'மன்னித்துவிடுங்கள்; தர்மேந்திர பிரதானைக் காப்பாற்றுவதற்காக.!' - அபிஜித் தீப்கே ...
CJP: ``நாடாளுமன்றத்தில் இணையம் துண்டிப்பு; ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஒத்திவைப்பு" - சு. வெங்கடேசன்
நீட் வினாத்தாள் கசிவு, அரசுத் தேர்வுகளில் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என சிஜேபி அமைப்பு டெல்லியில் போராட்டத்தை முன்னெடுத்தது.
இந்தப் போராட்டத்தைக் கலைக்க மத்திய அரசு காவல்துறையை ஏவி பெரும் அடக்குமுறையைக் கையாண்டிருக்கிறது.
இந்த நிலையில், மதுரை எம்.பி.சு வெங்கடேசன் தன் எக்ஸ் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``நீட் தேர்வு ரத்து, புதிய கல்விக்கொள்கை ரத்து, தர்மேந்திர பிரதான் ராஜினா உள்ளிட்ட கோரிக்கைகளுடன் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றனர். அதன் ஒரு பகுதியாக நாடாளுமன்றத்தை நோக்கி பேராணியை முன்னெடுத்தனர்.
அதே நேரம், இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற அவையில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் குழு அவை ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகரிடம் வழங்கினோம். ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவையின் மையத்தில் போராட்டத்தை நடத்தினோம்.
அதைத் தொடர்ந்து அவை 30 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது. வழக்கமாக அவை ஒத்திவைப்பு என்பது 1 மணி நேரம் அதற்கு மேலான நேரமாகத்தான் ஒத்திவைக்கப்படும். ஆனால் இன்று ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
அதற்கான காரணம் அப்போது எங்களுக்கு விளங்கவில்லை. இந்த இடைப்பட்ட நேரத்தில் எங்களின் இணையம் வசதி துண்டிக்கப்பட்டது. வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களை இயக்க முடியவில்லை. அதேநேரம் வெளியே போராடும் மாணவர்களை உள்ளே இருக்கும் நாங்கள் சந்தித்துவிடக் கூடாது என்ற காரணத்தால்தான் இப்படி ஒவ்வொரு 30 நிமிடமாக அவை ஒத்திவைத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டோம்.
இறுதியில் அவை நிறைவுற்ற பிறகுதான் வெளியே பா.ஜ.க அரசு நடத்திய அடக்குமுறை குறித்து அறிந்தோம். மாணவர்களின் கேள்வியை அடக்குமுறையால் ஒழித்துவிடலாம் என இந்த மோடி அரசு நினைக்கிறது. ஆனால் கேள்விகள் மேலும், மேலும் எழுந்துகொண்டேதான் இருக்கும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
ராகுல் காந்தி தன் எக்ஸ் பக்கத்தில், ``பிரதமர் மோடி இந்தியாவின் வரலாற்றிலேயே இளைஞர்களுக்கு மிகவும் எதிரான ஒரு பிரதமர்—எவ்வளவு எதிரானவர் என்றால், தோல்வியடைந்த கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவைக் கூட அவரால் கோர முடியவில்லை. 152 வினாத்தாள் கசிவுகள். 7.5 கோடி மாணவர்கள் பாதிப்பு. ஆனால் குற்றவாளி ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை. தண்டனை யாருக்குக் கிடைத்தது? உழைப்பாளி இளைஞர்களுக்குத்தான்.
இந்தக் குழந்தைகள் கல்வியைக் குறித்து நியாயமான கேள்விகளை எழுப்பியபோது அவர்களுக்குக் கிடைத்த பதில் லத்தி அடியும் கைதும்தான். வினாத்தாளைக் கசியவிட்ட குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் ஆனால் நியாயமான கேள்விகளை எழுப்பும் மாணவர்கள் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு, அடிக்கப்படுகிறார்கள். இந்த அரசு இளைஞர்களை வீழ்த்துவது மட்டுமல்ல அவர்கள் மீது பாய்ந்து தாக்குகிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.












