``விஜய்யின் தவெக கட்சியில் நான் ஏன் இணைந்தேன்?'' - செங்கோட்டையன் விளக்கம்
`தவெகவில் இணைந்த செங்கோட்டையன்' எடப்பாடி பழனிசாமி, நயினார் ரியாக்ஷன் என்ன?
செங்கோட்டையனுக்கும், அதிமுக-வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது.
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கினார்.

அதன் பிறகு இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாகக் கலந்துகொண்டனர்.
இதனைத்தொடர்ந்து செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியிருந்தார் எடப்பாடி.
அதிமுக-வில் இருந்து எடப்பாடியால் நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெக-வில் இணைய இருக்கிறார் என்று தகவல் வெளியான நிலையில் நேற்று (நவ.26) செங்கோட்டையன் தலைமைச் செயலகம் சென்று சபாநாயகர் அப்பாவுவிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

அதனைத்தொடர்ந்து தவெக தலைவர் விஜய்யை பட்டினப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் செங்கோட்டையன்.
இந்நிலையில் இன்று (நவ. 27) தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்துள்ளார் செங்கோட்டையன்.
தவெகவில் செங்கோட்டையன் இணைந்தது குறித்து இன்று (நவ.27) மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "அவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இல்லை. அதனால் அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என்று கூறியிருக்கிறார்.

அதேபோல செங்கோட்டையன் குறித்துப் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், "செங்கோட்டையன் பின்னால் பாஜக இருக்கிறது என்று சொல்கிறார்கள். அப்படியிருந்தால் அவர் ஏன் தவெகவிற்கு செல்ல வேண்டும். எங்களுடனே இருந்திருக்கலாம் அல்லவா?... செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது பாஜக- அதிமுக கூட்டணிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது" என தெரிவித்திருக்கிறார்.















