திருநெல்வேலி புகழ் 'பித்தளை' பொங்கல் பானைகள்; தயாரிப்பு பணிகள் தீவிரம்! | Photo ...
சின்னத்திரை கூட்டமைப்பு: `யாருக்கு அதிகாரம்?' - சங்கங்களுக்கு இடையே மல்லுக்கட்டு, ரத்தான தேர்தல்!
சின்னத்திரையில் நடிகர் சங்கம், இயக்குநர் சங்கம், எழுத்தாளர்கள் சங்கம், எடிட்டர்கள் சங்கம் ஆகிய நான்கும் இணைந்த அமைப்பு 'சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு' எனப்படுகிறது.
சினிமாவில் பெப்சி இருப்பது போல் ஒட்டு மொத்த சின்னத்திரைக்கும் ஒரு பெரிய அமைப்பாக விளங்கும் இந்த அமைப்பின், நிர்வாகிகளை மேலே சொன்ன எல்லா சங்கங்களின் பிரதிநிதிகள் சேர்ந்து தேர்ந்தெடுப்பார்கள்.
தற்போது சீரியல் இயக்குநர்கள் சங்கத் தலைவராக இருக்கும் மங்கை அரிராஜன், சின்னத்திரை கூட்டமைப்புக்கும் தலைவராக இருக்கிறார்.
இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்த அமைப்புக்கு நடக்க இருந்த தேர்தல் காரணம் குறிப்பிடாமல் ரத்து செய்யப் பட்டுள்ளது.

தேர்தல் நடத்த நியமிக்கப்பட்டிருந்த தேர்தல் அதிகாரியே தேர்தலை நடத்த விரும்பாமல் ரத்து செய்து விட்டுச் சென்று விட்டார் என்கிறார்கள்.
'என்ன பிரச்னை' என சின்னத்திரை வட்டாரத்தில் விஷயமறிந்த சிலரிடம் பேசினோம்.
''நான்கு சங்கங்கள் அங்கம் வகிக்கிற கூட்டமைப்பின் நிர்வாகப் பொறுப்பு சுழற்சி முறையில் மாறிட்டே இருக்கும். இப்ப மங்கை அரிராஜன் இருக்கிறார். அடுத்த தேர்தல் நடத்த பொதுக்குழு ஒப்புதல் தந்துட்டா தேர்தலை நடத்தி என்ன முடிவு வருதோ அதை ஏத்துக்கிட்டுப் போயிடணும். ஒரு சங்கம்னா பொதுக்குழுவுக்கு மிஞ்சுன அதிகாரம் யாருக்கும் கிடையாது. இதுதான் வழக்கமான நடைமுறை. ஆனா இப்ப தலைவரா இருக்கிற மங்கை அரிராஜனுக்கு இப்ப தலைவர் பதவியில் இருந்து விலக மனமில்லை.
இயக்குநர்கள் சங்கத்துக்கு வரும் மே மாதம் தேர்தல் நடக்கவிருக்கு. அந்த தேர்தல் வரைக்கும் இந்தப் பதவியில் இருக்கணும்னு நினைக்கார்னு சொல்றாங்க.. அதனால தேர்தல் ரத்தான பின்னணியில் அவர்தான் இருக்கணும்னு பேசப்படுது. அவர் அரசின் சினிமா தொடர்பான கமிட்டியிலும் பொறுப்பு வகிக்கிறார்.' என்றார்கள் அவர்கள்.

இன்னும் சிலரோ, 'சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு சில மாதங்களுக்கு முன் தேர்தல் நடந்தது. அதுல நடிகர் பரத் தலைமையிலான அணி அமோகமா ஜெயிச்சது. ஏற்கனவே சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவராக இருந்த சிவன் சீனிவாசன் தான் நடிகர் சங்கப் பிரதிநிதியாக் கூட்டமைப்பில் இருந்தார். தன்னுடைய சங்கப் பதவி போன உடனேயே கூட்டமைப்புப் பொறுப்பும் தானாகவே காலி ஆகிடும். அதனால இப்ப பரத் கூட்டமைப்பின் தலைவராவதற்கு அதிக வாய்ப்பிருக்கறதால் அதைத் தடுக்க சிலர் முயற்சி செய்யறாங்கனு தோணுது. அதோட வெளிப்பாடுதான் தேர்தல் ரத்து' என்கிறார்கள்.
மங்கை அரிராஜனிடம் இந்த விவகாரம் குறித்துக் கேட்டோம்.
'நான்கைந்து சங்கங்கள் சேர்ந்து ஒரு அமைப்பை உருவாக்கினாலும் உருவான அந்த அமைப்புக்குனு ஒரு பை லா இருக்கும். அதன்படிதான் செயல்படணுமில்லையா? கூட்டமைப்பின் நிர்வாகத்திலிருக்கும் ஒருவரது பதவிக்காலம் வரும் அக்டோபர மாதம் வரை இருக்கு. அதனால அதுவரை தேர்தல் நடத்தக் கூடாதுனு அவர் நோட்டிஸ் தந்திருக்கிறார். அதனால்தான் தேர்தலை தேர்தல் அதிகாரி நிறுத்தியிருக்கார். மத்தபடி எங்க சங்கத்துக்கு நடக்கவிருக்கும் தேர்தலுக்கும் இந்தப் பிரச்னைக்கும் சம்பந்தமே இல்லை. அக்டோபருக்குப் பிறகு நிச்சயம் தேர்தல் நடத்தப்படும்' என்கிறார் இவர்.
கூட்டமைப்பில் வலுவான அதாவது அதிக உறுப்பினர்களைக் கொண்ட சின்னத்திரை நடிகர் சங்கம். இந்தப் பிரச்னையை எப்படி எதிர்கொள்வது என அடுத்தகட்ட ஆலோசனையில் தீவிரமாக இறங்கியிருக்கிறதாம் சின்னத்திரை நடிகர் சங்கம்.!


















