செய்திகள் :

திருவாரூர்: இறந்தவர் உடலை கடித்த எலி - அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்தேறிய அவலம்!

post image

திருவாரூர், பிள்ளைத்தெருவில் வசிப்பவர் ராஜ் என்கிற கோவிந்தராஜ்(55). டீ கடையில் மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை டாக்டர் பரிசோதித்த நிலையில் அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.

இந்நிலையில் கோவிந்தராஜ் உறவினர்கள் அவரது உடலை கேட்டுள்ளனர். அப்போது சிகிச்சைக்காக அட்மிட் செய்யப்பட்டவர்கள் இறந்து விட்டால் உடற்கூறாய்வு செய்த பிறகு தான் உடலை தருவோம் என கூறியுள்ளனர்.

பிணவறையில் உடல்

இதையடுத்து, கோவிந்தராஜ் உடல் பிணவறையில் வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இறந்த கோவிந்தராஜ் உடலை வாங்குவதற்கு உறவினர்கள் வந்துள்ளனர். பிணவறையில் கிடத்தப்பட்டிருந்த அவரது உடலில் பல இடங்களில் கடித்து குதறியதற்கான காயங்கள் இருந்ததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து எலி கடித்து குதறியிருப்பது தெரிந்தும் ஆவேசமடைந்தனர்.

கோவிந்தராஜ் உடலில் முகம், தலை உள்ளிட்ட பல இடங்களில் எலும்பு தெரியும் அளவிற்கு எலி கடித்திருக்கிறது. இறந்தவரின் உடலை பாதுகாப்பதில் இவ்வளவு அலட்சியமாக அரசு மருத்துவமனை நிர்வாகம் நடந்து கொள்ளும் என ஆதங்கத்தில் புலம்பினர். இது குறித்து டாக்டர்கள், பிணவறை ஊழியர்களிடம் முறையிட்டும் முறையாக பதில் சொல்லவில்லை. இதனால் அவரது உறவினர்கள் பிணவறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது உறவினர்கள் தரப்பில் கூறியதாவது, `கோவிந்தராஜ் உடலை எலி கடித்திருக்கிறது. இது எங்களுக்கு எவ்வளவு பெரிய மனவேதனையை ஏற்படுத்தும் என்பது தெரிந்தும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமாக நடந்து கொண்டனர். பிணைவறையில் உள்ள குளிரூட்டப்பட்ட பெட்டியில் உடல் வைக்கப்பட்டதாக சொல்கிறார்கள். அந்த பெட்டிக்குள் எப்படி எலி வந்து கடித்திருக்கும் என்பதே எங்களுடைய கேள்வி.

உடலை உடனே தந்திருந்தால் இது நடந்திருக்காது. நாங்களும் நிம்மதியாக உடலை அடக்கம் செய்திருப்போம். இனி இது போன்று யாருக்கும் நடக்க கூடாது. எவ்வித அலட்சியமும் காட்டாமல் நிர்வாகம் செயல்பட வேண்டும்' என்றனர். திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மற்றும் காவல்துறையினர் இறந்தவரின் உறவினர்களை சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.