திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் நடந்த இந்திய அளவிலான A கிரேட் கபடிப்போட்டி...
பாமக: ``என்னை 20 - 30 துண்டுகளாக கூட வெட்டி வீசியிருக்கலாம்" - மேடையில் கண்ணீர்விட்ட ராமதாஸ்
பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கும் அவரின் மகன் அன்புமணிக்கும் இடையே மோதல்போக்கு நீடித்து வருகிறது. இதற்கிடையில், சேலத்தில் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் இன்று (டிச. 29) காலை தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க தலைவராக இருந்த அன்புமணியின் பதவிக்காலம் மே 29-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டதாகவும், அதனால், பா.ம.க-வின் தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் கூட்டணியை முடிவு செய்யவும் தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யவும் ராமதாஸுக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து, பாமகவின் ஜி.கே. மணியை கட்சியில் இருந்து நீக்குவதாகக் கூறிய அன்புமணிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் பாமக செயல்தலைவராக ஶ்ரீகாந்தியும், கௌரவத் தலைவராக ஜிகே மணியும், பொதுச்செயலராக முரளிசங்கரும் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.
இந்தப் பொதுகூட்டத்தில் உரையாற்றிய ராமதாஸ்,``இந்த நேரத்திலே எதைப் பேசி எதை விடுவது என்று எனக்குள்ளே ஒரு குழப்பம். எனக்கு இருக்கின்ற ஆதங்கத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஒரு மணி நேரம் தேவை. தேர்தலில் எந்தக் கூட்டணி என்பதில் உங்களுக்கு சந்தேகம் இருக்கலாம். வெற்றிக்கூட்டணி அமைப்போம் என்பதில் சந்தேகம் வேண்டாம். நான் வளர்த்து, பொறுப்பு கொடுத்த பிள்ளைகள் தான் என்னை இப்போது மிகக் கேவலமாகத் தூற்றுகிறார்கள்.

ஒரு பையன் 'என் கழுத்துல துணி போட்டு இறுக்கிக் கொல்லவேண்டும்' என ஒரு பதிவு போடுறான். அந்த பதிவு போட்ட உடனே கூப்பிட்டு அவனுக்கு பொறுப்பு கொடுக்கிறார். இதுபற்றி கனவில் வந்த என் தயாரிடம் முறையிட்டேன். என் தாய் 'அதுக்கு நான் என்னப்பா பண்ண முடியும். நீ அப்படி வளர்த்துருக்க' என்றார். நானும் ஆமாம்... நான் சரியாக வளர்க்கவில்லை. அப்படி சரியாக வளர்த்திருந்தால் என்னை மார்லேயும், முதுகுலயும் ஈட்டியால குத்தற மாதிரி குத்தியிருக்கமாட்டான்.
ஒரு தகப்பன் உலகத்தில தன் பிள்ளைக்கு என்ன செய்வானோ அதைவிட அதிகமாக நான் அவனுக்கு செய்திருக்கிறேன். ஆனாலும் அவன் நான் எப்போது... எப்பூது.... என எதிர்பார்க்கிறான். ஒரு ஆண்டுக்கு முன்னால் சென்னையிலே ஒரு குடும்பத்திலே சொத்து தகராறு காரணமாக தகப்பனை 20, 30 துண்டுகளாக வெட்டி ஒரு சாக்கில் கட்டி காவேரிப்பாக்கம் என்ற ஊரிலே போட்டுவிட்டதாக வந்த செய்தியைப் படித்திருக்கலாம். அப்படி செய்திருந்தால்கூட நான் போய் சேர்ந்திருப்பேன்.

30 ஆண்டு காலம் இந்தக் கட்சிக்கு, மக்களுக்கு உழைத்த ஜேகே மணியை தரக்குறைவாகப் பேசுகிறார்கள். அதையே என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இப்போது என்னை நேரடியாகத் தாக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
நூற்றுக்கு 95 விழுக்காடு பாட்டாளி மக்கள் என் பின்னாலேதான் இருக்கிறார்கள். அன்புமணி பின்னாலே 5 சதவிகித மக்கள்கூட இல்லை. ஆனால் கோடிக்கணக்கிலே செலவு செய்து கூட்டத்தைக் கூட்டி பம்மாத்து வேலை செய்கிறார்.
அவருக்கு இந்தத் தேர்தல் சரியான பதிலைக் கொடுக்கும். அந்த வகையிலே இந்தத் தேர்தலில் ஒரு நல்ல கூட்டணி வெற்றியைத் தரும். இதுவரை நான் ஆசைப்பட்டிருந்தால் எல்லா பதவிகளையும் அடைந்திருப்பேன். ஆனால் நான் அன்று செய்த அந்த சத்தியத்தை இன்றுவரை காப்பாற்றுகிறேன். இதற்கெல்லாம் காலம் பதில் சொல்லும். இந்தப் பொதுக்குழு கூட்டத்துக்கு வந்த நீங்கள் பத்திரமாக வீடு திரும்பவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.















