இரண்டே நாள்கள்தான் டைம்; ஆதார்-பான் இணைந்திருக்கிறதா? வெறும் 4 ஸ்டெப்களில் தெரிந...
பாமக: "ஐயா ராமதாஸ் இல்லாத பாமக பிணத்துக்குச் சமம்" - ஸ்ரீகாந்தி காட்டம்
பா.ம.க கட்சியில் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரின் மகன் அன்புமணிக்கும் இடையே மோதல்போக்கு நீடித்து வருகிறது. இதற்கிடையில், சேலத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் இன்று (டிச. 29) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில், பா.ம.க தலைவராக இருந்த அன்புமணியின் பதவிக்காலம் மே 29-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டதாகவும், அதனால், பா.ம.க-வின் தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் தேர்தல் கூட்டணியை முடிவு செய்யவும், தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யவும் ராமதாஸுக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து, பாமகவின் ஜி.கே. மணியை கட்சியில் இருந்து நீக்குவதாகக் கூறிய அன்புமணிக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் பாமக செயல்தலைவராக ஶ்ரீகாந்தியும், கௌரவத் தலைவராக ஜிகே மணியும், பொதுச்செயலராக முரளிசங்கரும் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.
இந்தப் பொதுகூட்டத்தில் ஶ்ரீகாந்தி உரையாற்றினார். அப்போது, ``இவ்வளவு தூரம் நாம் பயணித்து வந்திருப்பது பணத்துக்காவோ, பதவிக்காகவோ, அல்லது சில கும்பல் போல நாடகம் ஆடவோ அல்ல. நம் சமூகத்திற்காக இத்தனை ஆண்டுகள் போராடிய நன்றி உணர்ச்சி.
இப்போது ஒரு மகளாக, வன்னிய குல தமிழச்சியாக நியாயம் கேட்க வந்திருக்கிறேன். இன்று காலை அப்பாவின் முகத்தைப் பார்த்தேன்.
40 ஆண்டுகாலம் அரசியலில் கோலோச்சியவரின் கண்ணில் வலி தெரிந்தது. தான் பெற்று, மாரோடு அரவணைத்து வளர்த்த மகன் முதுகில் குத்திய வலி அது. ஐயாவை அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்தி, கேவலப்படுத்திப் பேசுகிறார்கள். ஐயாவின் கட்சியை அவரிடமிருந்தே பிடுங்குகிறார்கள். இதற்கு மேலும் நாம் பொறுமையாக இருக்க முடியாது.

ஐயாவை கேள்வி கேட்க நீ யார்? உனக்கு என்ன தகுதி இருக்கிறது. நீ இப்போது காரில் கோர்ட் போட்டுக்கொண்டு ஊர் சுற்றுகிறாயே அது என்ன உன் உழைப்பா? நீ படித்து வாங்கின டாக்டர் பட்டம், எம்.பி பதவி, அமைச்சர் பதவி இதெல்லாம் நீ உழைச்சு வாங்குனதா...
இது ஐயா உங்களுக்குப் போட்ட பிச்சை. ஐயா இல்லாத பா.ம.க பிணத்துக்கு சமம். அந்தப் பிணத்தை வச்சு அரசியல் பண்ணலாம்னு அன்புமணி டீம் நினைக்கிறது. ஆனால் இந்த ஸ்ரீகாந்தி உயிரோடு இருக்கும் வரை அது நடக்கவே நடக்காது" என ஆவேசமாகப் பேசினார்.















