செய்திகள் :

'தோலை உரிப்பேன், எலும்பை உடைப்பேன்' - முதல்வரை 'இறங்கி' அட்டாக் செய்வதன் பின்னணியும் பின்விளைவும்

post image

'சட்டசபைக் கதவை மூடிப் பார், உன் எலும்பை உடைக்கிறோம்' என முதல்வர் விஜய்யைக் குறிப்பிட்டு மேடையில் முழங்கி (?) கைதாகியிருக்கிறார் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்.

திமுகவில் ஏற்கனவே வெற்றிகொண்டான் இடத்தை நிரப்ப வந்த அவரது மகன், சிவாஜி கிருஷ்ண மூர்த்தி என இறங்கிப் பேசும் ஆட்கள் எத்தனையோ பேர் இருக்கிற சூழலில் அனிதா ராதாகிருஷ்ணனைத் தொடர்ந்து இப்போது இவரும் கிளம்பியிருக்கிறார் போல.

அதிமுகவிலோ 'அவனை அன்னைக்கே உரிச்சிருக்கணும்' எனப் பேசிய ஆர்.பி.உதயகுமாரும் சகட்டுமேனிக்குப் பேசி வருகிறார். இப்படிப் பேசும் இன்னும் சிலரும் கூட இந்தக் கட்சியிலும் இருக்கிறார்கள்

திமுக, அதிமுகவால் தவெகவின் வெற்றியை இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. மேல்மட்டத்தில் மேற்படி கட்சிகளின் தலைவர்களே 'மூணு மாசத்துல முடிஞ்சிடும்', 'ஆறு மாசத்துல ஆட்சி மாறுது' எனப் பேசி வருவதால் கீழ் மட்டத்தில் இப்படிக் கீழிறங்கி பேசத் தொடங்கி விடுகின்றனர்.

'தரைமட்டத்துக்கு இறங்கிப் பேசுங்க, அப்பதான் அவங்களும் பதிலுக்கு வருவாங்க, அதை வச்சு சட்டம் ஒழுங்கு பிரச்னை உருவாகும்' எனக் கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்டா எனத் தெரியவில்லை.

முதல்வர் விஜய்யைப் பேசினால் 'கவனிக்கப்படுவோம்' என்கிற விளம்பர உத்தியாகக் கூட இருக்கலாமென்கின்றனர் சிலர்.

மார்க்கண்டேயன்
மார்க்கண்டேயன்

ஆனால் இந்தப் பேச்சுகள் என்ன விளைவை ஏற்படுத்துமென பேசுபவர்கள் யோசிப்பதில்லை.

ஏற்கனவே 'நீங்க ரெண்டு பேரும் ஆண்டது போதும்' என்றுதான் புதிதாக வந்த அந்தக் கட்சிக்கு 107 சீட்டுகளைக் கொடுத்திருக்கிறார்கள் தமிழக மக்கள். பெரும்பான்மைக்குச் சில உறுப்பினர்களே போதுமென்கிற சூழலில் அந்த ஆதரவையும் பெற்றே ஆட்சி அமைத்திருக்கிறார் விஜய். 14 பேர் தற்போது தவெக அரசுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.

இந்தச் சூழலில் ஆட்சி கவிழ வாய்ப்பே இல்லையென்பது அரசியலை ஓரளவுக்குத் தெரிந்தவர்களுக்கே புரியும். அப்படியிருக்க 'புலி வருது, புலி வருது' என 'ஆட்சி கவிழுது' டயலாக்கைப் பேசிக் கொண்டிருப்பது மக்களிடம் எரிச்சலை உண்டாக்காதா எனச் சிந்திப்பதில்லை.

தமிழக வாக்காளர்கள் எப்போதும் அமைதியாகக் கவனித்தபடியே தாங்கள் விரும்பும் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தவல்லவர்கள். 96 தேர்தலில் ஜெயலலிதா ஆட்சி முடிவுக்கு வந்தபோது 'இனி அதிமுகவே அவ்வளவுதான்' எனக் கொக்கரித்தது திமுக.

அடுத்த தேர்தலிலேயே அந்த எண்ணத்தைத் தவிடு பொடியாக்கி ஜெயலலிதாவை ஆட்சியில் அமர்த்தினர். அதேபோலத்தான் நடந்து முடிந்த தேர்தலிலும் அபரிமிதமான நம்பிக்கையிலிருந்த ஸ்டாலினை சொந்த தொகுதியிலேயே தோற்கடித்தனர்.

rb udhayakumar
rb udhayakumar

எனவே ஆட்சியாளர்களின் செயல்பாடுகளைக் கவனித்தே வருகிற மக்கள் அவர்கள் தவறு செய்தால் பார்த்துக் கொள்வார்கள்.

அப்படியெனில் எதிர்க்கட்சிகள் எப்படிச் செயல்படுவது என்கிறீர்களா? 'எனக்கு பணம் தேவையில்லை' என முதல்வர் சொல்லலாம். அரசியலுக்குப் புதியவர்களான அவரது ஆட்கள் எல்லாரும் அப்படியே இருப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அதிலும் பிற கட்சிகளில் சீட் மறுக்கப்பட்ட நிலையில் கடைசி நிமிடத்தில் இங்கு வந்து சீட் வாங்கி ஜெயித்தவர்களையெல்லாம் மக்கள் சேவைக்காக மட்டுமே அரசியலுக்கு வந்தவர்கள் என எப்படி நாம் நம்புவது? இது போன்றவ‌ர்களைக் கண்காணிக்கலாம்.

