'மன்னித்துவிடுங்கள்; தர்மேந்திர பிரதானைக் காப்பாற்றுவதற்காக.!' - அபிஜித் தீப்கே ...
CJP: ``நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் குரல் நாட்டின் தலைநகரிலும் எதிரொலிக்கிறது" - உதயநிதி
நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளானது.
இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசு தேர்வுகள் குளறுபடி தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தைத் தொடங்கினர்.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்த சமூக ஆர்வலர் சோனம் வான்சுக் 21 நாள்களைக் கடந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரை காவல்துறை வலுகட்டாயமாக அப்புறப்படுத்தி மருத்துவமனையில் அனுமதித்தது.
அதைத் தொடர்ந்து சிஜேபி அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அபிஜித் திப்கே உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.
ஆனால் இதுவரை மத்திய அரசு தரப்பிலிருந்து யாரும் போராட்டக்காரர்களிடம் பேசவே இல்லை. இதற்கிடையில் இன்று நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியது. அதையொட்டி, நாடாளுமன்றத்தை நோக்கி சிஜேபி போராட்டக் குழுவினர் அமைதிப் பேரணியை நடத்தினர்.
அப்போது இணையதளம் துண்டிக்கப்பட்டது. மேலும், போராட்டக்காரர்களைக் கலைக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி காவல்துறை கண்ணீர் புகைகுண்டு, தடியடி உள்ளிட்ட தாக்குதல்களைத் தொடங்கியது.
இதில், பெண்கள், கல்லூரி மாணவர்கள் பலர் காயமடைந்தனர். இதற்கிடையில், சிஜேபி குழுவினர் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கியிருக்கின்றனர்.
ஜே.பி.நட்டாவும் போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அதே நேரம், மத்திய அமைச்சர் எங்கள் கோரிக்கை குறித்து எந்த உத்தரவாதத்தையும் கொடுக்கவில்லை என்பதால், எங்கள் போராட்டம் அமைதிவழியில் தொடரும் என சிஜேபி தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து, காவல்துறை போராட்டக்காரர்களை அந்தப் பகுதியிலிருந்து அப்புறப்படுத்த தாக்குதல் நடத்துவதாக தகவல்கள் கிடைக்கின்றன. இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி, விவாதமாகிவருகின்றன.
இது தொடர்பாக தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``நீட் தேர்வில் நடந்துள்ள முறைகேடுகளுக்கு எதிராக அமைதியான முறையில் பேரணியில் ஈடுபட்ட சிஜேபி (CJP) இளைஞர்கள் மீது காவல்துறை நடத்திய அடாவடித்தனத்தை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன்.

டெல்லியில் இருந்து வரும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன. இளைஞர்களின் கவலைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, அரசு தனது காவல் படையைக் கொண்டு பதிலளித்து வருகிறது. இது ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதது.
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இன்று நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் குரல், நாட்டின் தலைநகர் உட்பட தேசம் முழுவதிலும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. நாட்டின் இளைஞர்களின் கோரிக்கை தெளிவாக உள்ளது. அவர்களுக்குச் செவிசாயுங்கள்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.












