சென்னையில் பறவைக் காய்ச்சல்: `சிக்கன் பிரியர்களே உஷார்' - எது பாதுகாப்பு? மருத்த...
பழுது பார்த்து கொடுக்க மறுப்பு: ரூ.2.50 லட்சத்துக்கு வாங்கிய எலக்ட்ரிக் ஆட்டோவை தீவைத்த பெண்
இப்போது பேட்டரியில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. ஆனால் இது போன்ற எலக்ட்ரிக் வாகனங்களில் பழுது ஏற்பட்டால் அதனை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சரியாக பழுதுபார்த்து கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சிவ்புரி என்ற இடத்தில் வசிக்கும் குடியா என்ற பெண் ஆறு மாதத்திற்கு முன்பு இ-ஆட்டோரிக்ஷா ஒன்றை விலைக்கு வாங்கினார். ஆனால் வாங்கிய இரண்டு மாதத்தில் இருந்து சரியாக இயங்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து குடியா கூறுகையில், ''நானும், எனது கணவரும் கூலி வேலை செய்து வந்தோம்.
கடந்த 6 மாதத்திற்கு முன்பு கடன் வாங்கி ரூ.2.50 லட்சத்தில் இ-ஆட்டோ ரிக்ஷா ஒன்றை விலைக்கு வாங்கினோம். ஆனால் இரண்டு மாதம் கூட சரியாக ஓடவில்லை. கடந்த 4 மாதங்களாக நாங்கள் இ-ரிக்ஷாவுடன் அதனை வாங்கிய ஏஜென்சி அலுவலகத்திற்கு வந்து கொண்டிருக்கிறோம். பழுதுபார்த்து கொடுக்கும்படி கெஞ்சுகிறோம். ஆனால் அவர்கள் எங்களை விரட்டியடிக்கின்றனர். இதனால் ஆட்டோ எங்களது வீட்டில் வெறுமனே நின்று கொண்டிருக்கிறது. நாங்கள் மீண்டும் கூலி வேலைக்கு செல்கிறோம்.

ஆட்டோவிற்கு வாங்கிய கடனுக்கு ஒவ்வொரு மாதமும் பணம் கட்டிக்கொண்டிருக்கிறோம்''என்றார். வழக்கம்போல் ஆட்டோ ரிக்ஷாவுடன் அதனை வாங்கிய கடைக்கு குடியா சென்றபோது அதனை பழுதுபார்க்க முடியாது என்று அங்கு இருந்தவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். இதையடுத்து அப்பெண் கோபத்தில் அந்த கடைக்கு வெளியில் தனது ஆட்டோவை நிறுத்தி அதற்கு தீவைத்துவிட்டார். இது குறித்து கேள்விப்பட்டதும் போலீஸார் வந்து தீயை அணைந்து ஆட்டோவையும், அப்பெண்ணையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
ஏஜென்சி நிர்வாகம் ஆட்டோவை முழுமையாக பழுதுபார்த்து கொடுக்கவேண்டும். இல்லாவிடில் தான் கட்டிய முழு பணத்தையும் திரும்ப கொடுக்கவேண்டும் என்று குடியா குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ஆட்டோ ரிக்ஷாவை விற்பனை செய்த ஏஜென்சி பொறுப்பாளர் சுபம் கூறுகையில்,''வண்டியில் எந்த பிரச்னையும் இல்லை. பேட்டரி வெடித்துவிட்டது. பேட்டரிக்கு கம்பெனி பொறுப்பு கிடையாது. பேட்டரியை வாடிக்கையாளர்தான் சொந்த பணத்தில் மாற்றிக்கொள்ள வேண்டும். குடியாவிடம் பேட்டரியை மாற்றும்படி கூறினோம். ஆனால் அவர் மறுத்து வருகிறார்'' என்றார்.

















