பெயரே இல்லாத ரயில் நிலையம்; மஞ்சள் பலகை மட்டுமே அடையாளம் - சுவாரஸ்யத் தகவல்
``நம்பினார் கெடுவதில்லை; எடப்பாடி பழனிசாமியை நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை'' - ஆர்.பி. உதயகுமார்
“ஜெயலலிதா இருக்கின்ற வரை அமைச்சராக முடியாமல், அவர் நம்பிக்கையை ஏன் நீங்கள் பெற முடியவில்லைய்? ஜெயலலிதாவிற்கு நீங்கள் செய்த துரோகம் என்ன?” என்று செங்கோட்டையனிடம் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆர். பி. உதயகுமார் பேசி வெளியிட்டுள்ள வீடியோவில், "நம்பினவர் கெடுவதில்லை - இது நான்கு மறைத் தீர்ப்பு என்ற இலக்கணத்தின்படி எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் வாழ்ந்து காட்டி வரலாறு படைத்தார்கள். இந்த இரு பெரும் தலைவர்களின் வழியில் செல்லும் எடப்பாடி பழனிசாமியை நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை என்று வரலாறு படைத்திருக்கிறார்.
செங்கோட்டையன்
ஆனால், அவரை நம்பாமல் கெட்டவர்களுக்கு பொறுப்பேற்க முடியாது. இன்றைக்கு நம்பாமல் கெட்டவர்களின் வரிசையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளார். அமைதி, அடக்கம், அதிர்ந்து பேசாதவர், சிறந்த உழைப்பாளி, நடுநிலை தவறாதவர், கட்சித் தொண்டர் என்ற பொய்யான பிம்பம் இன்றைக்கு உடைந்துவிட்டது.
தற்போது அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும், அவர் ஒரு சுயநலவாதி என்பதையும், அவர் எவ்வாறு துரோக எண்ணத்தில் இருந்துள்ளார் என்பதும் வெள்ளை வெளிச்சமாகி உள்ளது. மொத்தத்தில், அவரது பேச்சால் பூனைக்குட்டி பையில் இருந்து வெளியே வந்துவிட்டது.
எடப்பாடி பழனிசாமியை குறைத்து மதிப்பிட்டவர்கள் தோற்றுப் போன வரலாறுதான் உள்ளது. ஆகவே, எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து, பழி சுமத்தி, எவ்வாறு வன்மம் கொண்டுள்ளார் என்பது அவர் பேச்சில் நமக்கு தெரிகிறது.
இந்த இயக்கத்தின் சாதாரண தொண்டன் என்ற முறையில், நான் அவரிடம் சில கேள்விகளை கேட்கிறேன். ஜெயலலிதா இருக்கின்ற வரை அமைச்சராக முடியாமல், அவர் நம்பிக்கையை ஏன் நீங்கள் பெற முடியவில்லைய்? ஜெயலலிதாவிற்கு நீங்கள் செய்த துரோகம் என்ன? அந்த துரோகத்தை நீங்கள் ஒப்புக்கொள்ளப் போவதில்லை. ஆண்டவனுக்கும் ஜெயலலிதாவுக்கும் தான் நீங்கள் செய்த துரோகம் தெரியும். அந்த துரோகத்தை நீங்கள் மறந்துவிட்டு பேசுவது யாருக்கும் புரியவில்லை.
ஜெயலலிதா மறைவிற்குப் பின் அமைச்சராக பொறுப்பேற்ற உங்களையும், நீங்கள் வகித்த துறையையும் குறித்து அப்போது எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தார்கள். மூத்த அமைச்சர், விசுவாசத் தொண்டன் என்று தம்பட்டம் அடித்த நீங்கள் ஏதாவது பதிலடி கொடுத்தீர்களா?
கடந்த நான்கரை ஆண்டுகளாக சட்டசபை விவாதங்களில் நீங்கள் ஒருமுறையாவது திமுக அரசை குறை கூறியதுண்டா? ஸ்டாலின் அரசு கண்ணியமிக்க அரசாக நடந்து கொண்டது என்று நீங்கள் பாராட்டு பத்திரம் வாசித்தது சட்டசபை பதிவில் உள்ளது.
எதிர்க்கட்சியின் இலக்கணத்தை உடைத்து, தவறான கருத்தை சட்டமன்றத்தில் பதிவு செய்யலாமா? இது கோடிக்கணக்கான தொண்டர்களின் கேள்வியாக உள்ளது.

ஒரு தொண்டன் நாடாள முடியுமா என்ற கேள்விக்கு ஜெயலலிதாவின் ஆட்சியை நடத்தி காட்டினார். மீண்டும் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.
தற்போது 170 தொகுதிகளில் எழுச்சி பயணத்தை நடத்திக் காட்டி உள்ளார். அவர் செல்லுமிடம் எல்லாம் மக்கள் வரவேற்பு அளித்து வருகிறார்கள் இதைப் பார்த்து உங்களுக்கு ஏற்பட்ட பொறாமையின் வெளிப்பாடுதான் ஈரோடுக்கு அவர் வருகை தந்தபோது பங்கேற்க மாட்டேன் என்று வன்மத்தை வெளிப்படுத்தியது.
ஜெயலலிதா இல்லாத மேடையில் பங்கேற்க மாட்டேன் என்று லட்சக்கணக்கான விவசாயிகள் நடத்திய நிகழ்ச்சியை புறக்கணித்த நீங்கள் கலைஞர், ஸ்டாலின் படம் போட்ட மேடையில் எப்படி பங்கேற்றீர்கள்?
உங்களுக்கு மனசாட்சி சுடவில்லையா? நடுநிலை தவறி பேசிய வார்த்தையை எந்த தொண்டரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த துரோக வரிசையில் தான் ஏற்றுக்கொண்ட தலைமை மீது எவ்வளவு பழி சுமத்த முடியுமோ அவ்வளவு பழி சுமத்துகிறீர்கள்.
ஜெயலலிதா இருக்கும்போது தங்கள் அரசியல் அஸ்தமனமாவதற்கு யார் காரணம் என்று ஒப்பாரி வைத்த நீங்கள் இன்றைக்கு அவர்களிடத்தில் அடைக்கலம் ஆகி உள்ளீர்கள். கசாப்பு கடைக்காரிடம் காருண்யம் தேடிச்சென்ற ஆட்டைப் போல் அடைக்கலம் தேடி சென்றுள்ளீர்கள்." என்று பேசியுள்ளார்
















