Gold Rate: சற்று உயர்ந்த தங்கம் விலை; இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?
`டி.கே.சிவக்குமார் முதலமைச்சர் ஆகலாம்' - நாற்காலியை விட்டுக்கொடுக்கும் சித்தராமையா? - பின்னணி என்ன?
கர்நாடகாவில் முதலமைச்சர் நாற்காலிக்கான யுத்தம் முடிவுக்கு வருகிறது போலும்.
கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு இடையே அரசல் புரசலாக இருந்து வந்த முதலமைச்சர் நாற்காலிக்கான போட்டி, கடந்த வாரம் வெட்ட வெளிச்சமானது.
'வார்த்தை' மோதல்
டி.கே.சிவக்குமாரோ, "சொன்ன வார்த்தையை காப்பாற்றுவது தான் உலகின் மிகப்பெரிய சக்தி ஆகும்" என்றும், பதிலடியாக, சித்தராமையாவோ, "உலகத்தை மக்களுக்காக மேம்படுத்தாது என்றால் வார்த்தை ஒரு சக்தி இல்லை" என்று எக்ஸ் பக்கத்தில் மோதிக்கொண்டனர்.
இந்த மோதலுக்கு உடனடியாக காங்கிரஸ் மேலிடம் எதிர்வினையாற்றியது. காங்கிரஸ் மேலிடம் இருவரையும் அழைத்து சமாதானமாக போக சொல்லியும், அடுத்து டெல்லியில் எந்த மீட்டிங் நடந்தாலும், அதில் இருவரையும் ஒற்றுமையாக பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது.

சித்தராமையாவின் அழைப்பு
இதையடுத்து, சித்தராமையா, டி.கே.சிவக்குமாரை தனது வீட்டிற்கு உணவருந்த அழைத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று கடந்த சனிக்கிழமை (நவம்பர் 29), டி.கே.சிவக்குமார் சித்தராமையா வீட்டிற்கு சென்றிருந்தார்.
உணவருந்திய பின், இருவரும் செய்தியாளர்களிடம் பேசினார்கள். அப்போது தங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை. இருவரும் ஒன்றாக தான் செயல்படுகிறோம். காங்கிரஸ் மேலிடம் என்ன கூறுகிறதோ, அதை அப்படியே பின்பற்றுவோம் என்று கூறினார்கள்.
மேலும், அந்தச் சந்திப்பு, 2028-ம் ஆண்டு நடக்க உள்ள கர்நாடகா தேர்தலுக்கான மற்றும் உள்ளாட்சி தேர்தலுக்கான சந்திப்பு என்றும் கூறினார்கள்.
டி.கே.சிவக்குமாரின் அழைப்பு
இந்த நிலையில், நேற்று டி.கே.சிவக்குமார் வீட்டிற்கு சென்றுள்ளார் சித்தராமையா. இருவரும் ஒன்றாக உணவருந்தியுள்ளனர்.
இதன் பிறகு, செய்தியாளர்களிடம் பேசும்போது சித்தராமையா, "நானும், சிவக்குமாரும் ஒற்றுமையாக இருக்கிறோம். நாங்கள் ஒன்றாக அரசை நடத்துவோம். எங்களது எம்.எல்.ஏக்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர்.
நாங்கள் ஒரே கட்சியில் இருக்கிறோம். நாங்கள் ஒரே கொள்கையை தான் பின்பற்றுகிறோம். நாங்கள் இணைந்து பணிபுரிவோம்.

எதிர்காலத்திலும், மீண்டும் எங்களது கட்சியை ஆட்சிக்கு கொண்டுவர ஒன்றாக செயல்படுவோம்.
காங்கிரஸ் மேலிடம் குறிப்பாக ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே என்ன கூறுகிறார்களோ, அதை இருவருமே பின்பற்றுவோம்.
அவர்கள் எங்களை டெல்லிக்கு அழைத்தாலும், அங்கே செல்வோம்.
காங்கிரஸ் மேலிடம் சொன்னால் டி.கே.சிவக்குமார் முதலமைச்சர் ஆவார்" என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் தரப்பு என்ன சொல்கிறது?
இருவரின் அடுத்தடுத்த சந்திப்புகள் குறித்து காங்கிரஸ் தரப்பு, "காங்கிரஸ் மேலிடத்தின் பரிந்துரைப்படி, சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரும் இரண்டாவது முறையாக சந்தித்து கொண்டுள்ளனர்.

இருவருக்கும் இடையே உள்ள பிரச்னை சமாதானம் ஆகியுள்ளது.
முதலில் சித்தராமையா அழைப்பு விடுத்தார். அடுத்ததாக, டி.கே சிவக்குமார் அழைப்பு விடுத்தார். இருவருமே அழைப்புகளை ஏற்று பரஸ்பரமாக நடந்துகொண்டுள்ளனர். இது மிக நல்ல முன்னேற்றம் ஆகும்.
இருவருமே காங்கிரஸ் மேலிடம் என்ன சொல்கிறதோ, அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையில் உள்ளனர்" என்று கூறுகின்றது.













