கும்பகோணம்: `பிரசாரத்தில் ஹோலோகிராம் விஜய்; மக்கள் இயக்க பணி டு அமைச்சர்!' - யார...
நெய் வியாபாரம்; 20 ஆண்டு ரசிகர் மன்ற நிர்வாகி டு அமைச்சர் – யார் இந்த கோவை சம்பத் குமார்?
கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக சம்பத் குமார் பதவி வகித்து வருகிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிட்ட அவர், 92 ஆயிரத்து 500 வாக்குகள் பெற்று, 21 ஆயிரத்து 992 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தி.மு.க. மாநகர மாவட்டச் செயலாளர் துரை செந்தமிழ் செல்வன், பா.ஜ.க. தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகிய பலம் வாய்ந்த வேட்பாளர்களை வீழ்த்தி, சம்பத் குமார் சட்டமன்றத்திற்கு தேர்வானார்.

கோவை கணபதி பகுதியை சேர்ந்த சம்பத் குமார் (47), எம்.பி.ஏ. பட்டதாரி. இவர் அப்பகுதியில் நெய் வியாபாரம் செய்து வருகிறார். விஜய் ரசிகர் மன்றம், விஜய் மக்கள் இயக்கம் ஆகியவற்றில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பொறுப்பில் இருந்த இவர், த.வெ.க-வில் கோவை மாநகர மாவட்டச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
தமிழ்நாட்டில் முதல் முறையாக நடந்த த.வெ.க-வின் மேற்கு மண்டல பூத் முகவர் கூட்டம் கோவையில் வெற்றிகரமாக நடக்க காரணமாக இருந்தவர்களில் இவரும் ஒருவர். தொடர்ந்து கட்சி பணிகளில் ஈடுபட்டு வந்த சம்பத்குமார், கோவை மாவட்ட த.வெ.க. நிர்வாகிகளில் முக்கியமானவராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் விரிவாக்கம் செய்யப்பட்ட த.வெ.க. அமைச்சரவையில் சம்பத்குமாருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. இன்று அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட அவருக்கு, எந்த துறை ஒதுக்கப்படும் என்பது விரைவில் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அவரது ஆதரவாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.














