Quote of the day: 'நம்பிக்கையே முதல் வெற்றி!' - அமெரிக்க முன்னாள் அதிபர் சொல்வதை...
பவானி: பிறந்து 14 மணிநேரத்தில் குழந்தையைக் கொன்ற பாட்டி; அதிர்ச்சிப் பின்னணி என்ன?
ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த 25 வயது பிரியதர்ஷினி என்ற பெண்ணிற்கு தனியார் மருத்துவமனையில் கடந்த 18-ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஆரோக்கியமாகக் காணப்பட்ட அந்தக் குழந்தை அடுத்த 14 மணிநேரத்தில் இறந்திருக்கிறது. குழந்தையின் உடலில் காயங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூறாய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பதை உறுதி செய்துள்ளனர்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பிரியதர்ஷினியின் தாய் தங்கமணி என்பவர் பேரக்குழந்தையைக் கொலை செய்ததைக் கண்டறிந்து கைது செய்துள்ளனர்.

பின்னணி குறித்து தெரிவித்த காவல்துறையினர், "குழந்தையைப் பெற்றெடுத்த பிரியதர்ஷினிக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. பிரியதர்ஷினியின் கணவர் செல்வக்குமார் மதுவுக்கு அடிமையாகி குடும்பத்தை முறையாகக் கவனிக்காமல் இருந்து வந்திருக்கிறார்.
இரண்டாவதாகப் பிறந்த இந்தப் பெண் குழந்தையையும் வைத்துக்கொண்டு முறையாக வளர்க்க முடியாமல் தன்னுடைய மகள் சிரமப்பட வேண்டியிருக்கும் என்ற கவலைப்பட்டுக் கொண்டிருந்த பிரியதர்ஷினியின் தாய் தங்கமணி, யாருக்கும் தெரியாமல் குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார். அவர்மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.
மதுவுக்கு அடிமையான மருமகனால் பெண் குழந்தையை வளர்க்க முடியாது எனப் பாட்டியே கொலை செய்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.