தவிர, 'இவர்கள் புதியவர்கள்' என்கிற நினைப்பில் மத்திய அரசு தான் நினைத்ததையெல்லாம் தமிழகத்தில் அமல்படுத்த துடித்தால், அப்போது இந்த ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள் எனக் கண்காணிக்கலாம்.

மாற்றுக் கட்சிகளிலிருந்து ஆள் பிடிக்கும் வேலைகளில் ஆளுங்கட்சியினர் ஈடுபட்டால், பின்னணியில் பணம், பதவி போன்ற ஆசை வாக்குறுதிகள் இருந்தால் வெளிக்கொண்டு வரலாம்.

இந்த வேலைகளைத் தவிர மேக்கேதாது உள்ளிட்ட பல பிரச்னைகள், தொகுதிகள், மாவட்டங்களின் தேவைகள் எனப் பேசுவதற்கு அரசியல் செய்வதற்கு ஆயிரம் உண்டு இங்கு. ஆக்கபூர்வ எதிர்க்கட்சியாக அவற்றில் கவனம் செலுத்தலாம்.

மேலும் உள்கட்சி அளவில் தோல்விக்கான காரணங்களைச் சரி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

திமுக அதிமுக தலமைக்கு இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்ட வேண்டியது நம் கடமை. கட்சியினரின் தரம் தாழ்ந்த பேச்சுகளைத் தயவு செய்து அனுமதிக்காதீர்கள். அது உங்களுக்கு நீங்களே வைத்துக் கொள்ளும் ஆப்பு.

Vijay - CM Stalin
Vijay - CM Stalin

அதேபோல உள்ளாட்சி மன்றங்களில் சமீபமாக முதல்வர் புகைப்படம் வைப்பதில் ஆங்காங்கே பிரச்னை. உள்ளாட்சி அலுவலகங்கள் அரசு அலுவலகங்கள் என்கிற வகையில் முதல்வரின் புகைப்படம் வைப்பது சட்டபூர்வமான ஒரு நடவடிக்கையே. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உங்கள் எல்லாருக்கும் சேர்த்தே அவர்தான் இந்த மாநிலத்தின் முதலமைச்சர்.

அந்த அடிப்படையில்தான் கடந்த காலங்களில் உங்களது புகைப்படங்களை அங்கு வென்ற உங்களது கட்சியினர் வைத்தனர். இப்போது ஆட்சி மாறி புதிய முதல்வர் வந்ததும் அவருடைய புகைப்படம் பொருத்துவதே சரியான நடைமுறை.

அங்கங்கே உள்ளாட்சி அமைப்புகளில் இருக்கும் திமுகவினர், அதிமுகவினர் முதல்வர் விஜய் புகைப்படம் வைப்பதை எதிர்ப்பது சரியல்ல. நீங்கள்தான் அவர்களுக்கு எடுத்துச் சொல்லி அப்படிச் செய்வதைத் தடுக்க வேண்டும்.

Edappadi Palanisamy - Vijay
Edappadi Palanisamy - Vijay

திமுகவினர் பதவிகளில் இருக்கும் சில இடங்களில் விஜய் படம் வைக்கப்பட்டால் போட்டியாக மு.க. ஸ்டாலின் படமும், அதிமுகவினர் இருக்கும் இடங்களில் எடப்படி பழனிசாமி புகைப்படத்தை மாட்டுவதும் கேலிக் கூத்துகளே. இதையெல்லாம் தயவுசெய்து விட்டுவிடுங்கள்.

'மன்னித்துவிடுங்கள்; தர்மேந்திர பிரதானைக் காப்பாற்றுவதற்காக.!' - அபிஜித் தீப்கே வேதனை

நேற்று டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தினர் காக்ரோச் ஜனதா கட்சி. தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதே அவர்களது முக்கிய க... மேலும் பார்க்க

CJP பேச்சுவார்த்தைக்கு ஜே.பி.நட்டாவை `டிக்' செய்தது ஏன்? பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?

நீட், க்யூட் தேர்வுகள் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கிட்டத்தட்ட ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகிறது காக்ரோச் ஜனதா கட்சி. நேற்று இந்தப... மேலும் பார்க்க

`யாருக்கும் தெரியாமல் எங்காவது போய் அமைதியாக இருக்க விரும்புகிறேன்; பிறந்தநாள் விழா வேண்டாம்' - வைகோ

கட்சிக்காரர்கள் தனக்குத் தெரியாமல் தனது பிறந்த நாள் விழாவை ஏற்பாடு செய்து வருகிறார்கள். அவர்களுக்குப் பொருட்செலவு வைக்க விரும்பாததால் இந்தாண்டு பிறந்த நாளுக்கு ஏற்பாடு செய்திருந்த விழாவை ரத்து செய்வதா... மேலும் பார்க்க

'அமெரிக்காவிடம் பாகுபாடு' - சிறப்பு அதிகாரத்தின் கீழ், கனடா மீது 50% வரி விதித்த ட்ரம்ப்!

சில கனடா பொருள்கள் மீது 50 சதவிகித வரியை விதித்து உத்தரவிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். கனடா மீது அமெரிக்கா சொல்லும் குற்றச்சாட்டு என்ன?கனடா நாடு, அமெரிக்காவின் மோட்டார் வாகனங்கள் மற்றும் வாகன பா... மேலும் பார்க்க

நட்டா உடன் CJP சந்திப்பு; அமித் ஷாவை சந்தித்த தர்மேந்திர பிரதான்! நடந்தது என்ன?

போராட்டம் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, காக்ரோச் ஜனதா கட்சி நேற்று (ஜூலை 20) நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி சென்றனர். நேற்று தான் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வேறு தொடங்கியது. நாடாளு... மேலும் பார்க்க