்கிரஸின் 'அல்டிமேட் ட்ரபிள்ஷூட்டர்'!
டி.கே. சிவக்குமாரின் அரசியல் கரியரில் எது ரொம்பவே ஸ்பெஷல் என்று கேட்டால், அது சந்தேகமே இல்லாமல் அவருடைய 'ட்ரபிள்ஷூட்டர்' அவதாரம்தான் என்கிறார்கள் கர்நாடக காங்கிரஸ் காரர்கள்.
கட்சிக்கு எப்போதெல்லாம் நெருக்கடி வருகிறதோ, அப்போதெல்லாம் மீட்பராகக் களமிறங்குவதுதான் இவரது ஸ்டைல். 2017-ல் குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பாஜகவினர் இழுப்பதைத் தடுக்க, அவர்களை பெங்களூரு ரிசார்ட்டில் தங்க வைத்து அகமது பட்டேலின் மாநிலங்களவை வெற்றியை உறுதி செய்தது ஆகட்டும், மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சியைக் காப்பாற்ற உதவியது ஆகட்டும், டி.கே.எஸ்ஸின்ன் இந்த வியூகம்தான் அவரை காங்கிரஸ் மேலிடத்தின் குட் புக்கில் நிரந்தரமாக இடம்பெறச் செய்தது.
2023 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் பெற்ற மாபெரும் வெற்றிக்குப் பின்னால் இருந்து உழைத்த மாஸ்டர் மைண்ட் இவர்தான் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

ரூ.1,414 கோடி சொத்து
சரி, இப்போது டி.கே.எஸ்ஸி்ன் சொத்து மதிப்புக்கு வருவோம். 2023 தேர்தல் பிரமாணப் பத்திரத்தின்படி, இவரின் அதிகாரப்பூர்வ சொத்து மதிப்பு மட்டும் சுமார் 1,414 கோடி ரூபாய்!
இதில் அசையும் சொத்துக்கள் 244 கோடி ரூபாய், அசையா சொத்துக்கள் 1,170 கோடி ரூபாய். பெங்களூரு, டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் உள்ள ரியல் எஸ்டேட் சொத்துக்கள், விவசாய நிலங்கள், சுரங்கத் தொழில், கல்வி நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் உள்ள பங்குகள் என இவரது சொத்து மதிப்பு பட்டியல் நீள்கிறது.
ஆனால், இந்த சொத்துக்கள் எப்படி வந்தன என்பதுதான் எதிர்க்கட்சிகள் வைக்கும் மில்லியன் டாலர் கேள்வி. ஆனால், சிவக்குமாரோ, தனது சொத்துக்கள் அனைத்தும் பரம்பரை பரம்பரையாக வந்தவை மற்றும் தனது கடின உழைப்பால் சம்பாதித்தவை, எல்லாவற்றிற்கும் முறையான கணக்கு உள்ளது என்று அடித்துச் சொல்கிறார்.
சர்ச்சைகள், சிறை... அரசியல் பழிவாங்கலா?
எல்லாம் சரிதான், ஆனால் இந்த பயணத்தில் சில பெரிய ஸ்பீடு பிரேக்கர்களும் இருக்கின்றன. 2017-ல் குஜராத் எம்.எல்.ஏ.க்களை ரிசார்ட்டில் பாதுகாத்தபோது, வருமான வரித்துறை இவருக்குச் சொந்தமான 60-க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடத்தியது. அதன் தொடர்ச்சியாக, அமலாக்கத்துறை (ED) பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் 2019-ல் அவரைக் கைது செய்தது.
இதன் விளைவாக, டெல்லி திகார் சிறையில் 50 நாட்கள் இருக்க நேர்ந்தது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என அவரது ஆதரவாளர்கள் கொந்தளித்தனர். இது தவிர, 2013-18 காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 74.93 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்கும் பதிவு செய்தது.
ஆனால், பின்னர் காங்கிரஸ் அரசு இந்த விசாரணைக்குக் கொடுத்த அனுமதியைத் திரும்பப் பெற்றது. இதுபோக, ரியல் எஸ்டேட் மற்றும் கிரானைட் சுரங்கத் தொழில் தொடர்பாக நில அபகரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் விதிமீறல் குற்றச்சாட்டுகளும் இவர் மீது அவ்வப்போது எழுப்பப்படுவதுண்டு.
அடுத்த முதல்வர்... இரண்டரை வருட டீல்?
2023 தேர்தலில் காங்கிரஸ் வென்றதும், முதல்வர் பதவிக்கு சித்தராமையாவுக்கும், டி.கே. சிவக்குமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், டெல்லி மேலிடம் சித்தராமையாவை முதல்வராகவும், டி.கே.சிவகுமாரை துணை முதல்வராகவும் நியமித்தது. ஆனால், இருவருக்கும் இடையே இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு 'பவர்-ஷேரிங் ஃபார்முலா' பேசப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் ஒரு பேச்சு இன்னமும் அடிபடுகிறது.
அதன்படி, 2026 மே மாதம் சித்தராமையா பதவி விலகி, சிவக்குமார் முதல்வராகப் பொறுப்பேற்பார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் தான் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அடுத்த முதல்வராக சிவகுமார் விரைவில் பதவியேற்பார் என்று தெரிகிறது.













