``தேவர்ங்கறது படிச்சு வாங்கின பட்டமா?” - சாதியக் கட்டமைப்பை முகத்தில் அறைந்த பார...
``கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும்..." - ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரக் கோரி, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன், போக்குவரத்துத்துறை அமைச்சர் பார்த்திபனைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``கோயம்பேடு பேருந்து நிலையம் செயல்பாடற்று இருப்பதால், தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மக்கள் செல்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களால், ஒரு பேருந்தில் பயணிக்க வேண்டிய 40 பயணிகள், தற்போது தனித்தனியாக 40 கார்களிலோ அல்லது 20 ஆட்டோக்களிலோ செல்லும் நிலை உருவாகியுள்ளது. இதனால் சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசல் பல மடங்கு அதிகரித்துள்ளது.

புதிய பேருந்து நிலையங்களை உருவாக்குவதன் முதன்மை நோக்கமே நகரின் போக்குவரத்து இடர்பாடுகளைக் களைவதும், வாகனப் புகையினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசைக் குறைப்பதும்தான். ஆனால், கோயம்பேடு மூடப்பட்டதால் மக்கள் தங்களின் சொந்த வாகனங்களையும் வாடகை வாகனங்களையும் அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக, அரசின் நோக்கம் நன்மையளிப்பதற்குப் பதிலாக எதிர்மாறான விளைவை ஏற்படுத்தி, கூடுதல் போக்குவரத்து நெரிசலுக்கும் காற்று மாசுக்கும் வழிவகுத்துள்ளது.
ஒரு சாதாரண பயணி கோயம்பேட்டில் எளிதாகப் பேருந்து ஏறிச் சென்ற நிலையை மாற்றி, அவரை கிளாம்பாக்கம் வரை பயணிக்க வைப்பது கூடுதல் அலைச்சலையும் பண விரயத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே, பயணிகளின் நலனை மட்டுமே முதன்மையாகக் கருதி, முதலமைச்சர் தலையிட்டு, தற்போது பயன்பாடின்றி முடங்கிக் கிடக்கும் கோயம்பேடு பேருந்து நிலையத்தை ஆம்னி மற்றும் அரசுப் பேருந்துகளின் பயன்பாட்டிற்காக உடனடியாக மீண்டும் திறந்துவிட வேண்டும் என்று இந்தச் சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.















