நிதி ஆயோக் கூட்டம்: `ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பு டு நீட் எதிர்ப்பு...' - முதல்வர் வி...
மன்னார்குடி: `அப்பா வந்திருக்கேன் எழுந்திரி ராசா'- கார் மோதி 3 பள்ளி குழந்தைகள் பலி; கதறும் பெற்றோர்
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள காரக்கோட்டை அரசுப் பள்ளியில் லோகேஷ், ரச்சித் ஆகிய இருவர் சிறுவர்கள் ஆறாம் வகுப்பும், ராஜமுரளி என்ற சிறுவன் ஏழாம் வகுப்பும் படித்து வந்தனர். இன்று மாலை வழக்கம் போல் பள்ளி முடிந்து மூன்று மாணவர்களும் வீட்டுக்குச் செல்வதற்காக சாலையோரத்தில் நடந்து சென்றுள்ளனர்.

அப்போது தஞ்சாவூரிலிருந்து மன்னார்குடி நோக்கி டவேரா கார் ஒன்று அதிவேகமாக வந்துள்ளது. இதில் சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவர்கள் மீது கார் மோதியதில், மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டனர். கார் தலைகுப்புற கவிழ்ந்தது. மாணவர்களின் புத்தகப்பையில் இருந்து புத்தகங்கள் சிதறின. ரத்த வெள்ளத்தில் கிடந்த மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதை பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மூன்று பேரையும் மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் பரிசோதித்து மாணவர்கள் இறந்து விட்டதை உறுதி செய்தனர். இது குறித்து மூன்று பேரின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு வந்த பெற்றோர் கதறி அழுதது காண்போரை கண்கலங்கச் செய்தது. மகனை இழந்த தந்தை ஒருவர், கட்டிக்கொண்டு, `எழுந்திரிடா என் ராசா, ஏண்டா இப்படியே கிடக்க... அப்பா வந்திருக்கேன், கண் திறடா' எனக் கதறியவரை யாராலும் தேற்ற முடியவில்லை.

இந்த விபத்து குறித்து மன்னார்குடி மற்றும் வடுவூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மன்னார்குடி அருகே உள்ள லட்சணங்குடி பகுதியைச் சேர்ந்தவர் கார் ஓட்டியுள்ளார். காரில் மேலும் இரண்டு பேர் இருந்துள்ளனர். காரை ஓட்டியவர் உட்பட மூன்று பேரும் மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறியதால் நிதானத்தை இழந்து காரை வேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இதனால் அப்பாவி மாணவர்கள் பலியாகியுள்ளனர். இந்தச் சம்பவம் மன்னார்குடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்று பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
















