திருவாரூர்: மன்னார்குடியில் தனியார் மருத்துவக் கல்லூரி? - முயற்சியில் பெண் பேராச...
தவெக வைத்த பொறியில் சிக்கியதா திமுக? தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பாஜகவை நெருங்கும் திமுக!
தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில், முதல்வர் விஜய் ஏற்பாடு செய்த அனைத்து கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை திமுகவும் அதிமுகவும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன. இதற்கிடையே, மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் தற்போதைய நிலைப்பாடு அரசியல் ரீதியாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்க தமிழக எம்.பி.க்களுடன் முதல்வர் விஜய் இன்று கூட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், இந்தக் கூட்டத்தில் திமுக மற்றும் அதிமுக பங்கேற்காது என தெரிகிறது.

நியாயமான மறுவரையறை – திமுகவின் புதிய நிலைப்பாடு ?
திமுகவின் நிலைப்பாடு குறித்து பேசிய நேற்று சட்டமன்றத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், இவ்விவகாரத்தில் திமுக தலைவர் ஆலோசித்து முடிவெடுப்பார் என தெரிவித்தார். தென் மாநிலங்களின் தற்போதைய மக்களவைத் தொகுதி பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன், முன்மொழியப்படும் 50 சதவீத தொகுதி அதிகரிப்பு அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியாக அமல்படுத்தப்பட வேண்டும் என்பதும் திமுகவின் கோரிக்கையாக இருப்பதாக தெரிகிறது. மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றாலும், அடுத்த 30 ஆண்டுகளுக்கு தற்போதைய மாநிலங்களின் மக்களவைத் தொகுதி பங்கீடு மாற்றப்படாமல் இருக்க வேண்டும் என திமுக வலியுறுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.
பாஜகவின் ஆதரவை ஏற்கிறதா திமுக ?
இதற்கிடையே, தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுகவின் ஆதரவை பாஜக கோரியதாகவும், ஆனால் மசோதா நியாயமானதாக இருக்க வேண்டும் வெறுமனே தொகுதி மறுவரையறைக்கு எதிரான நிலைப்பாட்டில் திமுக இல்லை என தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதான் தற்போது தமிழக அரசியலில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.
இதுவரை தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய பாஜக அரசின் முயற்சிகளுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்துவந்த திமுக, தற்போது “நியாயமான மறுவரையறை” என்ற நிபந்தனையுடன் அணுகுவது, பாஜகவின் நிலைப்பாட்டை நோக்கி ஒரு அடி நகர்வா ? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

தவெகவின் முயற்சி திமுகவுக்கு அரசியல் நெருக்கடியா ?
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழகத்தின் அனைத்து கட்சிகளையும் ஒரே மேடைக்கு கொண்டு வர முதல்வர் விஜய் முயற்சி எடுத்துள்ள நிலையில், அந்தக் கூட்டத்தில் திமுக பங்கேற்காமல் இருப்பது அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது.
ஒருபுறம், விஜய்யின் கூட்டத்தை புறக்கணிக்கும் திமுக, மறுபுறம் தொகுதி மறுவரையறை தொடர்பாக “நியாயமான மறுவரையறை” என்ற நிலைப்பாட்டை முன்வைப்பது என இருவிதமான அரசியல் நகர்வுகளை மேற்கொள்கிறது. இதனால், “தவெக வைத்த பொறியில் திமுக சிக்கியதா?” என்ற கேள்வியும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
மேலும், விஜய் தலைமையிலான தவெக அரசு, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் எதிர்ப்பை நேரடியாக அரசியல் களத்தில் சவாலுக்கு உட்படுத்த முயல்கிறதா என்ற விவாதமும் உருவாகியுள்ளது. அதே நேரத்தில், திமுக தரப்போ, இது மாநிலத்தை மையப்படுத்திய அரசியல் விவகாரம் என்றும், தமிழகத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதே தங்களின் முதன்மையான நோக்கம் என்றும் தெரிவித்துள்ளது
மேகதாது விவகாரத்தையும் முன்வைக்கும் திமுக
இதனிடையே, விஜய் தொகுதி மறுவரையறைக்கு முன்னுரிமை அளிப்பதற்கு பதிலாக மேகதாது அணை விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை முதலில் கூட்ட வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.
தவெக அரசு, காங்கிரஸுடன் புதிய கூட்டணி வைத்திருப்பதால் மேகதாது விவகாரத்தில் அமைதியாக இருக்கக் கூடாது. தமிழகத்தின் நீர்வள உரிமையை பாதுகாக்க அனைத்து கட்சிகளின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்” என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்

திமுகவின் அடுத்த நகர்வு என்ன?
ஒருபுறம் விஜய் நடத்தும் கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது. மறுபுறம், தொகுதி மறுவரையறையை முழுமையாக நிராகரிக்காமல் “நியாயமான மறுவரையறை” என்ற கோரிக்கையை முன்வைக்கிறது. இதனால், திமுக தனது பழைய கடுமையான பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டை தளர்த்துகிறதா? அல்லது தமிழகத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கும் வகையில் வியூகத்தை வகுக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
குறிப்பாக, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் தற்போதைய அணுகுமுறை, பாஜகவின் மசோதாவை எதிர்ப்பது என்ற நிலையிலிருந்து, நிபந்தனைகளுடன் அணுகுவது என்ற நிலைக்கு நகர்ந்திருப்பது போல் தோன்றுகிறது. ஆனால், இறுதி மசோதா மற்றும் அதில் இடம்பெறும் உத்தரவாதங்களின் அடிப்படையில்தான் திமுகவின் உண்மையான நிலைப்பாடு தெளிவாகும்.
















