அகழாய்வு: வெள்ளலூரில் கிடைத்த 'தக்களி'..சங்ககால ஜவுளித் தொழிலின் புதிய தடயமா?
‘பதவி இல்லாதபோதும் அதிமுகவில் இருந்து விலகாதது ஏன்?’ – முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி விளக்கம்
கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம், மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுனன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், புறநகர் மத்திய மாவட்டச் செயலாளருமான செ.ம.வேலுசாமி, “அ.தி.மு.க.என்ற கட்சி ஆலமரத்தை போன்றது. தமிழகத்தை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி அ.தி.மு.கதான். தூய சக்தி என்று கூறிக்கொண்டு த.வெ.க. ஆட்சிக்கு வந்து உள்ள நிலையில், அந்த கட்சியை சேர்ந்த பெண் வழக்கறிஞரே பல லட்ச ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த 13 ஆண்டு காலமாக கட்சியில் பதவியின்றி பல்வேறு அவமானங்களை தான் சந்தித்து வந்த சூழலில், பல கட்சிகளில் இருந்து தனக்கு அமைச்சர் பதவி உட்பட பல்வேறு பதவிகளை தர முன்வந்தனர். பலரும் பணம் கொடுத்து தன்னை அழைத்தபோதும், நான் எந்த கட்சிக்கும் செல்லவில்லை.
எங்கோ இருந்த செங்கத்துறை வேலுசாமியான என்னை சட்டமன்றத்திற்கு அனுப்பியது இந்த கட்சி. தனக்கு அவமானங்கள் ஏற்படும் போதெல்லாம் வேறு எங்காவது சென்று விடலாமா என்று சிந்தித்ததுண்டு. ஆனால் இந்த கரைவேட்டியை பார்க்கும்போது, அந்த எண்ணம் மாறிவிடும். என்னோடு தோழமைகளாக இருந்த உங்களையெல்லாம் விட்டுப் பிரிய மனம் இல்லாததால்தான் இன்று வரை இதே இயக்கத்திலேயே இருக்கிறேன்” என கண்ணீர்மல்க கூறினார். அப்போது பலரும், ”அண்ணா நாங்கள் இருக்கிறோம், அழாதீர்கள்” என ஆறுதல் கூறினர்.

பின்னர் பேசிய அம்மன் அர்ஜுனன், “அ.தி.மு.க-வை தீர்ந்து போன கட்சி என கூறும் முதலமைச்சர் பெட்டியை தூக்கிக்கொண்டும், சோபாவை தூக்கிக் கொண்டும் பணத்துடன் ஆள் பிடிக்க சென்று வருகிறார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின் போது சுனாமி எதுவும் அடிக்கவில்லை. அப்படி அடித்திருந்தால் ஒன்பது மாவட்டங்களில் ஏன் தவெக வெற்றி பெறவில்லை? தேர்தலின் போது எந்த தலைவரும் உழைக்காத அளவிற்கு எடப்பாடி பழனிசாமி தேர்தல் பணியாற்றினார். ஆதரவு கேட்டு கிடைக்காமல் போனதால் தான் முதலமைச்சர் விஜய் எங்கள் கட்சியை உடைக்க பார்க்கிறார். சந்தையில் ஆள் பிடிப்பது போன்று சனிக்கிழமையை பயன்படுத்துகிறார்கள். கட்சிக்காக உழைப்பவன் எப்போதும் இந்த கட்சியில்தான் இருப்பான், ஆதாயத்திற்காக எங்கும் போக மாட்டான். அ.தி.மு.க-வில் இருந்த களை அகற்றப்பட்டது. இனி இந்த இயக்கம் அருமையான இயக்கமாக மக்களுக்கு சேவை செய்யும்” என்றார்.













